Monday 19 August 2013

கூழுக்கும் ஆசை

ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரை  நமக்கு அதன் மதிப்பு  தெரியாது என்பது எவ்வளவு உண்மை!

வேறு ஒன்றுமில்லை. கருகருவென்று வீரப்பன் அளவுக்கு இல்லாவிட்டாலும் எனக்கு ஓரளவுக்கு பெரிய  மீசை இருந்தது. அதில் தொங்கு மீசை வேறு விசேஷம். ஒரு மனிதன் எதை  வேண்டுமானாலும் விட்டு கொடுத்து  விடலாம். ஆனால் மீசையை விட்டு கொடுப்பது என்பது எவ்வளவு பெரிய தியாகம்! நான் போற்றி பாதுகாத்து வந்த பொக்கிஷத்தின் மேல் எந்த சிருக்கனுடைய (சிருக்கிக்கு ஆண் பால் என்ன?) கண் பட்டதோ தெரியவில்லை. கண் பட்ட இடத்தில் புண் பட்டது போல, ரோஜா பூந்தோட்டத்தின்  நடுவில் முளைத்த கள்ளிச்செடி போல திடீரென்று ஒரு வெள்ளை முடி முளைத்து விட்டது.

Who is the white sheep என்று அலறி அடித்து கொண்டு கத்திரியால் லாவகமாக வெட்டினேன். சோதனை மேல் சோதனையாக சில வாரங்களில் மீண்டும் அந்த காளான் முளைத்து. அதுவும் அதே இடத்தில். பட்ட இடத்திலேயே பட்டால் ஒரு மனிதன் எவ்வளவு தான் தாங்குவது? மீண்டும் எடு கத்திரியை. இப்படியே கத்திரிக்கும் மீசைக்கும் நடந்த போட்டா போட்டியில்  ஒரு கட்டத்தில் ஒற்றுமை ஓங்குக என்று ஒன்றுக்கு பதில் இரண்டு மூன்று என்று வெள்ளி திரிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.

போகிற போக்கை பார்த்தால் உதட்டுக்கு மேல் ஒரு வெள்ளை புரட்சியே ஏற்பட்டு விடும் போல இருந்தது. ஒரு நாள் தெரியாத்தனமாக சவரம் செய்து கொள்ளாமல் இருந்து விட்டேன்.  எதேச்சையாக கண்ணாடியில் முகத்தை பார்த்தால் தாடியிலும் லேசாக புற்றீசல் போல வெள்ளை ஒற்றர்கள் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். Disaster Management என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீக்கிரமாக ஏதாவது  செய்தே ஆக  வேண்டும். பேரிடர் என்பது மனிதனுக்கு மீண்டும் மீண்டும் வந்தால் என்னதான் செய்வது? இப்படி நொந்து நூடுல்ஸாகி இருந்த போது தான் 'பொறுத்தது போதும் போர் வாளை எடு' என்று எனது மகள் எந்த ஆண் சிங்கத்திடமும் கேட்க கூடாத அந்த வசனத்தை கூறி விட்டாள்.

நான் இத்தனை ஆண்டுகளாக போற்றி பாதுகாத்து வளர்த்த, என் உயிரினும் மேலான, ரத்தத்தின் ரத்தமான, உடன்பிறப்பான, எனது ஆசை மீசையை எடுத்து விடுமாறு கூறினாள். உள்ளம் பதை பதைத்தது. மீசை துடி துடித்தது. "என்ன சொன்னாய்?" என்று சிவாஜி கணேசன் மாதிரி கர்ஜிக்க முற்பட்ட போது மகளுக்கு ஒத்து ஊதிக்கொண்டு தங்கமணி "இப்படி தாண்டி என்னை பெண் பார்க்க வருவதற்கு முன் தொங்கு மீசையோட போட்டோவை அனுப்பினார். நான் அப்பவே reject செய்திருக்கணும்" என்று சந்தடி சாக்கில் சிந்து பாடினாள்.

"அப்பா, ப்ளீஸ் அப்பா" என்று எனது மகள் கெஞ்சிய பொழுது அதன் பின் விளைவுகள் எனக்கு தெரியவில்லை. முன் விளைவுகள் தான் தெரிந்து விட்டதே! ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை Dye. வேறு வழியே இல்லை. விழித்தாலும் மழித்தாலும் என்னுடைய முகம் என்னுடையது தான். அதனால் அந்த சுபயோக சுபதினத்தில் - சொல்லவே மனம் துடிக்கிறது -  எனதருமை மீசையை எடுத்து விட்டேன்.

பிரளயம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல் பிடுங்கிய பாம்பு, கொடுக்கை பிடுங்கிய தேள், வாலறுந்த நரி (ச்சீ வேறு உவமையே கிடைக்கவில்லையா) அது போல தான் மீசை இல்லாத ஆண் என்பதை அதை எடுத்த அடுத்த கணம் உணர்ந்தேன். என்னை பார்த்த என் பெண்ணின் முதல் reaction - தாங்க முடியாமல் சிரித்து விட்டாள். அவள் சிரிக்க சிரிக்க எனக்கு கோபமும் அழுகையும் பொத்திக்கொண்டு வந்தது. இதற்காகவா ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

வெளியே கடைக்கு சென்றால் பின்னால் நாய் துரத்துவது போல ஒரு பிரமை. அலுவலகத்துக்கு சென்றால் அனைவரும் முதலில் ஒரு மாதிரி என் முகத்தை பார்த்தார்கள். எனக்கு பின்னால் அவர்கள் சிரித்தது என் காதுகளில் துல்லியமாக கேட்டது. நான் என்னதான் செய்வது? வடிவேலு மாதிரி 'இருக்கிறவன் வெச்சுக்கிறான், இல்லாதவன் வரஞ்சுக்கிறான்' என்று பென்சிலால் மீசையை வரைந்து கொள்ளவா முடியும்? இல்லை டோப்பாவா வைத்து கொள்ள முடியும்? நெருங்கிய நண்பர்கள் "பார்க்க சகிக்கலைடா" என்று கலாய்த்தார்கள். சிலர் "மோசமா இருந்த மூஞ்சி இப்ப படு மோசமா இருக்குடா" என்றார்கள்.

வீட்டுக்கு வந்து டி.வியை போட்டால் என்னை வெறுப்பேற்றவே போட்ட மாதிரி வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தூர்தர்ஷனில் ஓடிக்கொண்டிருந்தது. மீசை துடிதுடிக்க சிவாஜி வசனம் பேசிக்கொண்டிருந்தார். செய்திகள் பார்க்கலாம் என்று சேனலை மாற்றினால் இலங்கை ஜனாதிபதி ஏதோ பேசி கொண்டிருந்தார். அட, இந்த சிங்களவர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லையா? ஒபாமாவுக்கும் தான் மீசை இல்லை. பரவாயில்லை. எல்லா ப்ரொபஸர்களும் தாடி வைத்து கொள்வார்கள் இல்லையா, அது போல உலகில் பெரிய மனிதர்கள் யாருமே மீசை வைத்து கொள்வதில்லை என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

 நாட்கள் செல்ல செல்ல எல்லோருக்கும் எனது புதிய முகம் பழகிவிட்டது. இப்போதெல்லாம் முகத்தை சவரம் செய்யாமல் இருந்தால் தான் நோயாளி மாதிரி இருக்கிறது. ஆகையால் நண்பர்களே, மீசை மேல் ஆசை வைக்காமல் ஓசைப்படாமல் மழித்துவிடுங்கள். உயிரா போச்சு....?



 

Monday 5 August 2013

ஒரு வார்த்தை

மனித இனத்தின்  எழுச்சியும்  வீழ்ச்சியும் ஒரு வார்த்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று  நினைக்கிறேன். "அவன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். அது தான் தாங்கி கொள்ள முடியவில்லை". இப்படி எத்தனை பேர் எத்தனை முறை கூறி இருப்பார்கள்? ஒரு வார்த்தையினால் எத்தனை உறவுகள் முறிந்திருக்கும்? எத்தனை மாமன்னர்கள் போருக்கு சென்றிருப்பார்கள்?

காதலன் காதலியின் ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். மனதில் அடிபட்டவன் ஆதரவாக  ஆறுதலான ஒரு வார்த்தைக்கு ஏங்குகிறான். தேர்வு எழுதிய மாணவன் ஆசிரியரின் மதிப்பீடு என்ன என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். ஆஸ்பத்திரியில் மருத்துவரின் ஒரு வார்த்தைக்காக நோயாளி  ஏங்குகிறான்.  ஜோதிடரிடம்  ஜாதகத்தை கொடுத்த பெண்ணை பெற்றவன் 'பொருந்தியது' என்ற ஒரு வார்த்தைக்காக ஏங்குகிறான். வாழ்க்கையில் இப்படி எல்லாமே ஒரு வார்த்தை தானோ?


நந்தா சக்கரவர்த்தி  அவதூறாக ஒரு வார்த்தை சொல்லி  அவமானப்படுத்தி விட்டான்  என்றதால்  சாணக்கியர் என்ற அந்தணர் சபதம் எடுத்து சந்திரகுப்த மெளரியாவுடன் கை கோர்த்து நந்தா சாம்ராஜ்யத்தையே அழித்து விட்டார். அபிராமி பட்டர் அமாவாசைக்கு பதில் தவறாக பெளர்ணமி என்று ஒரு வார்த்தை கூறியதால் அபிராமி அந்தாதி என்ற அருமையான பொக்கிஷம் பிறந்தது. சிவபெருமானின் தலையை பார்த்ததாக ஒரு வார்த்தை பொய் சொன்னதால் பிரமனுக்கு உலகில் கோவிலே இல்லாமல் போய்  விட்டது.

 பல வருடங்களுக்கு முன் எனது உறவுக்காரன் ஒருவன் (பெயர் வேண்டாமே) பட்ட படிப்பை முடித்து வேலை இல்லாமல் வீட்டில் இருந்த போது அவனது தந்தை சொற்களால் அவனை மிகவும் புண்படுத்தி கொண்டே  வந்தார்.ஒரு கட்டத்தில் 'தண்டச்சோறு" என்று ஒரு வார்த்தை திட்டி விட்டார். அவ்வளவுதான். அவனால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை.
சான்றிதழ்களை எடுத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பி விட்டான். கண் போன போக்கிலே கால் போக, கால் போன போக்கிலே மனமும் போக வீதியில் நடந்து கொண்டிருந்த போது அவன் கண்களில் ஒரு மிக பெரிய விளம்பரம் தென்பட்டது.

 'இந்திய இராணுவம் உங்களை அழைக்கிறது' என்ற வாசகத்தை பார்த்து விட்டு உள்ளே சென்றால் இராணுவத்துக்கு ஆள் எடுத்து  கொண்டிருந்தார்கள். உடனே இவன் தனது பெயரை கொடுக்க இவனது சான்றிதழ்களையும் எடை உயரம் இத்யாதிகளையும் பரிசோதித்து உடனடியாக  சேர்த்துக்கொண்டார்கள்.  அடுத்த இரயிலிலேயே நாகாலாந்துக்கு புறப்பட்டான்.

அவனுடைய அம்மா சில நாட்கள் அழுது பிரண்டாள். அவனது தந்தை 'கோபத்தில் மகனை திட்டி விட்டோமே, எங்கு இருக்கிறானோ' என்று பல நாட்கள் மனதுக்குள்ளேயே அழுது கொண்டிருந்தார். இராணுவத்தில் இருந்த அவன் சும்மா இருக்காமல் இராணுவ செலவிலேயே post graduation வரை படித்து விட்டான். வீட்டுக்கு கடித போக்குவரத்து கூட வைத்து கொள்ளாமல்  இருந்தான், பல வருடங்களுக்கு பிறகு  அறிவிப்பு இல்லாமல் திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு கிளம்பினான். 'நான் இப்போது தண்டச்சோறு இல்லை அப்பா' என்று தந்தையை பார்த்து கூற வேண்டும் என்று கறுவிக்கொண்டே வந்தான்.

கதவை திறந்த அவனது வயதான தந்தை அவனை பார்த்ததும் சட்டென்று திகைத்து நின்று விட்டார். அவனது தாய் அவனை கட்டி அணைத்துக்கொள்ள தந்தை இப்போது ஒரு வார்த்தை கூட பேச முடியாமல்  கண்ணீர்  விட்டார். அதை பார்த்த இவனது வைராக்கியம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. என்ன இருந்தாலும் தந்தை அல்லவா?  ஒரு பெண் விம்மி அழும் போது வெளி வரும் சோகத்தை விட ஒரு ஆண் மெளனமாக விடும் கண்ணீர் கல்லையும் உருக்க வல்லது. ஒரு வார்த்தை செய்த வினையால் வாழ்க்கையில்தான்  எத்தனை சோகங்கள், எத்தனை மாற்றங்கள்.

மிருகங்களுக்கு இந்த பிரச்னையே இல்லை. அவைகளால் நம்மை போல ஒரு வார்த்தை கூட பேச முடியாது. ஆனால் அவைகளிடம்  பொறாமை,வக்கிரம், வெறுப்பு போன்றவை எதுவும் இல்லை. ஆறறிவு படைத்த மனிதன் ஐந்தறிவு படைத்து மிருகங்களிடம் கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.

ஒரு வார்த்தை செய்யும் ஜாலங்கள் தான் எத்தனை! 'நன்றி' என்ற வார்த்தையால் பல புதிய நண்பர்கள்  உருவாகிறார்கள்.அந்த ஒரு வார்த்தையை கூறாததால் இருந்த நண்பர்கள் 'நன்றி கெட்டவன்' என்று கூறி விலகுகிறார்கள். செய்த தவறை ஒப்புக்கொண்டு 'மன்னிக்கவும்' என்று ஒரு வார்த்தை கூறி விட்டால் பல பிரிவுகளை தவிர்த்திருக்க முடியுமே. பல விவாகரத்துகள் இல்லாமல் போயிருக்குமே. பேச்சிலும் மூச்சிலும் 'நான்' என்ற வார்த்தையை தவிர்த்து 'நாம்' என்ற வார்த்தையை உபயோக படுத்தினால் அன்பை வளர்க்கலாமே.