இரயில் நிலையத்தில் எல்லோரும் ஒன்றுமே நடக்காதது போல அவரவர் தத்தம் வேலைகளுக்கு அவசரம் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தனர். என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காக்கி சட்டை போட்ட ஒருவர் அடுத்த இரயிலின் வருகைக்காக நின்றுகொண்டு கைகளில் செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று, "ஐயா, இந்த மாதிரி பிணத்தை எல்லோரும் பார்க்கும் விதமாக போட்டிருக்கிறார்களே, இதை யாரும் அகற்ற மாட்டார்களா?" என்று கேட்டேன். அவர் கூறிய பதில் ரொம்ப விசித்திரமாக இருந்தது.
அதாவது வாஷி இரயில் நிலையத்தைலிருந்து புதிய பம்பாயில் உள்ள அனைத்து இரயில் நிலையங்களும் இரயில்வேயின் கீழ் வராதாம். CIDCO என்ற நிறுவனத்தின் கீழ் வருமாம். (இரயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் கூட தனியார் ஒப்பந்தக்காரர்கள் தான்). புதிய பம்பாயில் எந்த இரயில் நிலையத்திலும் விபத்தில் சிக்கிய பிணங்களை வைப்பதற்கு தனி அறை ஒன்றும் இல்லையாம். அதனால் வேறு வழி இல்லாமல் தடத்தின் ஓரத்திலேயெ வைத்து விட்டு காவல் துறைக்கு தகவல் அனுப்பி விட்டார்களாம்.
எனக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. கடவுளே! யார் பெற்ற பிள்ளையோ! இப்படி அனாதையாக கேட்பாரற்று கிடக்கிறானே! கண்ணதாசன் பாடிய "நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி! தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் நாலு பேருக்கு நன்றி" என்ற வரிகள் மனதில் வந்தன. இவனுடைய அந்த நாலு பேர் எங்கே சென்றார்கள்? அவனும் சிறிது நேரத்திற்கு முன் என்னை போல ஒரு இரயில் பயணி தானே! இப்போது "அவன்" "அது" வாகி விட்டானே! மனித நேயம் இறந்து விட்டதா? அவனுக்கும் மனைவி, குழந்தை, அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி என்று இருப்பார்களே! கணவன் வேலைக்கு சென்றிருக்கிறான் என்று மனைவி நினைத்துக்கொண்டிருப்பாளே! இப்படியெல்லாம் யோசித்து கொண்டிருக்கையிலேயே நான் செல்ல வேண்டிய வண்டி தடத்துக்குள் நுழைந்து விட்டது. அதில் ஏறி ஒரு வழியாக என்னுடைய அலுவலகத்தை வந்தடைந்தேன்.
ஆனால் வேலையில் மனதே லயிக்கவில்லை. சே! என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்! என்ன ஊர் இது! பணத்துக்காக தினமும் காலையிலிருந்து மாலை வரை எவனுக்கோ அடிமை வேலை செய்து விட்டு மனதை கல்லாக்கி கொண்டுள்ளார்களே? "மற்றவன் இருந்தால் என்ன, செத்தால் என்ன, நான் பணம் பண்ண வேண்டும், அவ்வளவுதான்" என்று இருக்கிறார்களே! இப்படி எல்லாம் எனது மனதில் எண்ண அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கின. மதிய உணவை சரியாக சாப்பிட முடியவில்லை. எனது நண்பர்களிடம் இதை பற்றி கூறினேன். அவர்களோ, "இதை பார்! தினமும் எவனாவது இரயிலில் அடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறான். அதற்காக நாம் வருத்தப்படுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையை வாழ முடியாது" என்றார்கள்.
என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. "இப்படி கூடவா ஈவு இரக்கமற்று இருப்பார்கள்! எனது இரயில் வந்தவுடன் நான் கூட சுயநலவாதியாக ஏறி விட்டேனே. ஆனால் நான் நினைத்திருந்தால் கூட என்ன செய்திருக்க முடியும்? இது ஒட்டுமொத்த சமுதாய சீர்குலைவா அல்லது தனி மனித ஒழுக்க சீர்கேடா? இப்படியாகப்பட்ட ஊரில் நாமும் இயந்திரத்தனமான வாழ்க்கையை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை நமக்கே இந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால் இது போல தான் ஆகுமோ" என்றெல்லாம் மனதுக்குள் ஓராயிரம் எண்ண ஓட்டங்கள்.
கிட்டத்தட்ட பம்பாய் நகரத்தின் மேல் ஒருவித வெறுப்புணர்ச்சியே ஏற்பட்டு விட்டது என்றே கூறலாம்.
வேலையில் மனது ஒட்டவில்லை என்பதால் மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்த உடனேயே வீட்டுக்கு கிளம்பி விட்டேன். அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பார்த்தால் நன்றாக மழை கொட்டிக்கொண்டிருந்தது. பலார்டு எஸ்ட்டேட்டிலிருந்து வீ.டீ. இரயில் நிலையம் வரை சோர்வுடன் நடந்து வந்தேன். வீ.டீ. இரயில் நிலையத்துக்குள் நுழைந்தவனுக்கு ஒரு அதிசயமான காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு நான் பார்த்தது....................(தொடரும்)
