Tuesday 27 May 2008

காந்திஜியின் கடிகாரம்

1940களில் நடந்த சம்பவம் இது. காந்திஜியை டெல்லியில் தனது மாளிகையில் நேரில் சந்திக்க மவுண்ட்பேட்டன் பிரபு விரும்பினார். முதன்முறையாக நடக்கப்போகும் இந்த சந்திப்பை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்தார் மவுண்ட்பேட்டன்.

காந்திஜியை தான் நேரில் சந்திக்க விரும்புவதாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தை படித்த காந்திஜி, தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பதில் எழுதினார். ஆனால், அதை உடனடியாக அனுப்ப வேண்டாம் என்றும், ஓரிரு நாட்களுக்கு பிறகு சாதாரண தபாலில் அனுப்பும்படியும் தனது உதவியாளரிடம் கூறினார். "நான் ஆங்கிலேயர்களின் அழைப்பிற்கு ஏங்குவதாக இந்த சின்ன பையன் நினைத்துவிட கூடாது" என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலேய பிரதமர் சர்ச்சில், காந்திஜியை "அரை நிர்வாண பிச்சைக்காரர்"(half naked fakir ) என்று தரக்குறைவாக வர்ணித்திருந்தார். காந்திஜியுடன் எந்த ஆங்கிலேய அதிகாரியும் எவ்விதமான தொடர்பும் வைத்திருக்க கூடாது என்று தடை வேறு விதித்திருந்தார். ஆனால், காலத்தின் கட்டாயத்தை யாரால் தான் வெல்ல முடியும்? இது எல்லாம் ம‌ன‌தில் இருந்தாலும், எவ்வித‌ க‌ச‌ப்புண‌ர்ச்சியையும் காந்திஜி வெளியே காண்பிக்க‌வில்லை.

க‌டித‌ம் கிடைத்த‌ ம‌வுண்ட்பேட்ட‌ன் மிக‌வும் குஷியாகிவிட்டார். த‌ட‌புட‌லான‌ ஒரு வ‌ர‌வேற்பை அவ‌ருக்கு த‌ர‌வேண்டும் என்று எல்லா ஏற்பாடுக‌ளையும் செய்தார். காந்திஜிக்காக டெல்லிக்கு த‌னியாக‌ ஒரு விமான‌த்தையும் (chartered flight) ஏற்பாடு செய்தார். ஆனால், எளிமையே உருவான‌ காந்திஜி, அதை நிராக‌ரித்து விட்டு வ‌ழ‌க்க‌ம் போல‌ இர‌யிலில் மூன்றாம் வ‌குப்பு பெட்டியிலேயே ப‌ய‌ண‌ம் செய்தார்.

டெல்லி வந்து சேர்ந்த காந்திஜியை பார்த்த மவுண்ட்பேட்டன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பை தன்னால் மறக்க முடியாது என்று வர்ணித்தார். காந்திஜியை மிகவும் ஆக்ரோஷமான மனிதர் என்று நினைத்த மவுண்ட்பேட்டனுக்கும் அவரது மனைவிக்கும் அவரின் எளிமையும் அன்பும் மிக வித்யாசமாகவும் வியப்பாகவும் இருந்தது.

ஆனால் இந்த முதல் சந்திப்பின்போது காந்தியின் முகத்தில் ஒருவித சோகம் இருப்பதை உணர்ந்தார் மவுண்ட்பேட்டன். தனது விருந்தோம்பலில் ஏதாவது குறை இருந்ததோ என்று எண்ணி அதை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

தனது மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார் காந்திஜி. "எனக்கு என்று நான் எந்த பொருளையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. என்னுடைய சொத்து என்று நான் கூறிக்கொள்ள கூடியது நான் உடுத்திக்கொண்டிருக்கும் துணி, கீதை புத்தகம், ராட்டை மற்றும் இடுப்பில் தொங்கும் என்னுடைய கடிகாரம் தான். காலத்தின் மதிப்பை உணர்த்துவதற்காகவே அந்த கடிகாரத்தை எப்போதும் இடுப்பிலேயே நான் சொருகிக்கொண்டிருப்பேன். ஆனால் இன்று இரயிலில் நான் வரும்போது யாரோ அந்த கடிகாரத்தை திருடிவிட்டார்கள்" என்று மிக வருத்தத்துடன் கூறினார்.

"கடிகாரம் திருடு போனது கூட எனக்கு பெரிதாக படவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களின் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று தான் பயமாக இருக்கிறது" என்று காந்திஜி கூறும்போது அவரது தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்து விட்டன.

இது நடந்து முடிந்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் சபர்மதி ஆசிரமத்துக்கு ஒரு மனிதன் வந்தான். காந்திஜியை சந்திக்க விரும்புவதாக அவரின் உதவியாளரிடம் கூறினான். "அவருடைய கடிகாரத்தை திருடியவன் நான் தான். வறுமையால் நான் அறியாமல் செய்து விட்ட இந்த பிழையை காந்திஜி மன்னிப்பாரா?" என்று கேட்டான்.

விஷயத்தை கேள்விப்பட்ட காந்திஜி உடனேயே தனது அறையிலிருந்து வெளியே வந்து அந்த மனிதனை நெஞ்சார கட்டி தழுவிக்கொண்டார். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. காந்திஜியின் நம்பிக்கை வீண் போகவில்லை. வாய்மையே வெல்லும்!
(ஆதாரம்: Freedom at Midnight by Lapierre and Collins )

No comments: