Tuesday 21 January 2014

திண்ணியம் முருகன் கோவில்

ராஜராஜ சோழனின் அக்கா பெயர் குந்தவை பிராட்டியார். இவர் ஆன்மீக கொடை வள்ளலாக திகழ்ந்தார். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ( தோராயமாக கி.பி.995). ஒரு மாட்டு வண்டியில் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களை ராஜ மரியாதையுடன் குந்தவை பிராட்டியார் தஞ்சாவூருக்கு சிப்பாய்களுடன் எடுத்து சென்று கொண்டிருந்தார். முருகனை சுமந்து கொண்டு சென்ற மாட்டு வண்டி கூழையாறு என்ற சிறு நதியை கடந்த உடனே  மாட்டின் கால் இடறி  கவிழ்ந்து விட்டது.  அதில் அந்த முருகன் விக்ரகத்தின் வலது கால் உடைந்து விட்டது. விக்ரகத்தை எவ்வளவு முயற்சி செய்தும் விழுந்த இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் அதே இடத்தில் குந்தவை முருகனுக்கு ஒரு அழகான் கோவில் கட்டினார். இது கல் வெட்டில் பதிவாகியுள்ளது.


பல நூற்றாண்டுகள் கழிந்தன. பலர், எத்தனையோ முறை அந்த‌ உடைந்த மூலவரின் காலை செப்பனிட முயற்சித்து அது ஏதாவது ஒரு காரணத்தால் ஒவ்வொறு முறையும் தோல்வியிலேயே முடிந்தது. ஒரு முறை அவ்வாறு முயற்சிக்கும் போது ஊர் பெரியவர் ஒருவரின் கனவின் முருகன் தோன்றி "உங்கள் வீட்டில் உள்ள குழந்தை ஊனமாகி விட்டால் அந்த குழந்தையை தூக்கி எறிந்து விடுவீர்களா? அதே போல என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டார்.  முருகனே கட்டளை இட்டுவிட்டதால் அதற்கு பின் இன்று வரை யாருமே மூலவரின் காலை சரி செய்ய முயற்சிக்கவில்லை. இன்று கூட அபிஷேகத்தின் போது கூர்ந்து கவனித்தால் தான் இது தெரியும். மற்றபடி வெள்ளி கவசம் சாத்தியிருந்தால் தெரியாது.

இந்த கோவில் இன்றைய திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில், காட்டூர் சர்க்கரை ஆலையிலிருந்து 5 கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது. இந்த கோவிலில் சில விசேஷங்கள் உள்ளன. எல்லா கோவில்களிலும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையை பார்த்து கொண்டிருப்பார். ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி போல, முருகன்  தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார். இது மிக மிக விசேஷமாகும். உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான‌  சக்தி இருப்பதை உணரலாம். உதாரணம், மயிலை கற்பகாம்பாள், திருச்செந்தூர் முருகன், திருக்கடையூர் அபிராமி போன்றவை. அதே போல, வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களுக்கும் தனித்தனியே மயில் வாகனங்கள் உள்ளன. ஒரே இடத்திலிருந்து நேராக பார்த்தால் முருகனும், இடது பக்கம் பார்த்தால் சிவனும் தெரிவார்கள். இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்துமே சூரியனை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இது போன்ற விசேஷங்கள் உள்ள கோவில் உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த கோவிலில் முருகனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். சிவனின் பெயர் இங்கு கோஷ்டீஸ்வரர். அன்னையின் பெயர் ப்ருஹன் நாயகி. 

வெளி பிரகாரத்தில் வினாயகர் ந்ருத கணபதியாக காட்சி தருகிறார். இந்த கணபதியை வேண்டுபவர்களுக்கு எதிரிகளின் பயமும் தொல்லையும் தீரும் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. துர்கை, கால பைரவர், நாக தேவர் என்று பல மூர்த்திகள் வெளி பிரகாரத்தில் உள்ளன. மனிதனின் மனதில் தோன்றும் ஆறு தீயவைகளை களைந்து அருள் புரிகிறான் ஆறுமுகன். காமம் (இச்சை), க்ரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தனம்), மோஹம் (ஆசை), மதம் (செருக்கு), மாஷர்யம் (பொறாமை) ஆகிய 6 தீய குணங்களை ஆறுமுக கடவுளாக காட்சி தரும் முருகன் தீர்த்து வைக்கிறான்.

இத்தனை விசேஷங்கள் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. எழைகளுக்கு அன்னதானம் உட்பட பல நல்ல காரியங்களுக்கு நிதி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்யலாம். 

T V MURALI
SECRETARY
THINNIAM WELFARE TRUST
24 ROYAR THOPE
SRIRANGAM
TRICHY - 620006
MOBILE: 9994442934
email: thinniamkovil@gmail.com 

ராஜராஜ சோழன் காலத்து கோவிலில் இத்தனை விசேஷங்கள் இருப்பது எல்லா தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க கூடியது அல்லவா? இந்த அற்புதமான் கோவிலுக்கு ஒரு முறை விஜயம் செய்து முருகனின் அருளை பெற்று வளமாக வாழுங்கள்.