Wednesday 30 May 2012

இலையுதிர் காலம்

1997ம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதிய பம்பாயின் நேருல் பகுதியில் வசித்து வந்தேன். அப்போதெல்லாம் புதிய பம்பாயில் சி.பி.எஸ்.ஈ. பள்ளி ஒன்று தான் இருந்தது. (இப்போது நிறைய பள்ளிகள் வந்து விட்டன.) அந்த பள்ளியில் பிள்ளைகளை சேற்க உண்மையிலேயே பயங்கர போட்டா போட்டி இருந்தது. எனது பெண்ணை அந்த பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்க்கலாம் என்று நானும் எனது மனைவியும் எண்ணினோம்.


பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் "அந்த பள்ளியில் வெறும் 150 விண்ணப்ப படிவங்கள் தான் கொடுப்பார்கள். அதனால் நீங்கள் சீக்கிரமே போய் வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறினார். "சீக்கிரம்" என்றால், 9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு ஒரு 8 மணிக்கே சென்று வரிசையில் நின்றால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

கடையில் ஏதோ வாங்குவதற்காக அந்த வழியாக முந்தைய நாள் மாலை போக வேண்டி இருந்தது. அங்கு பார்த்தால் பள்ளியின் வாசலில் ஒரு பத்து பேர் இருந்தார்கள். என்ன விஷயம் என்று விசாரித்தால், "நாளை காலை விண்ணப்ப படிவம் கொடுக்கிறார்கள் இல்லையா, உங்களுக்கு விஷயமே தெரியாதா?" என்று கேட்டார்கள். அப்போது மாலை 5.30 மணி!


அடப்பாவிகளா, ஒரு எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு இவ்வளவு போட்டியா? உடனடியாக வீட்டுக்கு வந்து அவசரம் அவசரமாக காபியை குடித்து விட்டு எனது மனைவியிடம், "நான் போய் கியூவில் நிற்கிறேன். இரவு உணவை சமைத்த பின் நீ வந்து எனது இடத்தை பிடித்துக்கொள். நான் சாப்பிட்டு விட்டு வந்து உன்னை வீட்டுக்கு அனுப்புகிறேன்" என்று கூறி விட்டு கையில் ஒரு செய்தி தாளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். நான் போய் சேர்வதற்குள் அந்த வரிசையில் ஒரு 25 பேர் எனக்கு முன் நின்று கொண்டிருந்தார்கள்.

இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை நான் பார்த்திருக்கவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள். என்ன செய்வது, எப்படியாவது குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டுமே!


நேரம் செல்ல செல்ல, வரிசையில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பெரிய டாக்டர்கள், வக்கீல்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். அந்த பள்ளியில் பணம் எதுவும் வாங்குவது கிடையாதாம். அதனாலேயே அதற்கு மவுசு அதிகமாகி விட்டது. ஒரு எட்டு மணி இருக்கும். பக்கத்தில் திடீர் 'பாவ் பாஜி' கடைகள் ஆரம்பித்து விட்டன. வேர்க்கடலை, பட்டாணி முதல் ஜரூராக வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது. சிறிது நேரத்தில் எனது மனைவி அங்கு வந்தவுடன், நான் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, ஒரு கொசுவர்த்தி சுருளையும் கொண்டு வந்தேன். இன்று இரவு சிவராத்திரிதான்!


நேரம் ஆக ஆக தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. வரிசையில் உள்ளவர்கள் ஜோக் அடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டு பொழுதை கழித்தனர். கையில் கொண்டு சென்ற செய்தித்தாளை பிளாட்பாரத்தில் விரித்துக்கொண்டு எனது கட்டையை நான் விரித்தேன். பொறியாளனையும் பிளாட்பாரத்தில் படுக்க வைத்த மாபெரும் சமத்துவபுரம் இந்த அனுபவம்!

ம‌றுநாள் காலையில் ப‌ள்ளி திற‌ந்த‌வுட‌ன் வெற்றிக‌ர‌மாக‌ விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌த்தை வாங்கினேன். என்னவோ எவரெஸ்ட் சிகரத்தை எட்டியது போன்ற உணர்வு!

ஒரு வாரம் கழிந்த பிறகு என‌து 4 வ‌ய‌து பெண்ணை 'இண்ட‌ர்வியூ' செய்ய போவதாக பள்ளியிலிருந்து கடிதம் வந்தது. இண்டர்வியூ நடக்கும் போது அப்பா, அம்மா யாரும் கூட இருக்க கூடாதாம். குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் மட்டும் இண்டர்வியூ செய்வார்களாம்.

அவ்வளவுதான். வீடே அல்லோலகல்லோல பட்டுவிட்டது. அந்த ஒரு வாரம் நாங்க‌ள் ப‌ட்ட‌ பாடு இருக்கிற‌தே! 'இந்த‌ கேள்வி கேட்டால் இப்ப‌டி ப‌தில் சொல், அப்ப‌டி கேட்டால் அப்ப‌டி சொல், பாபா பிளாக் ஷீப் தெரியுமா, வீ விலி விங்க்கி தெரியுமா, எல்லா ரைமையும் ஒழுங்காக சொல்' என்று குழ‌ந்தையை பாடாய் படுத்தி ஒரு வ‌ழி ப‌ண்ணி விட்டோம்.

இண்ட‌ர்வியூ நாளும் வ‌ந்த‌து. நானும் எனது மனைவியும் பள்ளியின் வெளியே காத்திருந்தோம். "ஒழுங்காக பதில் சொல்லு. அங்கே இங்கே பாராக்கு பார்க்காதே" என்றெல்லாம் குழந்தைக்கு போதனை செய்து கடவுளை வேண்டிக்கொண்டு உள்ளே அனுப்பினோம். இறைவா, எப்படியாவது பள்ளியில் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே!

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு குழந்தை வெளியே வந்தாள். நாங்க‌ள் சொல்லி கொடுத்த‌ ஒரு கேள்வியையும் அவ‌ர்க‌ள் கேட்க‌வில்லையாம். ஒரு த‌ட்டு நிறைய‌ இனிப்புக‌ளை அவள் முன் வைத்து எடுத்து கொள்ளும்ப‌டி கூறினார்க‌ளாம். என‌து பெண்ணும், இர‌ண்டு கைக‌ளால் அள்ளி கொண்டாளாம். ஒன்றிலிருந்து ப‌த்து வ‌ரை கூறும்ப‌டி சொன்னார்க‌ளாம்.

 "நீ சொன்னியா?" என்று நான் அத‌ட்ட‌ அவ‌ள், "நானா? வந்து...........வந்து..........ம்ம்ம்ம்ம்......ஏதோ சொன்னேன்" என்று அல‌ட்டி கொள்ளாம‌ல் இழுக்க‌ என‌து இர‌த்த‌ கொதிப்பு ஏறிவிட்ட‌து! நடந்தவற்றை கேட்ட பக்கத்து வீட்டு பெண் "யார‌வ‌து சாக்லேட் கொடுத்தால் அள்ளிக்கொண்டு எடுத்து கொள்ள‌ கூடாது. ஒரே ஒரு சாக்லெட்டை எடுத்து கொண்டு 'தாங்க் யூ' சொல்ல‌ வேண்டும் என்று பள்ளியில் எதிர்பார்கிறார்கள்" என்றாள்.   இதை முதலிலேயே சொல்லி தொலைத்திருக்க கூடாதா?  இது 4 வயது குழந்தைக்கு எப்படி தெரியும்?

க‌ட‌வுளே, குழ‌ந்தையை குழ‌ந்தையாக‌ இருக்க‌ விடாம‌ல் இது என்ன‌ ம‌ட‌த்த‌ன‌மாக‌வும் செய‌ற்கைத்த‌ன‌மாக‌வும்  இருக்கிறது? இப்போது என்ன செய்வது, அவளுக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைக்குமோ கிடைக்காதோ?

சோகமே உருவாக நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்கு சொல்லி கொடுத்து, இரவெல்லாம் தூங்காமல் பிளாட்பாரத்தில் படுத்து விண்ணப்ப படிவத்தை வாங்கி........சே! போச்சு, போச்சு, எல்லாம் போச்சு. இனி அட்மிஷன் கிடைத்த மாதிரிதான்! எனது பெண்ணோ, நிலவரம் புரியாமல் வழக்கம் போல விளையாடி கொண்டிருந்தாள்.


ஒரு பத்து நாட்கள் கழித்து வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. எனது குழந்தைக்கு அட்மிஷன் கொடுப்பதாகவும், உடனடியாக பள்ளிக்கு வரும்படியும் எழுதியிருந்தது. எங்களுக்கு ஆச்சரியம். தாங்க முடியாத மகிழ்ச்சி. எப்படி இது சாத்தியமாயிற்று? ஒன்றுமே புரியவில்லை. சரி,  எப்படியோ அட்மிஷன் கிடைத்ததே!

தினமும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு அன்று நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறுவாள். யார் யாருடன் சண்டை போட்டாள், யார் யாரை கடித்தாள், இத்யாதி! வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாட்டில், பென்சில், என்று எதையாவது பள்ளியில் விட்டு விட்டு வருவாள். இப்படியே ஒரு வருடம் கழிந்தது. அதற்குள் எனக்கு செளதியில் வேலை கிடைத்து விட்டது. ஒரு நல்ல பள்ளியிலிருந்து செல்கிறோமே என்ற சோகம் இருந்தது. என்ன செய்வது, வயிற்று பிழைப்புக்காக வெளி நாடு செல்ல வேண்டிய நிர்பந்தம்.

செளதிக்கு வந்த பிறகு இந்தியன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தோம். இந்தியாவை போல இல்லாமல் இங்கு வேறு விதமான அனுபவங்கள் ஏற்பட்டன.

எனது பெண் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வருவாள். என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் பதில் கூறாமல் இருப்பாள். நாங்களும், பள்ளியில் ஏதாவது நடந்து இருக்கும், பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம்.

ஒரு நாள் பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் எனது பெண் சற்றே அதிகமாகவே அழுது கொண்டு வந்தாள். கன்னத்தில் ஒரு பக்கம் பயங்கரமாக வீங்கி இருந்தது. ஏதோ ஆயுதம் பட்ட மாதிரி அழுத்தமாக காயம் வேறு பட்டிருந்தது. எனது மனைவி பயந்து போய் எனக்கு போன் செய்தார். நான் அவசரம் அவசரமாக வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன்.

குழந்தையை பார்க்கவே பாவமாக இருந்தது. அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு, சாவகாசமாக "என்ன நடந்தது" என்று கேட்டேன். ஹிந்தியில் எழுத்து பிழை இருந்ததால் டீச்சர் தன்னை அடித்து விட்டதாக கூறினாள். எனக்கு பேரதிர்ச்சி. வேகமாக குழந்தையை ஆசிரியை அறைந்ததால் மோதிரம் பட்டு கன்னத்தில் அடி விழுந்து ஒரு பக்கம் வீங்கி விட்டிருந்தது. அது மட்டுமல்ல, தினமும் இந்த மாதிரி குழந்தையை அடித்திருக்கிறார். அதனால் தான் இவளும் தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

செளதியில் ஒரு சட்டம் உள்ளது. குழந்தையை யாராவது அடித்தால், அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அது நிரூபணம் ஆனால் உடனடியாக அடித்தவர் கைது செய்யப்படுவார்கள். பெரிய சூப்பர் மார்கெட்களில் குழந்தைகள் சாக்லெட் போன்றவைகளை எடுத்து சாப்பிட்டால் கடைக்காரர்கள் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். சட்டப்படி அவர்களை தடுக்கவும் கூடாது.

குழந்தையின் நிலைமையை பார்த்து எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. நேரிடையாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பார்த்தேன். உடனடியாக அந்த ஆசிரியையை நான் பார்த்தாக வேண்டும், இல்லை என்றால் போலீசுக்கு தகவல் கொடுப்பேன் என்று கூறினேன். அந்த ஆசிரியை பீகாரை சேர்ந்தவர். 'பேபி தபஸூம்' என்று பெயர். பெயர் தான் பேபியே தவிர 5 பேபிகளுக்கு தாயாம்!

என்னை பார்த்தவுடன் "இந்த மதராஸி குழந்தைகளே இப்படிதான், ஹிந்தி தெரியாமல்..."என்று ஆரம்பித்தார். உடனே தலைமை அசிரியர் அவரை கடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டார். "நீங்கள் குழந்தையை அடித்ததால் ஒரு கன்னமே வீங்கி விட்டது. இப்படி ஒரு ஆசிரியை இந்த பள்ளிக்கே வேண்டாம்" என்றெல்லாம் கூறினார். அப்போது தான் அந்த அசிரியைக்கு விபரீதம் புரிந்தது.

தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் அவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பல முறை என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் கடும் கோபத்தில் இருந்தேன். ஒரு கட்டத்தில் எனது காலில் விழாத குறையாக அவர் கேட்டுக்கொண்டார். "சரி, இப்போது நான் போகிறேன். ஆனால் இந்த மாதிரி எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால் நான் பள்ளிக்கு வர மாட்டேன், நேராக காவல் துறையிடம் தான் செல்வேன்" என்று எச்சரித்து விட்டு வந்தேன். அதற்கு பிறகு அந்த பள்ளியில் எந்த அசிரியையும் எந்த குழந்தையையும் அடிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.


நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் சென்று விட்டன. ஒவ்வொரு வகுப்பையும் கடந்து அடுத்த வகுப்புக்கு இவள் செல்லும் போதும், "அட, இப்போது தானே பள்ளியில் சேர்த்தோம்" என்று நினைப்பேன். கடினமான பாடங்களுக்கு டியூஷன் வைத்தோம். சில பாடங்களை நானே சொல்லி கொடுப்பேன்.


இப்போது எனது பெண் 12ம் வகுப்பு முடித்து விட்டாள்.  யோசித்து பார்த்தால் பழைய நினைவுகள் எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கின்றன.

ஆயிற்று. இன்னும் சில வருடங்களில் அவள் பட்டப்படிப்பை முடித்து விடுவாள். அதற்கு பிறகு திருமணம் முடிந்து அவளுக்கும் குழந்தை பிறக்கும். ஒரு வேளை அவளது கணவனும் என்னை போன்று வேறு ஒரு பள்ளி வாசலில் பிளாட்பாரத்தில் விண்ணப்ப படிவத்துக்காக படுத்திருப்பானோ என்னவோ, யார் கண்டது. ஒரு இலை உதிர மற்றொரு இலை மரத்தில் வளர்வது இயற்கை தானே. 

இப்போது நினைத்து பார்க்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு சொல்லி கொடுத்த பாடங்களுக்கும் நான் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படித்தோம், எங்கேயோ வேலைக்கு  சேர்ந்து இப்போது என்னவோ செய்கிறோம். இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் பள்ளி நாட்களில் இருந்த அந்த ஆனந்தம், அந்த குதூகலம், அந்த இன்பம் திரும்ப கிடைக்குமா? இல்லை பணத்துக்காக ஆன்மாவை விற்று விட்டோமா? தெரியவில்லை.  





Friday 4 May 2012

உங்களுக்கு ஏழரை நாட்டு சனியா?

சூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த கால கட்டம். 1993ம் வருடம் என்று நினைக்கிறேன். எப்படியாவது ஏதாவது வளைகுடா நாட்டுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று மனதில் ஒரு வெறி இருந்தது. ஒவ்வொறு ஞாயிற்றுக்கிழமையும் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் வளைகுடா வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வரும். அவற்றை ஆவலுடன் படித்து விட்டு விண்ணப்பம் செய்வதே முழு நேர தொழிலாக கொண்டிருந்தேன். அவ்வப்போது பம்பாய்க்கு 'இண்டர்வ்யூவுக்கு' செல்வது வழக்கம்.


அப்படி ஒரு முறை பம்பாய் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை சொல்கிறேன். இப்போது என்னை போன்ற விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறதாம். எனக்கு மட்டும் வித்யாசம் ஒன்றும் தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு நல்ல நாளிலேயே தில்லானா. அதனால், மோசமான நிலைமைக்கும்,  மிக மோசமான நிலைமைக்கும் உள்ள வித்யாசம்தான் என்று வைத்து கொள்ளுங்களேன். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


சூர‌த்திலிருந்து மாலையில் ஒரு இர‌யிலை பிடித்து இர‌வு ப‌ம்பாயில் த‌ங்கி விட்டு காலையில் இண்ட‌ர்வ்யூவுக்கு செல்வ‌தாக‌ ஏற்பாடு. இப்ப‌டி இர‌வில் ப‌ம்பாயில் த‌ங்க‌ வேண்டுமென்றால் நான் வ‌ழ‌க்க‌மாக‌ ப‌ம்பாய் சென்ட்ர‌ல் இர‌யில் நிலைய‌த்தின் அருகில் உள்ள‌ ஒரு கெஸ்ட் ஹ‌வுசில் தான் த‌ங்குவ‌து வ‌ழ‌க்க‌ம்.

ஒரு சிறிய பெட்டியில் என்னுடைய சான்றிதழ்கள் மற்றும் ஒரு ஜட்டி, பனியன், சட்டை இத்யாதிகளை அள்ளி போட்டு கொண்டு சூரத் இரயில் நிலையத்துக்கு சென்றேன். நல்ல வேளையாக அஹமதாபாதிலிருந்து ஒரு இரயில் அப்போது தான் பிளாட்பாரத்துக்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது மாலை 5 மணி. இர‌யிலில் ஏறி உட்கார்ந்த‌ உட‌னேயே க‌ன‌ ம‌ழை பெய்ய‌ ஆர‌ம்பித்து விட்ட‌து! என‌க்கு தான் விருச்சிக‌ ராசி ஆயிற்றே. நாம் என்ன‌ நினைப்போமோ அத‌ற்கு நேர் மாறாக‌ ந‌ட‌ந்தால்தான் ந‌ம‌து ராசியின் புக‌ழை போற்ற‌ முடியும் அல்ல‌வா? ம‌ணிக்கு 60 கிலோமீட்ட‌ர் வேக‌த்தில் செல்லும் அந்த 'சூப்ப‌ர் பாஸ்ட்' வ‌ண்டி இப்போது ஒரு இடி இடித்த‌வுட‌ன் 40 கிலோமீட்ட‌ர் வேக‌த்தில் செல்ல‌ ஆர‌ம்பித்த‌து!

வ‌ழி முழுவ‌தும் ச‌ரியான‌ ம‌ழை. ஒரு வ‌ழியாக‌ ப‌ம்பாய்க்குள் இரவு 12 மணிக்கு இர‌யில் நுழைந்த‌து. ஆனால் வ‌ழியில் பாந்த்ரா இர‌யில் நிலைய‌த்திலேயே நின்று விட்ட‌து. த‌ண்ட‌வாள‌த்தில் த‌ண்ணீர் நிர‌ம்பி வ‌ழிந்த‌தால் இர‌யில் இத‌ற்கு மேல் செல்லாது என்று அனைவ‌ரையும் இற‌க்கி விட்டு விட்டார்க‌ள். நான் செல்ல‌ வேண்டிய‌தோ ப‌ம்பாய் சென்ட்ர‌ல்.


பொதுவாக‌ பாந்த்ரா இர‌யில் நிலைய‌ம் 'ஜே ஜே' என்று எப்பொழுதுமே கூட்ட‌மாக‌ இருக்கும். அன்று பெய்த மழையில் இரயில் நிலையமே வெறிச்சோடி இருந்தது. அந்த இரவு வேளையில் வெளியே ஆட்டோவோ, பஸ்ஸோ ஒன்றுமே இல்லை. மழை முழுவதுமாக நிற்கவில்லை. பெரிது பெரிதாக தூறிக்கொண்டிருந்தது. சரி, பக்கத்தில் ஏதாவது ஹோட்டலுக்கு போய் இரவு தங்கி விட்டு காலையில் செல்லலாம் என்று நினைத்தேன். தரையில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவரை தலையில் வைத்துக்கொண்டே வேக வேகமாக இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருந்தது. அருகில் இருக்கும் எல்லா ஹோட்டல்களிலும் ஏறி இறங்கினேன். ஒரு ஹோட்டலில் கூட இடமே இல்லை. இப்போது என்ன செய்வது? எத்தனை நேரம் தான் இரவில் வெளியே இருப்பது? மீண்டும் இரயில் நிலையத்துக்குள் வந்து அங்கே பிளாட்பாரத்தில் இருந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து கொண்டேன். சரி, இன்று இரவு பிளாட்பாரத்தில் தான் என்று நினைத்து கொண்டேன். கண்களில் அசதி, வயிற்றில் ஏதோ பிசைவது போல இருந்தது.

கையில் இருந்த பெட்டியை கெட்டியாக பிடித்து கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே தூங்கினேன். நடு நடுவே நாய் தொல்லை வேறு இருந்தது. எத்தனை நேரம் அப்படி இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. திடீரென்று சத்தம். பார்த்தால் விடிய ஆரம்பித்திருந்தது. காலை சுமார் 5 மணி இருக்கும். மழை விட்ட பாடில்லை.


அதற்குள் பிளாட்பார டீ கடையை திறந்து விட்டிருந்தனர். டீயை குடித்து விட்டு வெளியே வந்தேன். கன மழை என்றால் அப்படி ஒரு மழை. எனக்கு 8 மணிக்கு இண்டர்வ்யூ ஆயிற்றே. என்ன செய்வது. எப்படியாவது பம்பாய் சென்ட்ரல் சென்று விட்டால் அங்கிருந்து ஏதாவது டாக்ஸியை பிடித்து சென்று விடலாம். வந்தது வரட்டும் என்று அந்த பிளாஸ்டிக்கை தலையில் வைத்து கொண்டே வெளியே வந்தேன். அது எந்த மூலைக்கு? பெய்கின்ற மழையில் அப்படியே அடித்து கொண்டு போய் விட்டது. இப்போது நான் முழுவதுமாக நனைந்து விட்டேன்.

தட்டி தடுமாறி வெகு நேரம் நடந்த பின் எங்கிருந்தோ ஒரு பஸ் வந்தது. அதில் ஏறி வடாலா வரை சென்று அங்கிருந்து வேறு ஒரு பஸ் பிடித்து ஒரு வழியாக பம்பாய் சென்ட்ரலை அடைந்தேன். அப்பாடா. மணி ஏழரை தான். வெளியே ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது. அதை பிடித்து ஏஜெண்ட் ஆபீஸை தேடி அடைந்த போது மணி சரியாக 8. எப்படியோ, வந்து சேர்ந்து விட்டோமே.

பொதுவாக ஏஜெண்ட் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதிக்கொண்டிருக்கும். அன்று ஈ, காக்காயை கூட பார்க்க முடியவில்லை. கதவு பூட்டியிருந்தது. இரண்டு முறை சுற்றி வந்து முகவரி சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து விட்டு கடைசியில் அங்கு இருந்த காவலாளியிடம் விசாரித்தேன். அவன், "இந்த மழையில் எவன் வருவான்? இன்று இண்டர்வ்யூ எதுவும் கிடையாது. மறுபடியும் எப்பொழுது இருக்கும் என்றும் தெரியாது" என்று கூறிவிட்டான். 


வெளியே இடித்த இடி இப்போது எனது தலையில் விழுந்த மாதிரி இருந்தது. 'இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்று எங்கோ படித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இப்போது என்ன செய்வது? ஊருக்கு கிளம்ப வேண்டியது தான். வெளியே வந்தால் அடை மழை மீண்டும் அரம்பித்து விட்டது. சாலையில் எங்கும் வெள்ள பெருக்கு. நல்ல வேளை, நான் வந்த டாக்ஸி ஆள் கிடைக்காமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதை பிடித்து மீண்டும் பம்பாய் சென்ட்ரலுக்கு வந்து சேர்ந்தேன். அங்கு அதை விட பெரிய அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் தண்ணீர் புகுந்ததால் எல்லா இரயில்களையும் பாந்த்ராவோடு நிறுத்தி விட்டார்களாம். இப்போது பாந்த்ராவுக்கு எப்படி செல்வது? அங்கு சென்றால் தானே சூரத்துக்கு எனக்கு வண்டி கிடைக்கும்?


சோர்வுடன் வெளியே வந்தேன். எத்தனை நேரம் நின்று கொண்டிருந்தேன் என்று தெரியாது. தொலைவில் ஒரு 'எஸ்.டி.' பஸ் வந்து கொண்டிருந்தது. இது நம்மூர் மொபஸில் பஸ் மாதிரி. தகர டப்பாவில் சக்கரம் கட்டி ஓட விட்டால் இருக்குமே, அந்த மாதிரி தான். பம்பாயிலிருந்து புதிய பம்பாயில் பன்வேல் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. எதோ பஸ் என்று ஒன்றாவது கிடைத்ததே. இதை விட்டால் எனக்கு வேறு வழியே இல்லை. நட்ட நடு ரோடுக்கு வந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கொண்டு அந்த பஸ்ஸின் வழியை மறித்தேன். என்னை மீறி பஸ் போனால் என் மேல் ஏறிக்கொண்டு தான் போக வேண்டும்.

என்னை பார்த்தவுடன் பஸ் நான் எதிர்ப்பார்த்தது போல நின்றது. சட்டென்று உள்ளே நான் ஏறிக்கொண்டேன். நல்ல வேளை பஸ் காலியாக இருந்தது. கையில் இருந்த பெட்டியை ஸீட்டின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு உட்கார்ந்தேன். உடம்பெல்லாம் ஒரே வலி. அப்பாடா. ஒரு வழியாக உட்கார்ந்தாகி விட்டது. பாந்த்ரா வரை சென்று விட்டால் அங்கிருந்து அஹமதாபாத் செல்லும் ஏதாவது ஒரு இரயிலில் ஏறி ஊர் போய் சென்று விடலாம்.

வந்த வேலை முடியவில்லையே என்று மனதில் சோர்வு. காலையில் ஸ்டேஷனில் குடித்த டீயை தவிர வயிற்றில் வேறு ஒன்றுமே இல்லை. பசி மயக்கம். எல்லாம் சேர்ந்து கொண்டு கண்ணை சொருகி விட்டது. இந்த தூக்கம் என்பது இறைவன் கொடுத்த பெரிய சோஷியலிஸ சமத்துவபுரம். தூங்கிய பிறகு பொறியாளனா பிச்சைக்காரனா, எல்லாமே கட்டை தான்! பாந்த்ரா வந்தால் கூறுமாறு நடத்துனரிடம் கூறியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம். பாந்த்ரா வந்ததும் இறங்கிக்கொண்டேன். அப்பாடா, ஒரு வழியாக ஸ்டேஷன் வந்தாகிவிட்டது. என்னை இறக்கி விட்டு விட்டு பஸ் கிளம்பி விட்டது.

ஒரு நிமிடம் தான். ஒரே நிமிடம் தான். சட்டென்று பார்த்தால் என் கையில் எதுவும் இல்லை. அட கடவுளே, நான் பஸ் ஸீட்டின் மேல் எனது பெட்டியை வைத்திருந்தேனே, அதை அங்கேயே மறந்து விட்டேனே! அதில் தானே என்னுடைய சான்றிதழ்கள் எல்லாமே இருக்கின்றன. ஐயோ, இப்போது நான் என்ன செய்வேன்!

அந்த பஸ் பன்வேல் வரை செல்கிறதல்லவா? உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்தேன். பன்வேலுக்கு செல்லும்படி கூறினேன். வழியெல்லாம் கடவுளை வேண்டிக்கொண்டே வந்தேன். இறைவா, இது என்ன சோதனை! ஒரு வேலை தேட போய் இப்போது என்னுடைய சான்றிதழ்கள் அத்தனையும் கோட்டை விட்டு விட்டேனே!


கிட்டத்தட்ட முக்கால் மணி நேர பயணம். ஒரு வழியாக பன்வேல் பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தேன். ஆட்டோ காரரிடம் பணத்தை கொடுத்து விட்டு நேராக டெப்போ மானேஜரிடம் சென்றேன். விஷயத்தை சுருக்கமாக சொன்னேன். அவர், 'அந்த பஸ் நம்பார் ஞாபகம் இருக்கிறதா?' என்றார். யார் பஸ் நம்பரை எல்லாம் பார்க்கிறார்கள்? அவரிடம், "ஐயா, என்னிடம் இருப்பதெல்லாம் இந்த பஸ் டிக்கட் தான். இதை வைத்து அந்த பஸ்ஸை தயவு செய்து கண்டு பிடியுங்கள். எனது சான்றிதழ்கள் எல்லாமே அதில் மாட்டி கொண்டுள்ளன" என்றேன். அவர், அந்த டிக்கட் நம்பரை வைத்து கொண்டு கணணியில் ஏதோ தேடினார். என்னை பார்த்து, "அடடா, ஒரு 10 நிமிடங்களுக்கு முன்னால் தான் அந்த பஸ் லோவர் பரேல் டெப்போவுக்கு சென்றது. நீங்கள் உடனடியாக லோவர் பரேலுக்கு செல்லுங்கள். நான் போன் செய்து அந்த டெப்போ மானேஜருக்கு தகவல் கூறிவிடுகிறேன்" என்றார். லோவர் பரேல் என்பது பம்பாய் நகருக்குள் இருக்கிறது.


மறுபடியும் ஒரு ஆட்டோவை பிடித்து லோவர் பரேலுக்கு செல்லுமாறு கூறினேன். ஆட்டோ காரர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். செங்கல்பட்டிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆட்டோவில் சென்றால் எப்படியோ, அது மாதிரி இது. என்ன செய்வது, என்னுடைய நிலைமை அப்படி.
'வழி முழுவதும் மனதில் எண்ண அலைகள். ஒரு வேளை சான்றிதழ்கள் கிடைக்காவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும், டூப்ளிகேட் சான்றிதழ்கள் வாங்குவதற்கு எங்கெல்லாம் அலைய வேண்டுமோ', இப்படி எல்லாம் என் மனதில் குழப்பங்கள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்று கூறுவார்களே, அப்படி ஒரு சூழ்நிலை.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆட்டோவில் பயணம். உடம்பெல்லாம் ஒரே வலி. அதை விட மனதில் துக்கமும் வெறுப்பும் எக்கச்'சக்கம். லோவர் பரேல் டெப்போ வாசலில் ஆட்டோ காரரை 'வெயிட்டிங்கில் இருக்க சொன்னேன் (ஒரு வேளை அந்த பஸ் இங்கிருந்து வேறு எங்காவது சென்று விட்டிருந்தால்?). டெப்போவினுள் ஒரு 50 பஸ்களுக்கு மேல் நின்று கொண்டிருந்தன. எந்த பஸ் என்று நான் தேடுவது?

மறுபடியும் டெப்போ மானேஜரின் அலுவலகத்துக்கு சென்றேன். எனது ராசி தான் விருச்சிகம் ஆயிற்றே! அவர் தனது ஸீட்டில் இல்லை. எத்தனை நேரம் அங்கு காத்து கிடந்தேன் என்று தெரியாது. வெளியே ஆட்டோ காரர் வேறு 'வெயிட்டிங்கில்' இருக்கிறார். கடைசியில் மானேஜர் வந்தார்.

அவரது கால்களை பிடித்து கதறாத குறை தான். எப்படியாவது எனது சான்றிதழ்களை கண்டுபிடித்து தருமாறு கூறும்போதே எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொண்டது. ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவான்?

அவர் வாயில் வெற்றிலை பாக்கை மென்று கொண்டே, "உங்கள் பெட்டியின் நிறம் என்ன, எப்படி இருக்கும், எங்கு விட்டீர்கள், அதில் என்னவெல்லாம் இருந்தது" என்று கேட்டு கொண்டே ஒரு படிவத்தில் எல்லாவற்றையும் எழுதி கொண்டிருந்தார். நான் எல்லா தகவல்களையும் கூறிக்கொண்டே, "ஐயா, நான் சூரத்துக்கு செல்ல வேண்டும். அந்த பெட்டியில் பணம் வேறு வைத்திருந்தேன்" என்றேன்.

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பார்களே, அதை அன்று தான் நேரிடையாக கண்டேன். பெட்டியில் பணம் வைத்திருக்கிறேன் என்று நான் கூறியது தான் தாமதம், திபுதிபு என்று ஒரு பத்து  பன்னிரெண்டு பேர், எல்லோரும் காக்கி சட்டை போட்டவர்கள் (அந்த டெப்போவில் வேலை செய்பவர்கள் என்று நினைக்கிறேன்), அது வரை எங்கு இருந்தார்களோ தெரியவில்லை, உடனே என்னை சூழ்ந்து கொண்டார்கள்.

கடைசியில், ஒரு காக்கி சட்டைக்காரன், வேறு ஒரு அறைக்கு சென்று உடனே திரும்பி வந்தான். "இது தான் உங்கள் பெட்டியா பாருங்கள்" என்றான். எனக்கு போன உயிர் திரும்பி வந்தது. எனது பெட்டி தான்.

அதற்குள் வெளியே 'வெயிட்டிங்கில்' இருந்த ஆட்டோ காரர் என்னை தேடிக்கொண்டு வந்து விட்டான். நான் அவரிடம், "ரொம்ப சாரி. இப்போது தான் பெட்டி கிடைத்தது" என்றேன். ஆட்டோக்காரர், "நான் எப்போதோ மீட்டரை நிறுத்தி விட்டேன். உள்ளே சென்ற ஆள் எனக்கு தெரியாமல் எங்கோ ஓடி விட்டான் என்று நினைத்தேன்" என்றார். என்ன செய்வது, அவரது கவலை அவருக்கு.

டெப்போ மானேஜர், "சரி, பணம் இருக்கிறது என்றீர்களே" என்றார். நான் என்ன ஹாஜி மஸ்தானா, கத்தை கத்தையாக பணம் வைத்திருக்க? பெட்டியை திறந்து காண்பித்தேன். உள்ளே எனது சான்றிதழ்கள், ஒரு ஜட்டி, பனியன் மற்றும் இருநூறு ரூபாய் பணம் இருந்தது. அனைவருக்கும் ஒரே ஏமாற்றம். நான் டெப்போ மானேஜரிடம், "ஐயா, தெய்வாதீனமாக எனது பெட்டி கிடைத்து விட்டது. உங்களுக்கு சன்மானமாக வழங்க என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால், இந்த 10 ரூபாயை வைத்து கொள்ளுங்கள்" என்றேன். அவரும் பதில் பேசாமல் அதை வாங்கி கொண்டார். (என்னை அடிக்காமல் விட்டாரே, அது வரை சந்தோஷம் தான்!)

ஆட்டோ காரரிடம், "என்னிடம் இருப்பது இந்த 190 ரூபாய் தான். உங்களுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் சூரத் செல்வதற்கு டிக்கட் வாங்க கூட என்னிடம் வேறு பணம் இல்லை. அதனால், நீங்கள் இந்த 100 ரூபாயை வைத்து கொள்ளுங்கள்" என்றேன்.

ஆட்டோக்காரர் மெளனமாகி விட்டார். நான் அவரிடம் , "ஐயா, உங்களை ஏமாற்ற வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. உண்மையிலேயே எனக்கு நீங்கள் பேருதவி செய்தீர்கள். கண்டிப்பாக பன்வேலிலிருந்து இங்கு வருவதற்கு பல நூறு ரூபாய் ஆகியிருக்கும் என்று எனக்கு தெரியும். வேண்டும் என்றால் உங்களது முகவரியை சொல்லுங்கள். நான் மணி ஆர்டர் செய்து விடுகிறேன். அது வரை எனது கை கடிகாரத்தி வைத்து கொள்ளுங்கள்" என்றேன்.

ஆட்டோக்காரர், "நான் படிக்காதவன். ஆனால் நீங்கள் படித்து வேலை தேட வந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மை கூறுவது எனக்கு தெரிகிறது. கஷ்டம் என்பது எல்லோருக்கும் வருவது தான். இந்த பணத்தை நான் எப்படியாவது சம்பாதித்து கொள்கிறேன். நீங்கள் நல்லபடியாக ஊர் போய் சேருங்கள்" என்றார். நான் கண் கலங்கி விட்டேன்.

"எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்" என்பது இது தானோ? அங்கு இருந்த அனைவரிடமும் விடை பெற்றேன். மழை நின்று தூறல் பன்னீர் போல தெரிக்க ஆரம்பித்திருந்தது.

ஒரு வழியாக இரயில் பிடித்து சூரத் வந்து சேர்ந்து வீட்டுக்குள் நொந்து நூடுல்ஸாகி வந்து சேர்ந்த போது மணி இரவு 1.30.

மக்களே, இப்போதாவது சொல்லுங்கள். ஏழரை நாட்டு சனியை பார்த்து நான் ஏன் பயப்பட வேண்டும்? எனக்கு தான் தினமும் ஏழரை நாட்டு சனியின் அனுபவம் ஏற்படுகிறதே. உங்களுக்கு ஏழரை நாட்டு சனியின் கஷ்டம் வந்தால், இந்த பதிவை படித்து ஆறுதல் பட்டு கொள்ளுங்கள். 'இரு கோடுகள்' படத்தில் வருவது மாதிரி, 'இவனை விட நாம் தேவலை' என்று ஒரு அல்ப சந்தோஷம் பட்டு கொள்ளலாம், வேறு என்ன?