Wednesday 30 May 2012

இலையுதிர் காலம்

1997ம் ஆண்டு என்று நினைக்கிறேன். புதிய பம்பாயின் நேருல் பகுதியில் வசித்து வந்தேன். அப்போதெல்லாம் புதிய பம்பாயில் சி.பி.எஸ்.ஈ. பள்ளி ஒன்று தான் இருந்தது. (இப்போது நிறைய பள்ளிகள் வந்து விட்டன.) அந்த பள்ளியில் பிள்ளைகளை சேற்க உண்மையிலேயே பயங்கர போட்டா போட்டி இருந்தது. எனது பெண்ணை அந்த பள்ளியில் எல்.கே.ஜி.யில் சேர்க்கலாம் என்று நானும் எனது மனைவியும் எண்ணினோம்.


பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் "அந்த பள்ளியில் வெறும் 150 விண்ணப்ப படிவங்கள் தான் கொடுப்பார்கள். அதனால் நீங்கள் சீக்கிரமே போய் வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறினார். "சீக்கிரம்" என்றால், 9 மணிக்கு ஆரம்பிக்கும் பள்ளிக்கு ஒரு 8 மணிக்கே சென்று வரிசையில் நின்றால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

கடையில் ஏதோ வாங்குவதற்காக அந்த வழியாக முந்தைய நாள் மாலை போக வேண்டி இருந்தது. அங்கு பார்த்தால் பள்ளியின் வாசலில் ஒரு பத்து பேர் இருந்தார்கள். என்ன விஷயம் என்று விசாரித்தால், "நாளை காலை விண்ணப்ப படிவம் கொடுக்கிறார்கள் இல்லையா, உங்களுக்கு விஷயமே தெரியாதா?" என்று கேட்டார்கள். அப்போது மாலை 5.30 மணி!


அடப்பாவிகளா, ஒரு எல்.கே.ஜி. அட்மிஷனுக்கு இவ்வளவு போட்டியா? உடனடியாக வீட்டுக்கு வந்து அவசரம் அவசரமாக காபியை குடித்து விட்டு எனது மனைவியிடம், "நான் போய் கியூவில் நிற்கிறேன். இரவு உணவை சமைத்த பின் நீ வந்து எனது இடத்தை பிடித்துக்கொள். நான் சாப்பிட்டு விட்டு வந்து உன்னை வீட்டுக்கு அனுப்புகிறேன்" என்று கூறி விட்டு கையில் ஒரு செய்தி தாளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். நான் போய் சேர்வதற்குள் அந்த வரிசையில் ஒரு 25 பேர் எனக்கு முன் நின்று கொண்டிருந்தார்கள்.

இது போன்ற பைத்தியக்காரத்தனத்தை நான் பார்த்திருக்கவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள். என்ன செய்வது, எப்படியாவது குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டுமே!


நேரம் செல்ல செல்ல, வரிசையில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பெரிய டாக்டர்கள், வக்கீல்கள் என்று அனைவரும் வந்திருந்தனர். அந்த பள்ளியில் பணம் எதுவும் வாங்குவது கிடையாதாம். அதனாலேயே அதற்கு மவுசு அதிகமாகி விட்டது. ஒரு எட்டு மணி இருக்கும். பக்கத்தில் திடீர் 'பாவ் பாஜி' கடைகள் ஆரம்பித்து விட்டன. வேர்க்கடலை, பட்டாணி முதல் ஜரூராக வியாபாரம் பிய்த்துக்கொண்டு போனது. சிறிது நேரத்தில் எனது மனைவி அங்கு வந்தவுடன், நான் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு, ஒரு கொசுவர்த்தி சுருளையும் கொண்டு வந்தேன். இன்று இரவு சிவராத்திரிதான்!


நேரம் ஆக ஆக தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. வரிசையில் உள்ளவர்கள் ஜோக் அடித்துக்கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு அரசியல் பேசிக்கொண்டு பொழுதை கழித்தனர். கையில் கொண்டு சென்ற செய்தித்தாளை பிளாட்பாரத்தில் விரித்துக்கொண்டு எனது கட்டையை நான் விரித்தேன். பொறியாளனையும் பிளாட்பாரத்தில் படுக்க வைத்த மாபெரும் சமத்துவபுரம் இந்த அனுபவம்!

ம‌றுநாள் காலையில் ப‌ள்ளி திற‌ந்த‌வுட‌ன் வெற்றிக‌ர‌மாக‌ விண்ண‌ப்ப‌ ப‌டிவ‌த்தை வாங்கினேன். என்னவோ எவரெஸ்ட் சிகரத்தை எட்டியது போன்ற உணர்வு!

ஒரு வாரம் கழிந்த பிறகு என‌து 4 வ‌ய‌து பெண்ணை 'இண்ட‌ர்வியூ' செய்ய போவதாக பள்ளியிலிருந்து கடிதம் வந்தது. இண்டர்வியூ நடக்கும் போது அப்பா, அம்மா யாரும் கூட இருக்க கூடாதாம். குழந்தையை பள்ளி நிர்வாகத்தினர் மட்டும் இண்டர்வியூ செய்வார்களாம்.

அவ்வளவுதான். வீடே அல்லோலகல்லோல பட்டுவிட்டது. அந்த ஒரு வாரம் நாங்க‌ள் ப‌ட்ட‌ பாடு இருக்கிற‌தே! 'இந்த‌ கேள்வி கேட்டால் இப்ப‌டி ப‌தில் சொல், அப்ப‌டி கேட்டால் அப்ப‌டி சொல், பாபா பிளாக் ஷீப் தெரியுமா, வீ விலி விங்க்கி தெரியுமா, எல்லா ரைமையும் ஒழுங்காக சொல்' என்று குழ‌ந்தையை பாடாய் படுத்தி ஒரு வ‌ழி ப‌ண்ணி விட்டோம்.

இண்ட‌ர்வியூ நாளும் வ‌ந்த‌து. நானும் எனது மனைவியும் பள்ளியின் வெளியே காத்திருந்தோம். "ஒழுங்காக பதில் சொல்லு. அங்கே இங்கே பாராக்கு பார்க்காதே" என்றெல்லாம் குழந்தைக்கு போதனை செய்து கடவுளை வேண்டிக்கொண்டு உள்ளே அனுப்பினோம். இறைவா, எப்படியாவது பள்ளியில் அட்மிஷன் கிடைக்க வேண்டுமே!

கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு குழந்தை வெளியே வந்தாள். நாங்க‌ள் சொல்லி கொடுத்த‌ ஒரு கேள்வியையும் அவ‌ர்க‌ள் கேட்க‌வில்லையாம். ஒரு த‌ட்டு நிறைய‌ இனிப்புக‌ளை அவள் முன் வைத்து எடுத்து கொள்ளும்ப‌டி கூறினார்க‌ளாம். என‌து பெண்ணும், இர‌ண்டு கைக‌ளால் அள்ளி கொண்டாளாம். ஒன்றிலிருந்து ப‌த்து வ‌ரை கூறும்ப‌டி சொன்னார்க‌ளாம்.

 "நீ சொன்னியா?" என்று நான் அத‌ட்ட‌ அவ‌ள், "நானா? வந்து...........வந்து..........ம்ம்ம்ம்ம்......ஏதோ சொன்னேன்" என்று அல‌ட்டி கொள்ளாம‌ல் இழுக்க‌ என‌து இர‌த்த‌ கொதிப்பு ஏறிவிட்ட‌து! நடந்தவற்றை கேட்ட பக்கத்து வீட்டு பெண் "யார‌வ‌து சாக்லேட் கொடுத்தால் அள்ளிக்கொண்டு எடுத்து கொள்ள‌ கூடாது. ஒரே ஒரு சாக்லெட்டை எடுத்து கொண்டு 'தாங்க் யூ' சொல்ல‌ வேண்டும் என்று பள்ளியில் எதிர்பார்கிறார்கள்" என்றாள்.   இதை முதலிலேயே சொல்லி தொலைத்திருக்க கூடாதா?  இது 4 வயது குழந்தைக்கு எப்படி தெரியும்?

க‌ட‌வுளே, குழ‌ந்தையை குழ‌ந்தையாக‌ இருக்க‌ விடாம‌ல் இது என்ன‌ ம‌ட‌த்த‌ன‌மாக‌வும் செய‌ற்கைத்த‌ன‌மாக‌வும்  இருக்கிறது? இப்போது என்ன செய்வது, அவளுக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைக்குமோ கிடைக்காதோ?

சோகமே உருவாக நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.எவ்வளவு கஷ்டப்பட்டு அவளுக்கு சொல்லி கொடுத்து, இரவெல்லாம் தூங்காமல் பிளாட்பாரத்தில் படுத்து விண்ணப்ப படிவத்தை வாங்கி........சே! போச்சு, போச்சு, எல்லாம் போச்சு. இனி அட்மிஷன் கிடைத்த மாதிரிதான்! எனது பெண்ணோ, நிலவரம் புரியாமல் வழக்கம் போல விளையாடி கொண்டிருந்தாள்.


ஒரு பத்து நாட்கள் கழித்து வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. எனது குழந்தைக்கு அட்மிஷன் கொடுப்பதாகவும், உடனடியாக பள்ளிக்கு வரும்படியும் எழுதியிருந்தது. எங்களுக்கு ஆச்சரியம். தாங்க முடியாத மகிழ்ச்சி. எப்படி இது சாத்தியமாயிற்று? ஒன்றுமே புரியவில்லை. சரி,  எப்படியோ அட்மிஷன் கிடைத்ததே!

தினமும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு அன்று நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறுவாள். யார் யாருடன் சண்டை போட்டாள், யார் யாரை கடித்தாள், இத்யாதி! வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாட்டில், பென்சில், என்று எதையாவது பள்ளியில் விட்டு விட்டு வருவாள். இப்படியே ஒரு வருடம் கழிந்தது. அதற்குள் எனக்கு செளதியில் வேலை கிடைத்து விட்டது. ஒரு நல்ல பள்ளியிலிருந்து செல்கிறோமே என்ற சோகம் இருந்தது. என்ன செய்வது, வயிற்று பிழைப்புக்காக வெளி நாடு செல்ல வேண்டிய நிர்பந்தம்.

செளதிக்கு வந்த பிறகு இந்தியன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தோம். இந்தியாவை போல இல்லாமல் இங்கு வேறு விதமான அனுபவங்கள் ஏற்பட்டன.

எனது பெண் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வருவாள். என்ன விஷயம் என்று கேட்டால் ஒன்றும் பதில் கூறாமல் இருப்பாள். நாங்களும், பள்ளியில் ஏதாவது நடந்து இருக்கும், பெரிது படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டோம்.

ஒரு நாள் பஸ்ஸில் இருந்து இறங்கியவுடன் எனது பெண் சற்றே அதிகமாகவே அழுது கொண்டு வந்தாள். கன்னத்தில் ஒரு பக்கம் பயங்கரமாக வீங்கி இருந்தது. ஏதோ ஆயுதம் பட்ட மாதிரி அழுத்தமாக காயம் வேறு பட்டிருந்தது. எனது மனைவி பயந்து போய் எனக்கு போன் செய்தார். நான் அவசரம் அவசரமாக வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன்.

குழந்தையை பார்க்கவே பாவமாக இருந்தது. அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு, சாவகாசமாக "என்ன நடந்தது" என்று கேட்டேன். ஹிந்தியில் எழுத்து பிழை இருந்ததால் டீச்சர் தன்னை அடித்து விட்டதாக கூறினாள். எனக்கு பேரதிர்ச்சி. வேகமாக குழந்தையை ஆசிரியை அறைந்ததால் மோதிரம் பட்டு கன்னத்தில் அடி விழுந்து ஒரு பக்கம் வீங்கி விட்டிருந்தது. அது மட்டுமல்ல, தினமும் இந்த மாதிரி குழந்தையை அடித்திருக்கிறார். அதனால் தான் இவளும் தினமும் அழுது கொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

செளதியில் ஒரு சட்டம் உள்ளது. குழந்தையை யாராவது அடித்தால், அது பெற்றோர்களாக இருந்தாலும் சரி, அது நிரூபணம் ஆனால் உடனடியாக அடித்தவர் கைது செய்யப்படுவார்கள். பெரிய சூப்பர் மார்கெட்களில் குழந்தைகள் சாக்லெட் போன்றவைகளை எடுத்து சாப்பிட்டால் கடைக்காரர்கள் ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். சட்டப்படி அவர்களை தடுக்கவும் கூடாது.

குழந்தையின் நிலைமையை பார்த்து எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. நேரிடையாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை பார்த்தேன். உடனடியாக அந்த ஆசிரியையை நான் பார்த்தாக வேண்டும், இல்லை என்றால் போலீசுக்கு தகவல் கொடுப்பேன் என்று கூறினேன். அந்த ஆசிரியை பீகாரை சேர்ந்தவர். 'பேபி தபஸூம்' என்று பெயர். பெயர் தான் பேபியே தவிர 5 பேபிகளுக்கு தாயாம்!

என்னை பார்த்தவுடன் "இந்த மதராஸி குழந்தைகளே இப்படிதான், ஹிந்தி தெரியாமல்..."என்று ஆரம்பித்தார். உடனே தலைமை அசிரியர் அவரை கடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டார். "நீங்கள் குழந்தையை அடித்ததால் ஒரு கன்னமே வீங்கி விட்டது. இப்படி ஒரு ஆசிரியை இந்த பள்ளிக்கே வேண்டாம்" என்றெல்லாம் கூறினார். அப்போது தான் அந்த அசிரியைக்கு விபரீதம் புரிந்தது.

தான் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் அவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பல முறை என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். நான் கடும் கோபத்தில் இருந்தேன். ஒரு கட்டத்தில் எனது காலில் விழாத குறையாக அவர் கேட்டுக்கொண்டார். "சரி, இப்போது நான் போகிறேன். ஆனால் இந்த மாதிரி எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால் நான் பள்ளிக்கு வர மாட்டேன், நேராக காவல் துறையிடம் தான் செல்வேன்" என்று எச்சரித்து விட்டு வந்தேன். அதற்கு பிறகு அந்த பள்ளியில் எந்த அசிரியையும் எந்த குழந்தையையும் அடிப்பதில்லை என்று கேள்விப்பட்டேன்.


நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் சென்று விட்டன. ஒவ்வொரு வகுப்பையும் கடந்து அடுத்த வகுப்புக்கு இவள் செல்லும் போதும், "அட, இப்போது தானே பள்ளியில் சேர்த்தோம்" என்று நினைப்பேன். கடினமான பாடங்களுக்கு டியூஷன் வைத்தோம். சில பாடங்களை நானே சொல்லி கொடுப்பேன்.


இப்போது எனது பெண் 12ம் வகுப்பு முடித்து விட்டாள்.  யோசித்து பார்த்தால் பழைய நினைவுகள் எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கின்றன.

ஆயிற்று. இன்னும் சில வருடங்களில் அவள் பட்டப்படிப்பை முடித்து விடுவாள். அதற்கு பிறகு திருமணம் முடிந்து அவளுக்கும் குழந்தை பிறக்கும். ஒரு வேளை அவளது கணவனும் என்னை போன்று வேறு ஒரு பள்ளி வாசலில் பிளாட்பாரத்தில் விண்ணப்ப படிவத்துக்காக படுத்திருப்பானோ என்னவோ, யார் கண்டது. ஒரு இலை உதிர மற்றொரு இலை மரத்தில் வளர்வது இயற்கை தானே. 

இப்போது நினைத்து பார்க்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் எனக்கு சொல்லி கொடுத்த பாடங்களுக்கும் நான் செய்கின்ற வேலைக்கும் சம்பந்தமே இல்லை. ஏதோ படித்தோம், எங்கேயோ வேலைக்கு  சேர்ந்து இப்போது என்னவோ செய்கிறோம். இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் பள்ளி நாட்களில் இருந்த அந்த ஆனந்தம், அந்த குதூகலம், அந்த இன்பம் திரும்ப கிடைக்குமா? இல்லை பணத்துக்காக ஆன்மாவை விற்று விட்டோமா? தெரியவில்லை.  





8 comments:

Arul said...

அருமை. எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டது.

Temple Jersey said...

Super

Expatguru said...

Temole Jersey,

Thanks.

இராஜராஜேஸ்வரி said...

பொறியாளனையும் பிளாட்பாரத்தில் படுக்க வைத்த மாபெரும் சமத்துவபுரம்

geethasmbsvm6 said...

பல பெற்றோர்களும் குழந்தைகளைப்பள்ளிக்கு அனுப்ப எவ்வளவு சிரமப் பட்டிருக்கிறார்கள்! எங்களை இறைவன் அப்படி எல்லாம் கஷ்டப் படுத்தவில்லை என்பதால் இறைவனுக்கு நன்றி.

Expatguru said...

வருகைக்கு நன்றி, கீதா சாம்பசிவம் அவர்களே. இந்த நிலைமைக்கு யார் காரணம் - தரமான பள்ளிகளை அமைக்காத அரசாங்கமா, தனியார் பள்ளியில் படித்தால் தான் நல்லது என்ற பெற்றோரது எண்ணமா, தெரியவில்லை. இன்றைய தேதியில் வேறு எந்த வியாபாரம் ஓடுகிறதோ இல்லையோ, ஒரு பள்ளியை ஆரம்பித்தால் பிய்த்து கொண்டு போகும் என்பது மட்டும் நிதர்சனம்.

அப்பாதுரை said...

எத்தனை தடவை படித்தாலும் சுவாரசியமாகவே இருக்கிறது.

Expatguru said...

மிக்க நன்றி, அப்பாதுரை.