Friday 19 July 2013

அந்த ஏழு மணி நேரம்

ஜூலை 5, 1999. இந்தியாவின் சரித்திரத்தையே புரட்டி போட்ட நாள். இதற்கு சில வாரங்களுக்கு  முந்தைய பின்னூட்டத்தை பார்ப்போம்.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள கார்கில் மலை தொடரில் மிகவும் உயரமான மலை டைகர் ஹில் (Tiger Hill). இந்த டைகர் ஹில் மலையின் உச்சியை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைப்பற்றி விட்டதாக அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் நமது இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த டைகர் ஹில் உச்சியில் இருந்து கீழே உள்ள அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும். அது மட்டும் அல்ல, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை குறி வைத்து பாக்கிஸ்தான் இராணுவத்தினர் திடீரென்று சுட ஆரம்பித்து  விட்டனர். 16500 அடி உயரத்தில் உள்ள டைகர் ஹில்லை கைப்பற்றி விட்டதால் ஸ்ரீநகர் மற்றும் வட காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் நோக்கம். மலை உச்சியிலிருந்து கீழே சுடுவது மிகவும் எளிது என்பதால் இந்த டைகர் ஹில்லை மீண்டும் கைப்பற்றுவது இந்திய இராணுவத்துக்கு ஒரு மாபெரும் சவாலாக அமைந்து விட்டது.

பகலில் தாக்குதல் நடத்தினால் மிக எளிதாக அந்த தாக்குதலை முறியடித்து விடுவதால் இரவில் எப்படியாவது டைகர் ஹில்லை கைப்பற்றி விட வேண்டும் என்று இந்திய இராணுவம் திட்டம் தீட்டியது. நேரிடையாக தாக்குதல் நடத்தினால் கண்டு பிடித்து விடுவார்கள் என்று மாற்று பாதையை தேர்ந்தெடுத்தனர் மிக மிக கடினமான பாதை இது கிட்டத்தட்ட 90 டிகிரி செங்குத்தாக மலை ஏறி உச்சியை அடைய வேண்டும். அதுவும் அமாவாசை இருட்டில் தாக்குதலை நடத்த வேண்டும் என்பது திட்டம்.

ஜூலை 2ம் தேதி இரவு 25 பேர் கொண்ட ஒரு படையுடன் (battalion) யோகேந்திர சிங் யாதவ் என்ற இளம் இராணுவ வீரர் மலை உச்சியை ஏற ஆரம்பித்தனர். மூன்று நாட்கள் மிக கடினமான மலையை செங்குத்தாக ஏறினர் அந்த உயரத்தில் சாதாரணமாக நடந்து செல்வதே பெரும் சவாலாக இருக்கும். மூச்சு விடவே கடினமாக இருக்கும். 16500 உயரத்தில் பிராண வாயு குறைவாகவே இருக்கும். இருந்தாலும் எதையுமே பொருட்படுத்தாமல் நமது வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் கீழ் ஒருவராக மேலே ஏற தொடங்கினார்கள். கிட்டத்தட்ட டைகர் ஹில்லை அடைய 50 மீட்டர் மட்டுமே இருந்த நிலையில்  திடீரென்று ஒரு பாறை காலில் பட்டு கீழே உருள ஆரம்பித்தது.   உஷாராகி விட்ட பாகிஸ்தான் இராணுவத்தினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர், அதனால் 25 பேரில் 18 பேர் மேலே ஏற முடியாமல் பின் வாங்கி விட்டனர். இப்போது எஞ்சி இருந்தது 7 பேர் மட்டுமே.

டைகர் ஹில்லின் மலை உச்சியில் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தினர் ஏற்கனவே முன் ஏற்பாடாக  40 மீட்டர் கீழே ஒரு சிறிய 'பங்க்கரை' (bunker) அமைத்திருந்தனர். ஒரு வேளை கீழே இருந்து யாராவது தாக்குதல் நடத்தினால் முதலில் பங்க்கரில் இருக்கும் இராணுவத்தினர் பதிலடி கொடுப்பார்கள். அதற்கு பிறகே மேலே வர முடியும். எப்படி அவர்களது திட்டம் பாருங்கள்.

மேலே ஏறிக்கொண்டிருந்த 7 இராணுவ வீரர்களுக்கு இந்த பங்க்கரை  தகர்க்க வேண்டிய கட்டாயம். அப்போது தான் மலை உச்சியை அடைய முடியும். சரியான நேரம் பார்த்து பங்க்கரை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். எதிர்பாராத அந்த தாக்குதலில் 4 பாகிஸ்தான் இராணுவத்தினர் இறந்தனர். அதற்குள் டைகர் ஹில்லின் உச்சியில் 135 பாகிஸ்தான் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பங்க்கரை  இந்திய வீரர்கள் கைப்பற்றிய உடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய மலை உச்சியிலிருந்து ஒரு 10 பாகிஸ்தானியர்கள் மெல்ல இறங்கி வந்தனர். கொஞ்சம் யோசித்து பாருங்கள். பங்கருக்கும் டைகர் ஹில் உச்சிக்கும் வெறும் 40 மீட்டர் தூரம் தான். அவர்கள் 135 பேர். இவர்கள் வெறும் 7 பேர் மட்டுமே.பாகிஸ்தானியர்கள் கண்டிப்பாக   வருவார்கள் என்பதை எதிர்பார்த்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் சரமாரியாக அவர்களை நோக்கி சுட ஆரம்பித்ததில் 8 பேர் இறந்தனர். மீதி இரண்டு பேர் பின்னோக்கி சென்று மொத்தமாகவே 7 பேர் தான் இருக்கிறார்கள் என்று மலை உச்சியில் இருக்கும் தமது படைகளுக்கு கூறி விட்டனர்.

அவ்வளவுதான்.  உச்சியில் இருந்து ஒரு 100 பேர் கீழே இறங்கி வந்து சரமாரியாக சுட ஆரம்பித்தனர். கடுமையான சண்டையில் 35 பாகிஸ்தான் இராணுவத்தினர் இறந்தனர். இந்திய வீரர்களில் யோகேந்திர சிங் யாதவ் மட்டும் படு காயமுற்றார் மீதி இருந்த 6 பேரும் இறந்து விட்டனர். இவர் ஒருவர் மட்டும் தனி ஆளாக இருந்தார். கைகள், கால்கள், தொடைகள் என்று உடம்பு முழுவதும் 15 இடங்களில் குண்டடி பட்டு மயக்கமடைந்து விட்டார்.

அனைவரும் இறந்து விட்டனர் என்று நினைத்து பாக் இராணுவத்தினர் ஆயுதங்களை எடுத்து கொண்டு புறப்பட்டனர் போகும்போது இறந்தவர்களின் உடல்களின் மீது சரமாரியாக சுட்டு விட்டு சென்றனர். என்ன ஒரு வெறி பாருங்கள். மயக்கத்தில் இருந்த யாதவுக்கு மெல்ல நினைவு திரும்ப ஆரம்பித்தது. ஒரு கணத்தில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். இறந்த உடல்களில் இருந்து ஆயுதங்களை எடுத்து கொண்டு சென்ற பாக் இராணுவத்தினர் யாதவின் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்களில் இருந்த எறி குண்டுகளை (grenades) மறந்து விட்டனர். கடைசியாக திரும்பி சென்று கொண்டிருந்த பாக் இராணுவ வீரன் தனது தொப்பியை பின்புறமாக தொங்க விட்டு சென்று கொண்டிருந்தான்.

அவ்வளவு தான். ஒரே நொடியில் யாதவ் தன பாக்கெட்டில் இருந்த கை எறி குண்டை அவன் மேல் எறிந்தார். அவனது உடல் சுக்கு நூறாக வெடித்து விண்ணில் பறந்தது. பக்கத்தில் இறந்து கிடந்த பாகிஸ்தானியின் கையில் இருந்த துப்பாக்கியை அள்ளி கொண்டு உருண்டு கொண்டே சரமாரியாக சுட ஆரம்பித்ததில் 5 பாகிஸ்தானி இராணுவத்தினர் இறந்தனர். இப்போது பாக் இராணுவத்தினர் மத்தியில் பயங்கர குழப்பம். நாலா  பக்கத்திலிருந்தும் சரமாரியாக சுட்டதால் புகை மண்டலத்தில் இந்தியர்கள் அந்த இடத்தை கைப்பற்றி விட்டனர் என்றே  நினைத்து விட்டனர். ஒரே ஆள் இத்தனை பேரை சுட்டு வீழ்த்துவான் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. குழப்பத்தில் சிதறி போன பாக் இராணுவத்தினரின் வயர்லெஸ் பெட்டியில் உடனடடியாக டைகர் ஹில்லில் இருந்து அனைவரும் 500 மீட்டர் கீழே இருக்கும் இந்திய இராணுவத்தின் எம்.எம்.ஜி. பேஸை (MMG Base) கை பற்றுமாறு உத்தரவு வந்ததை யாதவ் கேட்டு விட்டார்.

எம்.எம்.ஜி. பேஸை பாக் கைபற்றி விட்டால் ஸ்ரீநகர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்க பட்டுவிடும். அதன் பின் மிக எளிதாக பாக் காஷ்மீரை கைபற்றி விட முடியும்.

வயர்லெசில் இதை கேட்ட யாதவால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. கை வேறு உடைந்து விட்டது. உடம்பு முழுவதும் குண்டடி பட்ட காயங்கள். எப்படியாவது எம்.எம்.ஜி.பேஸை காப்பாற்ற வேண்டும் என்று தன உடலை உருட்டிக்கொண்டே  மேலிருந்து உருண்டு உருண்டு 500 மீட்டர் தூரம் கீழே உள்ள எம்.எம்.ஜி.பேஸை ஒரு வழியாக வந்தடைந்தார். பாறைகளில் அடிபட்டு ஏற்கனவே குண்டடிபட்ட உடம்பு ரண களமாகி  விட்டது.

உருண்டு வந்த யாதவை அவரது மேலதிகாரி லெப்டினன்ட் பல்வான் பார்த்து விட்டார். தனது மடியில் அவரை தாங்கி கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டபோது யாதவ் தட்டு தடுமாறி "எம்.எம்.ஜி.பேசி பாக் இராணுவத்தினர் தாக்க போகிறார்கள்" என்று கூறிவிட்டு மயக்கமடைந்து விட்டார். உடம்பில் இருந்து நிறைய இரத்தம் வெளியேறி விட்டிருந்தது.

மிக முக்கியமான இந்த தகவலை அறிந்து கொண்ட இராணுவத்தினர் தயாராக காத்திருந்தனர்.  இந்திய விமானப்படைக்கும் இரகசிய தகவல் கொடுத்தனர். எதிர்பார்த்தது போல பாக் இராணுவத்தினர் தாக்கும் போது அவர்களுக்காக காத்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததில் பாக் இராணுவத்தினர் அனைவரும் இறந்தனர். அதே சமயம் இந்திய விமானங்கள் சரமாரியாக டைகர் ஹில் உச்சி மீது குண்டு மழை பொழிந்தது. எஞ்சி இருந்த பாக் இராணுவத்தினர் மாண்டனர். 7 மணி நேரத்தில்  டைகர் ஹில் மீண்டும் இந்தியாவின் வசமானது.

Major Dhan Singh Thapa

தனது உயிரையும் துச்சமாக மதித்து நமது நாட்டை காப்பாற்றிய யாதவுக்கு இந்திய அரசு மிக உயர்ந்த இராணுவ மரியாதையான பரம் வீர் சக்கராவை அளித்து கெளரவித்தது. இப்போது அதை நினைவு கூறும் யாதவ், "தாய் நாட்டுக்காக எங்களது உயிர் பிரிந்தால் அதை விட பெருமை வேறு  ஒன்றுமே இல்லை. என்னுடைய சகோதரர்களை விட பிரியமான  இறந்து போன அந்த ஆறு சக வீரர்களின் தியாகத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது" என்று அடக்கமாக கூறுகிறார்



நண்பர்களே, நாம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை வருத்தி கொண்டு உயிரையும் மாய்த்துக்கொண்டு நமது இராணுவத்தினர் எல்லையில் குளிரிலும் வெயிலிலும் பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். நாம் கடவுளிடம் வேண்டும் பொழுது அவர்களின் நலனுக்காகவும் சிறிது வேண்டி கொள்ளுங்களேன். இன்று நாம் சுதந்திரமாக இருக்கிறோம் என்றால் கண்டிப்பாக இது போன்ற தியாக வீரர்களால்  தான் இல்லையா?

Indian Army buglers during the inauguration of a war memorial in Drass, 160 km east of Srinagar