Tuesday, 19 September 2017

விடை பெறுகிறேன்

2007 முதல் இந்த வலைப்பதிவில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறேன். எனக்கு இதனால் கிடைத்த நண்பர்கள் ஏராளம். விளையாட்டாக ஆரம்பித்த எனக்கு  நீங்கள் கொடுத்த ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் என்னை திக்குமுக்காட வைத்து விட்டன.

காலத்தின் சுழற்சியில் வந்து போவது பல. அதில் இந்த ப்ளாகரும் ஒன்றோ? பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இனி வரும் பதிவுகளை முகநூலில் பதிவிட முடிவு செய்துள்ளேன். என்னை எழுத தூண்டியது நீங்கள் கொடுத்த ஊக்கமும் தமிழின் மேல் எனது தீராத ஈடுபாடும் தான். தயவு செய்து முகநூலில் https://www.facebook.com/madrasthamizhan/ என்ற முகவரியில் 'Like' மற்றும் 'Follow ' பொத்தான்களை அழுத்திவிடுங்கள். இதை ஒரு முறை செய்தால் போதும். அதன் பின் புதிய பதிவுகள் உங்களுடைய முகநூலிலேயே நீங்கள் வாசிக்கலாம். இங்கிருந்து விடை பெறுகிறேன் நண்பர்களே! முகநூலில் சந்திப்போம்.

Saturday, 29 April 2017

மாறிய பாதைகள்

சமீபத்தில் பிரபல பாடகருக்கும் இசை அமைப்பாளருக்கும் நடந்த மனஸ்தாபத்தை பற்றி படித்த போது அவர்களது 40 கால நட்புக்கு என்ன ஆயிற்று என்ற கேள்வி பலரது மனதில் உறுத்தியது. அவர்களை பற்றி தெரியாது. ஆனால் 22 வருடங்களுக்கு முன் என்னை மிகவும் மனதளவில் பாதித்த ஒரு அனுபவம்தான் நினைவில் வந்தது.

Saturday, 18 February 2017

'பைலட்' போகின்றது

"போவியா மாட்டியா?" என்று பூசாரி வேப்பிலையால் 'பேய் பிடித்திருந்த' எங்கள் வீட்டு வேலைக்காரி சரஸ்வதியை அடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. 

Tuesday, 17 January 2017

புத்தியுள்ள மனிதரெல்லாம்

பல வருடங்களுக்கு பிறகு எனது கல்லூரி நண்பன் சபரி என்னை தொடர்பு கொண்ட போது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.


Monday, 28 March 2016

மறக்கமுடியாத மனோஹர் !

சிறிய வயதில் வீட்டில் இருந்த ஃபிலிப்ஸ் வானொலிதான் எங்களுக்கு வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய ஒரே சாதனம்.

Monday, 16 November 2015

நெஞ்சம் மறப்பதில்லை

சென்னையில் வீட்டை ஒழித்து கொண்டிருந்த போது ஒரு நாள் பழைய கண்டா முண்டா சாமான்களை எல்லாம் வெளியே எறிந்து கொண்டிருந்தேன். 

Friday, 28 August 2015

சலாம் பம்பாய்-9

பம்பாயில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது தினமும் நேருல் என்ற இடத்திலிருந்து வீ.டி. வரை மின்சார இரயிலில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. தினமும் இரயிலிலேயே 3 மணி நேரம் சென்று வர ஆகி விடும். நேருல் என்பது புதிய பம்பாயில் இருப்பதால் இரயில் நின்றவுடன் உடனே கிடைத்துவிடும் (இப்போது எப்படி என்று தெரியவில்லை). ஏறி உட்கார்ந்து கொண்டால் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பிறகு வீ.டீ. இரயில் நிலையம் வந்து சேரும். 

தினமும் நான் செல்லும் இரயிலில் அதே நேரத்தில் சக பயணிகள் சிலர் வழக்கமாக செல்வார்கள். அதனால் பலர் நண்பர்கள் ஆனார்கள். ஒன்றரை மணி நேரம் பயணத்தை பலர் பல விதமாக கழிப்பார்கள். சிலர் ஏறி உட்கார்ந்த உடனே தூங்க ஆரம்பித்து விடுவார்கள். சிலர் அரட்டை கச்சேரியில் ஈடுபடுவார்கள். சிலர் சீட்டு கச்சேரியில் இறங்கி விடுவார்கள். ஆனால் என்னால் மறக்க முடியாதது சிலர் பஜனை செய்து கொண்டே வந்தது தான்.


இதற்கென்றே ஒரு கோஷ்டி உண்டு. பஜனை என்றால் சாதாரண பஜனை இல்லை. வாத்தியங்களோடு பாடுவார்கள். கையில் தபலா, டோலக், ஜால்ரா என்று 'பக்கா'வாக இருக்கும். ஜால்ரா என்றால் சிறியது இல்லை. ஐயப்பன் கோவில்களில் சண்டா மேளத்துடன் பெரியதாக இருக்குமே, அந்த ஜால்ரா. அதை 'ஜல் ஜல்' என்று வாசித்து கொண்டே வருவார்கள். ஆரம்பத்தில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நான் அந்த பெட்டியில் பயணம் செய்தேன். அதில் இரண்டு பேர் தமிழர்கள். இருவரின் பெயரும் பாலசுப்ரமணியன். இருவருமே பஜனையில் ஈடுபடுபவர்கள். அதனால் ஒருவரின் பெயர் பஜனை பாலு என்றும், இன்னொருவரின் பெயர் 'அகண்ட பஜனை பாலு' என்றும் வைத்திருந்தார்கள். 



சில நாட்களுக்கு பிறகு போரடிக்க ஆரம்பித்து விட்டது. அதுவும் இல்லாமல் பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பது போல அந்த பஜனை கோஷ்டியினர் கத்தி பாடியதால் எனக்கு பிடிக்காமல் போய் விட்டது. அதனால் அந்த பெட்டியை விட்டு விட்டு வேறொரு பெட்டியில் பயணம் செய்ய தொடங்கினேன். 



கூட பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் சொந்த கதை சோக கதையை சொல்லி கொண்டு வருவார்கள். சிலர் அல்டாப்பு பேர் வழிகள். தொண்ணூறுகளில் மொபைல் தொலைபேசி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட நேரம். விலை மிக மிக அதிகமாக இருக்கும். நோக்கியா போன் தான் அப்போதெல்லாம். கிட்டத்தட்ட ஒரு ஜியாமெட்ரி பாக்ஸ் அளவில் இருக்கும். அந்த காலத்தில் சாதாரண landline வைத்திருப்பதே அபூர்வம். தெருவுக்கு ஒருவர் வீட்டில் தான் ஃபோனே இருக்கும். இதில் மொபைல் என்றால் சாதாரண மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாது.


அதை கையில் வைத்து கொண்டு சிலர் "நான் ஜி.டி.பி. நகரில் இருக்கிறேன். நீ என்ன அந்தேரியில் இருக்கிறாயா?" என்று அந்த பெட்டியில் எல்லோருக்கும் தன்னிடம் மொபைல் இருக்கிறது என்று காட்டி கொள்வதற்காக பீற்றிக்கொள்வார்கள். ஒரு இரண்டு மூன்று வருடங்களில் நிலைமை தலைகீழாகி பிச்சைக்காரர்கள் கையில் கூட மொபைல் இருக்கும் அளவிற்கு நிலைமை மாறி விட்டது வேறு விஷயம். எத்தனை வினோதமான மனிதர்கள்?

தினமும் மாலை திரும்பி வரும்போது குர்லா இரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்கார கும்பல் ஏறும். சொல்லி வைத்தாற்போல நான் வழக்கமாக ஏறும் பெட்டியிலேயே அவர்களும் ஏறுவார்கள். பிச்சைக்காரர்கள் என்று பெயர்தானே தவிர, ஒவ்வொறுவர் கையிலும் ஒரு "வாத்தியம்" இருக்கும். அதிலும், கொட்டாங்குச்சியால் வயலின் மாதிரி செய்யப்பட்ட ஒரு வாத்தியம் வித்யாசமாக இருக்கும். இரயிலில் ஏறிய கும்பல் கிடைத்த இடத்தில் (தரையில் தான்) உட்கார்ந்து கச்சேரி ஆரம்பித்து விடுவார்கள். 

சும்மா சொல்லக்கூடாது, அவர்களின் இசை உண்மையிலேயே இனிமையாக இருக்கும். ஆரம்பத்தில் அவர்களின் அழுக்கு தோற்றத்தை பார்த்து முகம் சுளிப்பவர்கள் கூட பிறகு சுதாரித்துக்கொண்டு கச்சேரியை கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வேலையிலிருந்து களைத்து திரும்புவோருக்கு இந்த 'இன்னிசை' விருந்து உற்சாகமளிப்பதாகவே இருந்தது. 


பலர் இந்த கூட்டத்தின் இசை மழைக்கு அடிமை ஆகிவிட்டிருந்தனர். அவர்கள் பாட ஆரம்பித்ததுமே அந்த பெட்டியே குதூகலமாகி விடும். ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சிலர் பாடலை ரசித்து கொண்டே ஒரு கையை வெளியே விட்டு இரயில் பெட்டியில் தாளம் போடுவார்கள். அந்த அளவுக்கு அவர்களின் இசை அனைவரையும் கட்டி போட்டிருந்தது.


பழைய பாடல்களையே அவர்கள் வாசிப்பார்கள். அதுவும் 70களில் வெளி வந்த திரைப்பட பாடல்களிலேயே வல்லுனர்கள் ஆகிவிட்டனர். தினமும் இவர்களுடைய பாடல்களை ரசிப்பதற்கென்றே நான் ஏறும் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருக்குமோ என்று கூட தோன்றும். இசை ஞானத்துக்கு வறுமை தடை இல்லையே! உள்ளத்தை தொடும் சில பாடல்களில் நான் மெய் மறந்திருக்கிறேன். உண்மையிலேயே, இறைவன் இவர்களுக்கு வறுமையை ஏன் கொடுத்தான் என்று தெரியவில்லை. சரியான வாய்ப்பு இருந்திருந்தால் இவர்களும் சுசீலா, எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா போன்று மிக பெரிய பாடகர்களாக வந்திருப்பார்கள். 

வாஷி இரயில் நிலையம் வரை தினமும் இந்த கச்சேரி தொடரும். பிறகு கூட்டக் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்போது ஒரு சிறிய பெண் ஒரு டப்பாவை தூக்கிக்கொண்டு ஒவ்வொறுவரிடமும் சென்று காசு கேட்பாள். பலர் காசு போடுவார்கள். சிலர், அந்த பெண் வரும்போது காசு போடுவதை தவிர்க்க முகத்தை திருப்பி வைத்துக்கொள்வார்கள். அந்த சிறுமியின் முகத்தில் சலனமே இருக்காது. 7 வயதிலேயே, புத்தகப்பையை சுமக்க வேண்டிய கைகள் வயிற்றை கழுவ பிச்சை டப்பாவை சுமக்க ஆரம்பித்து விட்டதனால் வந்த முதிர்ச்சியோ? 'கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்று ஒளவையார் சும்மாவா பாடியிருக்கிறார்?

இப்படி நாட்கள் ஓடிக்கொண்டிருந்த போது யாருமே எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று ஒரு நாள் "பறக்கும் படை" காவல்காரர்கள் அந்த பெட்டியினுள் நுழைந்தனர். தடியால் இவர்களை அடித்து இழுத்து சென்றனர். அதற்கு பிறகு இவர்களை பார்க்கவே முடியவில்லை.

பல நாட்கள் இவர்கள் திரும்பி வருவார்களா என்று ஏக்கத்துடன் எனது கண்கள் தேடும். அவர்கள் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்ற எண்ணம் என் மனதில் ஓடும். என்றைக்காவது திரும்பி வரமாட்டார்களா என்ற ஏக்கத்தில் பல நாட்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். கடைசி வரை அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.  


முன்பின் தெரியாத அவர்களுக்காக‌ மனம் அழுதது. கடவுளே, இவர்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். அற்புதமாக பாடிய அந்த ஏழு வயது சிறுமிக்கு ஒரு நல்ல எதிர்காலம் வர வேண்டும். 



வாழ்க்கையில் நாம் தினமும் பல பேரை சந்திக்கிறோம். பலருடன் பழகுகிறோம். சிலர் நம்மிடம் இன்னும் பழக மாட்டார்களா என்று மனம் ஏங்க வைக்கும். இன்னும் சிலர் ஏன் பழகுகிறார்கள் என்று நினைக்க தோன்றும். ஒரு வார்த்தை கூட பேசாமல் பழகாமல் இது போன்ற சிலர் எங்கிருந்தோ வந்து ஒரு இனிமையான தாக்கத்தை மனதில் ஏற்படுத்தி உடனேயே சென்று விடுகிறார்கள். தினமும் பல பாதைகளில் பல இரயில்கள் செல்கின்றன. ஏதாவது ஒரு பயணத்தில் என்றாவது ஒரு நாள் இவர்களை நான் சந்திப்பேனா? தெரியவில்லை நண்பர்களே! 




Wednesday, 6 May 2015

சலாம் பம்பாய் - 8

பம்பாய் நகரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் வாழ்க்கை பாடமாக அமைந்தன என்றால் மிகையாகாது. சில நினைவுகள் மறக்க முடியாதவை. சிந்திக்க வைப்பவை. எனது நண்பன் சாமியுடன் ஏற்பட்ட நட்பும் அந்த வகையை சார்ந்தது தான்.

Tuesday, 3 March 2015

வேலை இங்கே, ஆள் எங்கே?

மெட்ராஸில் என் வீட்டில்  இரண்டு மூன்று அறைகளில் மின் அழுத்தம் காரணமாக விளக்குகள் திடீரென்று  பழுதாகிவிட்டன. இரண்டு முறை 'ட்யூபை' மாற்றிய பிறகும் எரியவில்லை. ஆனால் கடையில் வாங்கும் போது மட்டும் நன்றாக எரிந்தன. எவ்வளவு முயற்சி செய்தும் பிரயோஜனமே இல்லை. சரி ஏதோ பிரச்னையாக இருக்கும், ஒரு நல்ல எலெக்ட்ரீஷியனை அழைத்து வரலாம், என்று நினைத்தேன். அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.

Monday, 5 January 2015

செருப்பு

தலைப்பை பார்த்து பயந்து விடாதீர்கள். அடிக்க மாட்டேன்! நேற்று எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வேறு என்னவென்று சொல்வது? 

Wednesday, 24 December 2014

சலாம் பம்பாய்-7

வாழ்க்கையில் சில வித்யாசமான மனிதர்களையும் அவர்களின் வித்யாசமான செயல்களையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம் தான் நான் பம்பாயில் வேலை செய்யும் போது எனக்கு கிடைத்தது. 

Friday, 5 December 2014

சிவ துதி

சடைமுடியில் சிக்கியநல் சலமக‌ளை காத்ததுபோல்

கடையேனுக் கருளிடுவாய் என்னீசா! - வெண்மை

விடைமீது வந்தெந்தன் வினைதனையே விரட்டிடவே

குடைபோலே காத்திடுவாய் நீ

Friday, 31 October 2014

சென்னை ஆட்டோக்காரர்கள்-2

பல வருடங்களாக மெட்ராஸில் ஆட்டோவை உபயோகப்படுத்துவதை கூடிய வரை நான் தவிர்த்து வருகிறேன். இன்று எனக்கு ஏற்பட்ட அனுவங்கள் சற்றே வித்யாசமானவை.


Friday, 17 October 2014

கவியரசனின் பாட்டு சரித்திரம்

பாரதிக்கு பிறகு தமிழில் அதிகம் நேசிக்கப்பட்ட, வாசிக்கப்பட்ட, ரசிக்கப்பட்ட கவிஞன் ஒருவன் உண்டென்றால் அது கண்ணதாசனாக தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. 'கவியரசர்' என்று எத்தனை பேர் தன்னைத்தானே கூறிக்கொண்டாலும், உண்மையான கவியரசர் கண்ணதாசன் தான். கண்ணதாசனின் ஒவ்வொரு பாடலும் தனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை பின்பற்றி எழுதப்பட்டது என்று கூறுவார்கள்.  அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன். படித்து ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Monday, 29 September 2014

சூரத் நினைவுகள்-2

வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். சிலரை சந்தித்த பின் பல இனிமையான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலரை ஏன் சந்தித்தோம் என்று நினைக்க தோன்றும். சூரத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. 

Monday, 11 August 2014

கண்ணன் வெண்பா

கண்மூடி      குழலூதும்        கலிவரதா         மாந்தர்க்கிம்
மண்ணதனில்  உனையன்றி கதியேது?     தேரோட்டித்
திண்டோளா நின்பாதம் பற்றுவோ   ரகந்தனிலே
கொண்டாட்டம் தானே தினம்!


விரலொன்றில் மலைதூக்கி புவிகாத்த பூபதியே
வரமொன்றை வழங்கவா   வரதா!  -   கூட்டை 
மற‌ந்தான்மா உனைத்தேடி பரிதவிக்கும் நேரத்தில்

பரந்தாமா எனைக் காக்கவா !


கோவிலுள் குடிகொண்ட கருவழகன் கண்ணனைத்
தாவியே வளைத்திடத் தோன்றுதே! தவிக்கும்
ஆவியை அணைத்திடுவாய் அச்சுதா   னந்தனே
பாவியெனை பொருத் தருள்வாய்!

கரந்தூக்கி உனைத்தொழுதேன் கார்வண்ணக் கண்ணாமதி
மறந்தேநான் பிழைசெய்தின் பொறு - என்றும்
புறந்தள்ளி பாவியெனப் பகராமல் பரம்பொருளே

நரனென்னை காத்திடுவாய் நீ!


பற்றிட்டேன் உன்பாதம் பூவுலகில் எனக்கிங்கு
மற்றேதும் வேண்டாமே மாதவா - தாமதம்
சற்றேயும் செய்யாமல் எம்மின்னல் அகற்றிடவே
கொற்றாநீ வந்துடனே காப்பாய்!


சீர்நல்கும் திருவுள்ளத் திருத்தாயும்  மாலுந்தன்
மார்பதனில் அருள்கின்றாள் அழகாக  - மாந்தர்
பாரினிலே உன்பாதம் பற்றிற்றால் போதுமினி
ஓர்பிறவி வேண்டாமே எமக்கு.

கண்ணனவன் திருப்பாதம் பற்றிற்றால் போதுமுன‌
தெண்ணமும் ஈடேறும் மனமே - முன்செய்
பண்டைவினை தீர்த்திடுவான் பரமபத பரந்தாமன்  
விண்டைநீ விடா திரு!

நாராயணா வென்றத் திருநாமம் நாமுரைத்தால்
தீராத நோயாவும் தீர்ப்பான் - மாந்தர்
கோராமல் தானுணர்ந்து வரந்தன்னை வழங்கிடுவான்
மாறாது அவன்பாதம் பற்று!






Sunday, 6 July 2014

கோபாலபுரத்து கனவுகள்

மெட்ராஸின் லாயிட்ஸ் சாலையிலும் பிறகு கோபாலபுரம் இரண்டாவது குறுக்கு தெருவிலும் எனது இளமைக்காலம் கழிந்தது. லாயிட்ஸ் சாலையில் உள்ள பிரபல வட இந்திய பள்ளியில் தான் நான் படித்தேன்.

Monday, 2 June 2014

சலாம் பம்பாய்-6

1993ம் வருடம். சூரத்திலிருந்து பம்பாய்க்கு என்னை மாற்றியிருந்தார்கள். (இதற்கான முந்தைய பதிவை இங்கே படிக்கலாம்).

Monday, 19 May 2014

நரசிம்ம பாமாலை

தும்பிக்கை          நாயகனே        தூமணிநற்            தூயவனே
எம்பாவை          ஏற்றுகிறேன்   காத்திடுவாய்        கணநாதா
அம்பிகைதன்     நற்பிள்ளை     யார்போல்             இப்பாரினிலே
உம்பக்கம்          அருள்வாயே     பாமரனென்          பாவினிலே
(
எம்பாவை=எனது பா, பக்கம்=அன்பு, ஆசி)

பாற்கடலில்          படுத்தருளும்       பரமபத           பரந்தாமா
நாற்றிசையும்       தொழுமேதா       மோதராநின்   பாதத்தை                                போற்றிட‌வே        வ‌ந்திடுவாய்       சீக்கிர‌மே         செந்த‌மிழில்
ஆற்றிட‌வே           நீயருள்வாய்      அடிய‌வ‌னின்    நாவினிலே

(நாற்றிசை = நான்கு திசை)

திருமாது             காதலுடன்          கொழுநன்னை             கண்டிடவே           
மறுபுறத்தில்      மாதேவர்             மலரடியை                   போற்றிடவே                 
கருடந்தன்         சிறகடித்து           பதமலரை                      பற்றிடவே
இருகரத்தை      இணைதூக்கி      தொழுதிட்டோம்          திருமாலே!

 (திரு = மஹாலக்ஷ்மி, கொழுநன் = கணவன்)

இரணியக‌சி       பென்றரக்கன்           தவமொன்றை       புரிந்தானே
பிரமா நீ               வரந்தாவென           மன்றாடி                  விழைந்தானே
தரமதனை          பாராது                        நான்முகனும்        நல்கிடவே
அரக்கனுந்தன்  சிரசதனில்                செருக்கேறி            சினந்திட்டான்

மறையோதும்     மாமுனிகள்    அரியவனின்      அடியவரை
சிறைபிடித்துத்    துன்புறுத்தி     சிரசுதிரம்              சிந்திட்டான்
அறையுச்சி           தனிலிருந்து   உருட்டியதை     செருக்குடனே     
பறைசாற்றி          பழிதீர்த்தான்   பரிகாசச்               சிரிப்புடனே

(ம‌றை=வேத‌ம், அரி=ம‌ஹாவிஷ்ணு, சிர‌சுதிர‌ம்=சிர‌சு(த‌லை)வெட்டிய‌ இர‌த்த‌ம்,அறை=ம‌லை)

பாலைதனில்    சோலைபோல்     பிறந்தானொரு    நன்மகன்
ஓலைபல           கற்றறிந்தான்        ஒழுக்கமுடன்      வீரனவன்
ஏலைபோல்       பரவியதவன்         அரிநாம                  பக்திமணம்
கோலைச்சின   மேற்றினான்          சிங்காரச்              செல்வனவன்

(சதிர்=சுட்டி,அழகு, ஏலை=ஏலக்காய், கோல்=அரசன் (அதாவது ஹிரண்யகசிபு), சினம்=கோபம்)


நானடா             அரியென்றான்      தரங்கெட்ட          தந்தையுமே
ஏனடா                தடம்மாறித்           தவிக்கின்றாய்   மகனேயென‌
கானகக்கரி       வேழத்தின்             காலடியில்          கிடத்திட்டான்
வானவந்தன்   கருணையினால் வடுவதனை      காத்திட்டான்

(கானகம்-காடு, வேழம்-யானை,வானவன்=மஹாவிஷ்ணு,வடு=சிறுவன்)

மதிமயங்கி      அரக்கனவன்     எங்கேயுன            தரியெனவே
பதியுள்ளார்      தூணிலும்         துரும்பிலுமே      அவனன்றி
கதியில்லை    என்றிட்ட           நல்லிளம்பிஞ்        சிறுவ‌னையே
அதிகோப         வ‌ன‌ல்ப‌ற‌க்க‌     அறைந்தானே     அர‌க்க‌னுமே
(பதி=மஹாலக்ஷ்மியின் கணவர்)


எங்கேயரி         எனக்கேட்டான்         செருக்கேறி        அரக்கனவன்    
இங்கேயென    வெடித்திட்டான்    விண்ணகரான்    விழிப்புடைக்க‌
பொங்கிய‌        ஆழினைப்போல்    மூவுலகும்           நடுநடுங்க‌
ரங்கனவன்     கொதித்திட்டான்     கோபத்தில்         கண்சிவக்க‌   

(செருக்கு = அகங்காரம், விண்ணகரான்=மஹாவிஷ்ணு, ஆழி=பெருங்கடல் )

நரவரிமா               மின்னல்போல்           தூண்பிளந்து            தகர்த்தெறிய‌‌    
அரக்கந்தன்          குடலதனை                 அடியோடு                  அழித்தவரி
பிரகலாத               பூம்பால‌ன்                    ம‌ழலைச்சொல்     மயக்கத்தில்
பரம்பொருளும்  பொன்வாயால்           புன்னகைப்பூ            புரிந்தானே

(நரவரிமா= நர+அரிமா, நர=மனிதன், அரிமா=சிங்கம்)
(அழித்தவரி = அழித்த + அரி, அரி = மஹாவிஷ்ணு)

பிரகலாதக்      குழந்தைக்கு              அருள்புரிந்த             அரங்காநீ
வரலாதா         வரதாயெம்                  குறைதீர்த்து            அருளிடவே
கரந்தூக்கி        எமைக்காத்து             அணைத்திடவே    வந்திடுவாய்
சிரந்தாழ்த்தி   வணங்குகிறேன்      அடியேனை             பொறுத்திடுவாய்

நாராயணா      என்றாலே             நன்மைபல      நல்கிடுமே
கோராமல்       கொடுப்பாயே     கோடானு         வரந்தனையே
ஏராதெனக்       கூறாமல்              அடியேனை    அணைத்திடுவாய்
தீராவினை      தன்னைத்            தீர்த்திடுவாய்   திருமாலே

(ஏரா = முடியாது)

நரசிம்மன்      கதைதன்னை     கேட்டிடும்                நல்லடியாரைக்
கரந்தூக்கி       காத்திடுவான்     கார்மேகக்               கண்ணபிரான்
மறவாமல்      இப்பாவை           ஓதிடும்                    நல்லடியார்க்கு
பரமபதப்          பரந்தாமன்           அருளிடுவான்      ஆனந்தமே   




Monday, 12 May 2014

பர்மா பேஜார்!

உலகின் எல்லா பெரிய ஊர்களிலும் திருட்டு சமாசாரங்கள் விற்பனை செய்யப்படும் இடம் என்று ஒரு பகுதி பெயர் பெற்றிருக்கும். உதாரணம், டெல்லியின் 'சோர் பஜார்'. இது போன்ற இடங்களுக்கு சென்றால் கண்டிப்பாக நீங்கள் ஏமாறுவீர்கள் என்பது நிச்சயம். அது போன்ற 'சிறப்பான' இடம்தான் மெட்ராஸில் உள்ள பர்மா பஜார்.