Friday 6 September 2013

மெளனத்தின் மொழிகள்

சமீபத்தில் எனது உறவினர்  ஒரு அருமையான பொன்மொழியை அனுப்பியிருந்தார். அது என்னவென்றால், "உலகிலேயே மௌனம் தான் அதிக முறை தவறாக மொழி பெயர்கபட்டிருகிறது!". சற்றே சிந்தித்து பார்த்தால், உலகிலேயே மெளனம் தான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.

ஒன்றுமே பேசாமல் இருந்தால் அதற்கு பேர் தான் மெளனமா? அப்படி பார்த்தால் மெளனத்திற்கு மொழி இல்லையா? ஊமைகள் பேச முடியாது என்று யார் சொன்னார்கள்? சொல்ல போனால் பேச தெரிந்தும் கண்டதை பேசுபவர்களை விட பேசாமல் பேசும் ஊமைகள் எவ்வளவோ மேல்.

வார்த்தை வராவிட்டால் என்ன, பொருள் புரியாதா என்ன? மெளனத்தின் பெருமையை நமது முன்னோர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். காஞ்சி மஹா பெரியவர் பல நாட்கள் தொடர்ச்சியாக மெளன விரதத்தில் இருப்பார். குரு பகவானே மெளனமாக இருந்து அருள் பாலிப்பவர் என்று புராணம் கூறுகிறது. குரு பகவானை சுற்றி ராஜ ரிஷிகள் சூழ்ந்து இருப்பார்களாம். சாமானிய மக்களின் சந்தேகங்களை தீர்க்க வல்ல இந்த ரிஷிகள் தங்களது சந்தேகங்களை குரு பகவானிடம் கேட்க அவர் மெளனமாகவே அதற்கான விடைகளை கூறி ஞான உபதேசம் செய்வாராம். அதனால் அவருடைய பெயரே மெளனகுரு என்று கூறுவார்கள்.

மெளனம் காக்க வேண்டிய நேரத்தில் பேசுவதாலும், பேச வேண்டிய நேரத்தில் மெளனமாக இருப்பதாலும் தான் பிரச்னைகள் ஆரம்பிக்கின்றன. திரெளபதியை துகிலுறிக்கும் போது "ஞானி" என்று அழைக்கப்படும் பீஷ்மர் நடக்கும் அநியாயத்தி தட்டி கேட்காமல் மெளனம் காத்ததால் தான் மஹாபாரத போர் அறிவிக்கப்பட்டது. அதே போல‌ மெளனமாக இருக்க வேண்டிய போது பேசி காரியத்தை கெடுத்தவர்கள் சரித்திரத்தில் ஏராளம்.

இராமன் சீதையை முதன்முதலில் பார்த்த போது ஒருவருக்கு ஒருவர்  "ஐ லவ் யூ" என்று சொல்லவில்லை. இன்னும் சொல்ல போனால் வாய் திறந்து இருவரும் எதையுமே கூற‌வில்லை. அண்ணலும் அவளும் நோக்க அந்த தருணத்தில் கண்கள் மட்டும் பேசின. நாணம் பேசும்போது பேசும் சொல்லுக்கு என்ன பயன்?

வேலைக்கு காத்திருப்பவனை கேளுங்கள். யாராவது நமக்கு வேலை தரமாட்டார்களா, யாராவது மெளனத்தை உடைத்து நல்ல சேதியை கூற மாட்டார்களா என்று ஏங்கும் ரணம் அனுபவித்தவர்களுக்கு மட்டும் தெரியும் . பெண் பார்த்து விட்டு எதையுமே கூறாமல் மெளனாக இருக்கும் பிள்ளை வீட்டார்களை என்னவென்று சொல்வது? அந்த வலி பெண்ணை பெற்றவனுக்கு தான் தெரியும்.


நமது நாட்டில் பெண்கள் பல சிரமங்களை மெளனமாகவே எதிர்கொள்கின்றனர். அவர்கள் மெளனம் காப்பதனால் தான் பல குடும்பங்கள் சிதறாமல் இருக்கின்றன என்பதே உண்மை. வாய் திறந்து கூறி விட்டால் ஒரு சொல்லுக்கு மதிப்பே கிடையாது. பேசாமல் பேச வல்ல ஒரு பொருள் உலகத்தில் உள்ளது என்றால் அது மெளனம் மட்டுமே.

சொல்லாமல் சொல்லும் சொல்லுக்கே என்றும் மதிப்பு. மெளனம் பேச ஆரம்பித்து விட்டால் அதை எதிர்கொள்ளும் சக்தி யாருக்கும் கிடையாது. சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்று அதனால் தான் கூறுகிறார்கள்.

இன்று நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை சாதாரண மக்கள் எதிர்க்க முடியாமல் மெளனம் காக்கின்றனர். அதனால் தான் அக்கிரமக்கார அரசியல்வாதிகளுக்கு துளிர் விட்டு போய் விட்டது. 1975 முதல் 1977 வரை இந்தியாவின் இருண்ட காலம் என்றே கூறலாம். இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்து நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டிருந்த நேரம். பேச்சு உரிமை கூட இல்லாத அந்த கால கட்டத்தில் மக்கள் பொறுமையாக மெளனம் காத்திருந்தனர். பல கொடுமைகளை மக்கள் சந்தித்தனர். தேர்தல் வந்த போது கொடுங்கோல் ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது சக்தியை சாதாரண மக்கள் நிரூபித்து விட்டனர்.

மெளனம் ஒரு மிக பெரிய ஆயுதம். ஒருவன் வாய் திறந்து கூறிவிட்டால் அவனது மனதின் எண்ண ஓட்டங்கள் என்னவென்பதை யூகிக்க முடியும். அதனால் தான் ஒற்றர் படையினருக்கு அந்த நாட்களில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்: Keep your eyes and ears open, and mouth shut !

நாட்டின் பிரதமர் மெளனத்தை கலைத்து ஏதாவது ஒரு வார்த்தையை கூறிவிட்டால்  பொருளாதார சந்தையில் அதன் எதிரொலி கேட்கிறது. கெட்ட செய்தியை கூறுவதற்கு பதில் மெளனமாகவே இருக்க பலர் விரும்புகின்றனர். இது ஒரு தவறான அணுகுமுறை என்றே நான் நினைகிறேன். மெளனம் காக்காமல் சொல்ல வந்ததை நேரிடையாக கூறிவிட்டால் பிற்காலத்தில் வலி தெரியாமல் இருக்கும்.

மெளனத்தை உண்மையாகவே புரிந்து கொள்பவன் யோகி. வெளியே வராத வரை வார்த்தையும் உள்ளே போகாத வரை விஷமும் யாருக்கும் தெரியாதவையே. சொல்லாத சொல்லின் சிறப்பை மெளனம் கலைத்து கூறிவிட்டேன். நீங்களும் படித்து விட்டு வழக்கம் போல மெளனம் காக்காமல் பின்னூட்டத்தில் ஏதாவது எழுதிவிட்டு போங்களேன்!