Tuesday 23 April 2013

விட்டதும் பெற்றதும்

இன்று எனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். தனது தங்கை ஏர் இந்தியா விமானத்தில் சமீபத்தில் பயணம் செய்தாரம். விமானம் தரை இறங்கிய போது பெட்டியை காணவில்லையாம். இவர் தவித்து போய் புகார் கொடுத்தாராம். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு  விமான நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாம். இவர் சென்று பார்த்தால் கிழிந்த நிலையில் தனது பெட்டியை கண்டாராம்.

"அவர் ஏன் அந்த பெட்டியை பெற்றுக்கொண்டார், புகார் செய்யவில்லையா?" என்று நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், "யார் இதற்கெல்லாம் அலைவது என்று விட்டு விட்டாள்", என்றார்.

2007ம் வருடம் என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து செளதியில் உள்ள தமாமுக்கு இலங்கை வழியாக சென்றேன். கொழும்பில் ஒரு 5 நாட்கள் தங்கி விட்டு, ஊர் சுற்றி பார்த்து விட்டு அப்படியே செளதிக்கு செல்வதாக திட்டம். சுனாமி முடிந்து சில மாதங்களே ஆகியிருந்த படியால் பல சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு செல்வதற்கே பயப்பட்டு கொண்டிருந்தனர். நான் பயணச்சீட்டை வாங்கும்போதே ஒரு முறைக்கு பல முறை விசாரித்து கொண்டதில் 40 கிலோ வரை சாமான்களை எடுத்து செல்லலாம் என்று கூறியிருந்தனர். அதன்படி, சென்னையிலிருந்து கிளம்பும்போது 37 கிலோ சாமான்களை எடுத்து சென்றேன். மறு பேச்சு பேசாமல் சென்னையில் ஏற்றி கொண்டனர்.

கொழும்பு சென்று 5 நாட்கள் சுற்றுலா முடிந்த பின் தமாமுக்கு செல்ல விமான நிலையத்துக்கு வந்தேன். கண்டிப்பாக 20 கிலோவுக்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்று கூறிவிட்டனர். "பயணச்சீட்டை வாங்கும் போதும் சென்னையிலும் இதை பற்றி யாருமே ஒன்றும் கூறவில்லை, இப்போது நான் எனது சாமான்களை யாரிடம் கொடுப்பேன்?" என்று கேட்டேன். நான் எவ்வளவோ மன்றாடியும் முடியவே முடியாது என்று அந்த விமான நிறுவன பெண் கூறிவிட்டாள். அது மட்டுமல்லாமல், நான் தமிழில் எனது மனைவியிடம் பேசுவதை பார்த்து விட்டு, கிண்டலாக மற்ற பெண்களிடம் என்னை பற்றி சிங்களத்தில் ஏதோ கூற அவர்கள் அனைவரும் ஏளனமாக சிரித்தனர். 

இலங்கையில் நான் 3 கிலோவுக்கு ஊர் சுற்றி பார்த்த போது வாங்கிய சாமான்கள் வேறு வாங்கி விட்டேன். அப்போது கூட மொத்தம் 40 கிலோ எடை தான் ஆயிற்று. சாமான்களை நான் எங்கு தான் விடுவது? வேறு வழியே இல்லாமல் 20 கிலோவுக்கு உண்டான அதிகப்படி பணத்தை  அபராதமாக அழுது விட்டு விமானத்தில் ஏறினேன். நல்ல வேளை என்னிடம் கடன் அட்டை இருந்ததால் தப்பித்தேன்.


தமாமில் இறங்கிய பின்பும் என்னால் இதை மறக்க முடியவில்லை. பணம் கட்டியது ஒரு புறம், கொழும்பில் அந்த பெண் என்னை எல்லோர் எதிரிலும் மிக கேவலமாக நடத்தியதில் அவமானத்தில் கூனி குறுகி விட்டேன். இவர்களை சும்மா விடக்கூடாது என்று மனதில் ஒரு வைராக்கியம் பிறந்தது.

ஆனது ஆகட்டும் என்று காரசாரமாக ஒரு  மின் அஞ்சலை எழுதினேன். நான் எப்படி இலங்கை விமான நிறுவனத்தினரால் ஏமாற்றப்பட்டேன் என்றும், நான் எவ்வளவு எடுத்து கூறியும் அவர்கள் என்னை அவமானப்படுத்தியதையும், சுனாமி முடிந்து சில மாதங்களே ஆன இலங்கையில் சுற்றி பார்க்க வந்த எனக்கு நல்ல பாடம் என்றும் கன்னா பின்னாவென்று ஆவேசமாக எழுதிவிட்டேன். எழுதி முடித்தவுடன் இதை யாருக்கு அனுப்புவது என்று எண்ணினேன். இலங்கை விமான நிலைய அதிகாரிகளுக்கு இதை அனுப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை. அவர்களை விட மேலானவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று யோசித்தேன். 


கூகிள் தான் இருக்கவே இருக்கிறதே. இலங்கை அரசின் வலை தளத்தை நோண்டி பார்த்தேன். சுற்றுலா துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என்று அனைவரது மின் அஞ்சல்களும் இருந்தன. அனைவருக்கும் சகட்டு மேனிக்கு அதே மின் அஞ்சலை அனுப்பினேன். "நான் பயணச்சீட்டை வாங்கும் போதே  பல முறை விசாரித்தேன். சென்னையில் விமானத்தை ஏறும்போது கூட யாரும் எதுவும் கூறவில்லை. கொழும்பில் தான் என்னை தவிக்க விட்டனர். அது மட்டும் இல்லாமல் என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டனர். குடும்பத்துடன் இருந்ததால் என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதே அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?" என்றெல்லாம் எழுதியிருந்தேன்.

பிரஷர் குக்கரிலிருந்து விடுபட்ட நீராவி போல எனது கோபத்தை எல்லாம் கோர்த்து அவர்களை ஒரு வாங்கு வாங்கி விட்டேன். சரி, மின் அஞ்சலை அனுப்பியாகி விட்டது. இனி என்ன செய்வது? என்னால் என்னதான் செய்ய முடியும்? இனிமேல் ஸ்ரீலங்கா விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று முடிவு செய்தேன். என்னால் அவ்வளவுதானே முடியும்?

வாழ்க்கையில் பல முறை நம்மை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை பார்த்து இப்படி பொங்கியது உண்டு. 'நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே' என்ற வெறுப்பை ஒவ்வொரு சாதாரண மனிதனும் கண்டிப்பாக எப்போதாவது நினைத்திருப்பான். இந்த கையாலாகாத்தனம் நடுத்தர வர்கத்தினர் பெற்ற சாபமா? "தனி மனிதனாக நம்மால் என்னத்தை சாதித்து விட முடியும்" என்கிற தவிப்பா?

இந்த மின் அஞ்சல் அனுப்பி அந்த நிகழ்ச்சியை நானும் மெல்ல மெல்ல மறக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு பத்து நாட்களுக்கு பிறகு திடீரென்று எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. ஸ்ரீலங்கா விமானத்தின் மிக மிக உயர்மட்ட அதிகாரியிடமிருந்து வந்திருந்தது. அவசரம் அவசரமாக அதை திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்களை இப்படி அலைக்கழித்திருக்க கூடாது. இது எங்களது தவறு தான். நீங்கள் 20 கிலோவுக்கு கட்டிய அதிகப்படி அபராதத்தை உங்களது செளதி முகவரிக்கு அனுப்புகிறோம்." என்று கூறியிருந்தார்.

வாடி, வா. உனது மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் எழுதியதால் அலறி அடித்து கொண்டு பதில் போட்டிருக்கிறாய் அல்லவா?

நான் உடனடியாக பதில் எழுதினேன். "நான் அபராதமாக கட்டிய பணத்தை எனது சென்னை முகவரிக்கே இந்திய ரூபாயாக அனுப்பிவிடுங்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த பிரச்னை இதோடு முடிவடைந்து விடவில்லை. எனது பணத்தை தான் நீங்கள் திரும்ப கொடுப்பதாக கூறியிருக்கிறீர்கள். என்னை அலைக்கழித்ததற்கு நீங்கள் எப்படி இழப்பீடு கொடுக்க போகிறீர்கள்?" என்று மிகவும் காட்டமாக கேட்டு எழுதினேன். ஆனால் இம்முறை அந்த அதிகாரிக்கு மட்டும் மின் அஞ்சலை எழுதினேன். மன்னிப்பு கேட்டு விட்டானே, போனால் போகிறான் என்று தான்.

ஒரு மணி நேரத்தில் அதற்கு பதில் மின் அஞ்சல் வந்தது. "நீங்கள் கேட்டு கொண்டபடி உங்களுடைய பணத்தை சென்னையில் இருக்கும் ஸ்ரீலங்கா விமான நிறுவனம் உங்களது வீட்டுக்கு வரைவோலையாக அனுப்பும்படி நாங்கள் ஆணையிட்டிருக்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட வருந்தத்தக்க அனுபவம் மீண்டும் இனி யாருக்கும் நடக்க கூடாது என்று விமான நிலையத்தினருக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளோம். இத்துடன் ஒரு கூப்பனை அனுப்பியுள்ளோம். எங்களுடைய சிறிய பரிசாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஸ்ரீலங்கா விமானத்தில் நீங்கள் பயணம் செய்யும் போது இந்த கூப்பனை விமான பணிப்பெண்ணிடம் கொடுக்கவும். எங்களது Duty Free கடையிலிருந்து  60 டாலருக்கு மதிப்பிலான உங்களுக்கு விருப்பமான எந்த பொருளையும் நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். நீங்கள் பயணம் செய்யப்போகும் விமான விபரங்களை எங்களுக்கு கூறினால், அந்த பொருளை உங்களுக்கு நாங்கள் கொடுத்து விடுகிறோம்" என்றெல்லாம் அதில் எழுதியிருந்தது.

செளதியிலிருந்து திருச்சிக்கு எனது நண்பன் கொழும்பு வழியாக அதற்கு அடுத்த வாரம் செல்ல இருந்தான். நான் அவனது பயண விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பினேன். "எனது சார்பாக எனது நண்பனிடம் ஒரு perfume பாட்டிலை கொடுத்து விடவும்" என்று எழுதியிருந்தேன்.

விடுமுறைக்கு சென்று திரும்பிய நண்பன் அந்த perfume பாட்டிலை என்னிடம் கொடுத்தான். ஆனால் அதை விட சுவாரசியம் என்ன தெரியுமா? அந்த பயணத்தில் அவனுக்கு ராஜ மரியாதையாம். இவனது இருக்கைக்கு வந்து மிக மிக பணிவுடன் விமான பணிப்பெண் அந்த perfume பாட்டிலை கொடுத்தாளாம். அது மட்டும் இல்லாமல், பயணம் முழுவதும் பத்து முறை இவனிடம் வந்து விசாரித்து விட்டு போனாளாம்! எல்லாம் ஒரு புகார் செய்த வேலை! எனது நண்பனுக்கு பதிலாக நானே இலங்கை விமானத்தில் மீண்டும் சென்றிருந்தால் எனக்கும் "ராஜ மரியாதை" கிடைத்திருக்குமோ அல்லது ஜனாதிபதிக்கு மின் அஞ்சல் எழுதியதற்காக  விமானம் கொழும்பில் இறங்கியவுடன்  "ராஜாதிராஜ" மரியாதை என்று உள்ளே தள்ளி இருப்பார்களோ, தெரியாது.

நமது பக்கம் நியாயம் இருக்கும் போது நாம் துவண்டு விடக்கூடாது. ஒரு வேளை நான் ஸ்ரீலங்கா விமான அதிகாரிக்கு மட்டும் எழுதியிருந்தால் அதற்கு பதில் வந்திருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. இந்த அனுபவத்தால் நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு மேல் உள்ளவர்களின் கவனத்துக்கு அதை கொண்டு செல்லுங்கள். உங்களது பக்கத்து நியாயத்தை கூறுங்கள். அவர்கள் நாக்கை பிடுங்கி கொண்டு சாகிற மாதிரி கேளுங்கள். மிக முக்கியமாக, அந்த புகாரை பல பெரிய மனிதர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி பார்த்து கொள்ளுங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை யாராலும் பறிக்க முடியாது. இது நிச்சயம்!


 

Saturday 6 April 2013

தலைப்பு செய்திகளும் மொழி பெயர்ப்புகளும்

"அலுவலகத்தில் படு பயங்கரமான வேலை" என்று சொல்லி கொள்ள வேண்டும். அப்போது தான் உலகம் நம்மை மதிக்கும். எல்லோரும் கூறும் இந்த பொய்யை நானும் கூறுவது உண்டு. (அவ்வப்போது வேலையும் செய்வது உண்டு  - சொன்னால் நம்புங்கள்). அலுவலகத்துக்கு வந்த பின் முதல் வேலையே  'மாலை மலரை' காலையிலேயே படிப்பது தான். வெறும் தலைப்பு செய்திகளை ஒரு பத்து நிமிடம் புரட்டினால் பிறகு உண்மையாகவே வேலையில் ஆழ்ந்து விடுவேன். பொதுவாக தலைப்பு செய்திகளை பார்த்தாலேயே அதன் சாராம்சத்தில் உள்ளே இருக்கும் குப்பை தெரிந்து விடுவதால் மேற்கொண்டு நான் செய்தியை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

வழக்கம் போல இன்றும் தலைப்பு செய்திகளை பார்க்கும் போது ஒரு செய்தி கண்களில் பட்டது. "கம்பத்தில் கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை" என்பது தான் அந்த செய்தி. நகை கொள்ளை என்று எழுதி இருந்தால் அந்த செய்தி அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது. நான் தான் தலைப்பு செய்தியை மட்டும் பார்ப்பவன் ஆயிற்றே! அது என்ன கம்பத்தில் கோலம் போட்ட பெண்? ஒரு பெண் எப்படி கம்பத்தில் கோலம் போட முடியும்? ஒரு வேளை அந்த பெண்ணுக்கு மரை கழன்று விட்டதா? கம்பத்தில் சிறுவர்கள் கிறுக்கத்தானே செய்வார்கள்? கோலம் போட போயும் போயும் கம்பம் தானா கிடைத்தது? அப்படி கோலம் போடுபவளின் நகையை திருடன் எப்படி பறித்தான்?

இப்படி எல்லாம் என் மனதில் எண்ண அலைகள் தோன்றியவுடன் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்த செய்தியின் விபரத்தை படிக்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு தான் உண்மை விளங்கியது. கம்பம் என்ற ஊரில் ஒரு பெண் கோலம் போட்டு கொண்டிருந்தாள். அவளின் நகையை தான் திருடன் பறித்தானாம். நான் தான் வேறு விதமாக எண்ணி விட்டேன். ஹி, ஹி!

http://www.maalaimalar.com/2013/04/05114028/Cumbam-near-woman-attack-jewel.html


இது போன்ற பல தலைப்பு செய்திகளில் நான் ஏமாந்திருக்கிறேன். சில தலைப்பு செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் போது பயங்கர நகைச்சுவையாக இருக்கும். அதே போல, சில செய்திகள் நாட்டுக்கு 'மிக உபயோகமானவையாக' இருக்கும். உதாரணத்துக்கு, நான் கல்லூரியில் படிக்கும் போது தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தியை மறக்கவே முடியாது. அது என்னவென்றால்,

"பிரசவ வலி!! பாகியராஜ் மனைவி பூர்ணிமாவுக்கு!!"

சத்தியமாக சொல்கிறேன், உலகின் வேறு எந்த செய்தித்தாளிலும் வராத தலைப்பு செய்தி இது. அதுவும் முதல் பக்கத்தில். செய்தியை சற்று மேலும் படித்தால் அதை விட சுவாரசியமாக இருந்தது.

"நடிகை பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா ஜெயராமன் கர்பமாக இருந்தார் என்பது தெரிந்ததே (!!)".

 இதற்கு அடியில் சிறியதாக குட்டி தலைப்புகள்.

"பிரசவ வலி". 

இன்று காலை அவருக்கு பிரசவ வலி எடுத்தது. 

"ஆஸ்பத்திரியில் அனுமதி"

பிரசவ வலி எடுத்தவுடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

"ஆணா பெண்ணா?"

பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்"

இது போன்ற செய்திகளை கேவலம் என்று கூறுவதா சுவாரசியம் என்று கூறுவதா அல்லது நமது தரம் இவ்வளவு தான் என்பதா, எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பக்கத்தில் 'தினத்தந்தி' என்று கொட்டை கொட்டையாக  எழுத்து இருக்கும் அல்லவா, அதன் மேல், "தினத்தந்தி வெளி நாடுகளிலும் பிரபலம் பெற்றது" என்று எழுதியிருந்தார்கள். எதற்கு என்று தான் தெரியவில்லை.

தமிழ் பத்திரிகைகள் தான் இது போல உள்ளன என்று இல்லை. தொலைக்காட்சியிலும் இது போன்ற முத்துக்களை நான் பார்த்திருக்கிறேன் . இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த சமயம். எங்கு பார்த்தாலும் அரசை புகழ்ந்து வாசகங்கள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி வெண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரம் செய்வதற்காக ஹிந்தியில் ஒரு வாசகத்தை தொலைக்காட்சியில் முதலில் காண்பித்தார்கள். அந்த வாசகம் என்னவென்றால்,


अगला बच्चा कब्?
पॆहला स्कूल् जायॆ तब्

"அகலா பச்சா கப், பெஹலா ஸ்கூல் ஜாயே தப்|"

இது தான் அந்த வாசகம்.

தமிழ் நாட்டில் தான் மூன்று தலைமுறைகளாக ஹிந்தியின் வாசனையே வராமல் நமது அரசியல்வாதிகள் தடுத்து விட்டனரே. அதனால்,
'இந்தி அரக்கியை' தெரியாத மகா ஜனங்களுக்கு இதன் மொழி பெயர்ப்பு என்னவென்றால்,

"அடுத்த குழந்தை எப்போது? முதல் குழ்ந்தை பள்ளிக்கு செல்லட்டும் அப்போது"

இப்படி இருந்திருக்க வேன்டும் மொழி பெயர்ப்பு. தமிழ் நாட்டில் தான் தமிழில் எழுதினாலோ பேசினாலோ தன்மான குறைவாயிற்றே, ஆங்கில புலமையை காட்டி விடவேண்டாமா? தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கூட ஆங்கிலத்தில் கூறி வாழ்த்திக்கொள்ளும் இனமல்லவா  நாம்!

திரையில் வந்த மொழி பெயர்ப்பு என்ன தெரியுமா?

"Next child when?
First go to school, then"

போகிற போக்கை பார்த்தால் இப்படி கூட தலைப்பு செய்திகள் வரலாம்

"விஸ்வனாதன் ஆனந்த் பம்பரத்தின் மேல் வலது பக்கத்தில்"

புரியவில்லையா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது வேறு ஒன்றும் இல்லை.

'Viswanathan Anand right on top" என்ற ஆங்கில தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு தான்.

என்னை நீங்கள் அடிக்க வருவதற்குள் நான் கிளம்புகிறேன்!