Tuesday, 10 February 2009

கடைசி பதிவு

நண்பர்களே! எனது வலைப்பதிவை இந்த புதிய வலைப்பூவுக்கு மாற்றி விட்டேன்.

http://madrasthamizhan.wordpress.com

இனிமேல் இங்கு நான் எழுத மாட்டேன். 'அப்பாடா' என்கிறீர்களா? அவ்வளவு சீக்கிரம் உங்களை யார் விட்டது? புதிய வலைப்பூவிலிருந்து உங்களை படுத்தலாம் என்று தீர்மானித்து விட்டேன். வந்து வாழ்த்திவிட்டோ திட்டிவிட்டோ செல்லுங்களேன்!

Wednesday, 4 February 2009

தேர்வு காய்ச்சல்

இது தேர்வு நேரம். குழந்தைகள் படிக்கிறார்களோ இல்லையோ பெற்றோர்கள் மாங்கு மாங்கென்று குழந்தைகளை விட அதிகமாக படித்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.





பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. திருச்சியில் எனது உறவினர் ஒருவரின் மகன் (பெயர் ரகு என்று வைத்து கொள்வோமே) இதே போல தனது PUC தேர்வை எழுதினான். அப்போதெல்லாம் 12ம் வகுப்பை பி.யூ.ஸி. என்று கூறுவார்கள். நன்றாக படிக்கும் பையன் தான். ஏதோ அவனது போதாத காலம் அந்த ஒரு தேர்வில் மட்டும் மதிப்பெண்களை குறைவாக எடுத்து விட்டான். மருத்துவராக அவனை பார்க்க நினைத்த அவனது தந்தைக்கு இது மிக பெரிய இடி விழுந்தது போல ஆகிவிட்டது.



அவனது தந்தை தனது இளம் வயதில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். தன்னால் தான் மருத்துவராக முடியவில்லை என்ற குறை மிகவும் இருந்தது. தனது மகனாவது நல்ல மதிப்பெண்கள் பெற்று பெரிய மருத்துவராக வரவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு.




அதனால் இளம் வயதிலிருந்தே ரகுவை மிகவும் கண்டிப்பாகவே வளர்த்தார். மிகவும் கோபக்காரராக இருந்தார். அடிக்கடி ரகுவை பிரம்பால் அடித்து பிய்த்து விடுவார்.அப்போதெல்லாம் தனியார் மருத்துவ கல்லூரிகளே கிடையாது. அப்படியே இருந்தாலும் அவற்றில் சேர்ப்பதற்கான பணம் அவரிடம் இல்லை. மகனை எப்போது பார்த்தாலும் "படி, படி" என்று விரட்டி கொண்டே இருப்பார். அவனும் பாவம் என்னதான் செய்வான். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாகவே இருப்பான்.



தேர்வில் குறைவான மதிப்பெண்களை பெற்றதும் அவன் நிலை குலைந்து போய்விட்டான். அவனது தந்தைக்கோ கடும் கோபம். அவனை பிடித்து அடி அடி என்று பின்னி விட்டார். "நான் நன்றாக தான் படித்தேன், ஆனால் தேர்வு எழுதும்போது மறந்து விட்டது" என்று அவன் எவ்வளவு கூறியும் அவனை அவர் விடாமல் அடித்து துவைத்து விட்டார்.




ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் அழுது கொண்டே ரகு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான். போகும்போது தனது பி.யூ.ஸி. மதிப்பெண் சான்றிதழையும் கொஞ்சம் பணமும் மட்டும் எடுத்து கொண்டு "என்னை தேடாதீர்கள்" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதி வைத்து விட்டு சென்று விட்டான். வீட்டில் அனைவருக்கும் புதிய மன உளைச்சல். நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரது வீடுகளிலும் இவனை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கவில்லை.



அவனது அம்மாவின் நிலைமை தான் மிகவும் பாவமாகி விட்டது. அழுது புலம்பி தீர்த்து விட்டாள். வீட்டுக்கு மூத்த மகன் இந்த மாதிரி செய்துவிட்டானே என்று அனைவருக்கும் அவன் மீது வெறுப்பே வந்து விட்டது. ஆனால் அந்த வெறுப்பு மெல்ல அவனது தந்தை மீது பாய துவங்கியது. அரசல் புரசலாக உறவினர்கள் அவனது தந்தை மீது பழி போட துவங்கினர். அவர் உடைந்து போய் விட்டார்.




இந்த உலகத்தில் நாம் யாரிடமாவது உதவி கேட்டால் இலவச ஆலோசனை கொடுப்பவர்களும் ஆலோசனை கேட்டால் உதவிக்கு வராதவர்களும் தானே அதிகம். கேரள மந்திரவாதி முதல் எல்லாவிதமான ஆரூடவாதிகளையும் போய் சந்தித்து விட்டார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக நிற்காத நதியை போல ஓடிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாகவும் சோகமான‌ சூழலில் இருந்த குடும்பத்தினர் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து கடைசியில் தேடுவதையே கைவிட்டு விட்டார்கள்.




ஒரு 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. திடீரென்று ஒரு நாள் வீட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. அதை எழுதியது ரகுவே தான். தான் அடுத்த வாரம் திருச்சிக்கு வருவதாக ரகு எழுதியிருந்தான். அவனது அம்மாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? மரணம் அடைந்து விட்டான் என்றே முடிவு கட்டிய பிள்ளை பல வருடங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்புகிறான் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்? அவனது தந்தைக்கு மகன் வீட்டை விட்டு சென்றுவிட்டான் என்கிற கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் அவன் திரும்பி வருவது அவருக்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக காட்டி கொள்ளவில்லை.




"வருகிறேன்" என்று மட்டும்தான் கடிதத்தில் எழுதியிருந்தானே தவிர தான் எங்கே இருக்கிறோம், எங்கு வேலை செய்கிறோம் என்று ஒரு விபரமும் அந்த கடிதத்தில் இல்லை.




அவனை வரவேற்பதற்காக நாங்கள் எல்லோரும் ஒரு நாள் முன்பாகவே போய் அவனது வீட்டில் காத்து கொண்டிருந்தோம். கடைசியில் திடீரென்று வாட்டசாட்டமாக பெரிய மீசையுடன் இராணுவ உடையில் ரகு வீட்டுக்குள் நுழைந்தான். அவன் வீட்டை விட்டு சென்ற போது ஒரு 17 வயது வாலிபனாக தானே இருந்தான். 7 வருடங்களில் மிகவும் மாறியிருந்தான். உள்ளே நுழைந்ததும் அவனை முதலில் பார்த்தது அவனது அம்மாதான். அவளுக்கு இவனை முதலில் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் ரகுவோ, அவளை பார்த்தவுடன் "அம்மா" என்று அழைத்தான். அவ்வளவுதான். ஓடி வந்து அவனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவனது தந்தையும் அவனது முகத்தை வருடிக்கொடுத்து "ஏண்டா இப்படி செய்து விட்டாய்?" என்று கூறி அழ ஆரம்பித்து விட்டார்.


சாப்பிட்டு விட்டு சிறிது நேரத்து பிறகு அவனே என்ன நடந்தது என்று கூறினான். அப்பா அடித்து விட்டார் என்று வீட்டை விட்டு வெளியே சாலையில் சென்றுகொண்டிருந்த போது "இராணுவத்தில் சேருங்கள்" என்று ஒரு பள்ளியின் வாசலில் பெரிய விளம்பரத்தை பார்த்திருக்கிறான். அங்கு ஆள் சேர்க்கை நடந்து கொண்டிருந்ததாம். சரி, என்னதான் நடக்கிறது என்று உள்ளே சென்று பார்த்தால் இவனது உயரம், எடை மற்றும் சான்றிதழ்கள் எல்லாவற்றையும் சரி பார்த்திருக்கிறார்கள். இன்று மாலை அருணாசலப்பிரதேசத்துக்கு ஒரு குழு செல்கிறது. நீயும் அவர்களுடன் சேர்ந்துவிடு என்று உடனடியாக அவனை இராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். (அப்போதெல்லாம் இப்படி உடனடியாக சேர்க்கும் வழக்கம் இருந்தது). இவனும் ஒரு வேகத்தில் இராணுவத்தில் சேர்ந்துவிட்டான் (Long Service Commission). அங்கு சேர்ந்த பிறகு இவன் இராணுவத்தின் செலவிலேயே பூனாவில் உள்ள மிக பெரிய இராணுவ மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்திருக்கிறான். ஆனால் ஒரு வைராக்கியத்தில் வீட்டுக்கு கடிதமே எழுதவில்லை. படிப்பை முடித்தபின் இராணுவத்திலேயே மருத்துவராக பணியாற்றியிருக்கிறான். படிப்பில் சேர்க்கும் முன்பே அவர்கள் இவனிடம் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொண்டார்களாம்.


எது எப்படியோ, தனது தந்தையின் கடைசி காலத்துக்குள் அவரது விருப்பதை போலவே ஒரு மருத்துவராகி விட்டான். கதைகளில் வருவது போல அவனுடைய வாழ்க்கையும் தந்தை அடித்த அடியால் பாதை மாறி விட்டது.



இதை எதற்கு இப்போது கூறுகிறேன் என்றால், தேர்வு நேரத்தில் தாய் தந்தையர் குழந்தைகளிடம் மிகவும் கடினமாக நடந்து கொள்வதால் எவ்வளவு பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை புரிந்து கொள்வதில்லை. என்னவோ உலகத்தில் பொறியாளர் அல்லது மருத்துவர், இந்த இரண்டு தொழில்களை தவிர வேறு தொழிலே இல்லை என்பது போல் பெற்றோர்கள் நடந்து கொள்கின்றனர். வாழ்க்கையில் சாதிக்க மதிப்பெண்கள் மட்டும் இருந்தால் போதாது. இறைவனின் அருள் இருந்தால் அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது நடந்தே தீரும்.


இன்று வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்களை பாருங்கள். கண்டிப்பாக அவர்களது மதிப்பெண்களை பார்த்தால் 100க்கு 100 வாங்கி இருக்க மாட்டார்கள். இன்றைய காலகட்டத்தில் street-smartஆக இருந்தால் தான் பிழைக்க முடியும். இதற்கும் மதிப்பெண்களுக்கும் சம்பந்தமே இல்லை.
குழந்தைகள் ஏதோ ஒரு பட்டதாரி ஆக மாற வேண்டும், உண்மைதான். அதற்கு உண்டான அத்தனை வசதிகளையும் அவர்களுக்கு செய்து தருவது பெற்றோரின் கடமை. ஆனால் அதற்காக அத்தனை பாடங்களிலும் 95க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அவர்களை வாட்டி எடுப்பது எந்த விதத்தில் ஞாயம்?



பெற்றோர்களே, உங்களது குழந்தைகளின் நலனில் உண்மையாகவே அக்கரை இருந்தால் அவர்களை நல்ல ஒழுக்கத்துடன் நல்ல பண்புகளுடன் வளருங்கள். உங்களுடைய விருப்பத்தை விட அவர்களின் விருப்பம் என்ன என்று கேட்டு அதன்படி வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவுங்கள். மீதியை இறைவன் பார்த்து கொள்வான்.

Friday, 23 January 2009

புரியாத புதிர்கள்-1

இந்த உலகில் அனைத்துமே தமது ஆதிக்கத்தில் தான் நடக்கின்றன என்று மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். ஆனால் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க முடியாத சில புரியாத புதிர்கள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உண்மை. ஏன் இவ்வாறு நடக்கின்றன, எப்படி இவை சாத்தியம் என்பதை "ஆறறிவு படைத்த" மனிதனால் இன்னும் விளக்க முடியவில்லை. எனது அனுபவத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளே இதற்கு உதாரணம். அதை தொடர் வடிவில் எழுத நினைத்துள்ளேன். உங்களது வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி வருமா வேண்டாமா என்பது நிர்ணயிக்கப்படும்.



சில வருடங்களுக்கு முன்பு நேபால் நாட்டின் தலைநகரான காட்மாண்டுவிற்கு எனது தாய் தந்தையர் சென்றிருந்தனர். அங்கிருந்து ஒரு ஐந்து முக ருத்திராக்ஷ கொட்டையை வாங்கி வந்தார்கள். வரும் முன், அந்த ருத்ராக்ஷத்தை அங்குள்ள பசுபதிநாதர் ஆலயத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து எனக்கு கொடுத்தார்கள். நானும், சரி புதிதாக இருக்கிறதே, என்று அதை ஒரு சங்கிலியில் கோர்த்து எனது கழுத்தில் மாட்டிக்கொண்டேன்.



பிறகு இதை பற்றி மறந்தேவிட்டேன்.
ஒரு நாள் வீட்டில் பனியனோடு உட்கார்ந்து கொண்டிருந்தபோது எனது நண்பர் வந்தார். கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை பார்த்து விட்டு அதை எங்கு வாங்கினீர்கள், என்றெல்லாம் விசாரித்தார். நானும் விபரங்களை கூறினேன். உடனே வீட்டிலிருந்து ஒரு எலுமிச்சை பழம், ஒரு உருளைக்கிழங்கு மற்றும் ஒரு பூண்டை எடுத்து வரும்படி கூறினார். எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் நானும் அவற்றை கொண்டு வந்து மேஜை மீது வைத்தேன். அவர் எனது ருத்ராக்ஷத்தை கழற்றி தரும்படி கூறினார். ஏன் என்று கேட்டதற்கு, "நான் செய்வதை மட்டும் பாருங்கள், பிறகு கூறுகிறேன்", என்றார்.



முதலில் உருளைக்கிழங்கையும் பூண்டையும் தள்ளிவிட்டு, எலுமிச்சை பழத்தை மட்டும் மேஜை மீது வைத்தார். பிறகு அந்த ருத்ராக்ஷத்தை எலுமிச்சையின் மேல் அரை அங்குல உயரத்தில் நிற்குமாறு சங்கிலியை தன் விரல் மீது தாங்கிக்கொண்டார். அவ்வளவு தான். ருத்ராக்ஷ கொட்டை வெகு வேகமாக இடமிருந்து வலமாக சுற்ற தொடங்கியது.

என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை.
அடுத்து, எலுமிச்சை பழத்துக்கு பதில் பூண்டை மேஜை மேல் வைத்தார். முன்பு செய்தது போலவே இப்போது ருத்ராக்ஷத்தை பூண்டின் அருகில் கொண்டு சென்றதுமே மிக வேகமாக சுற்ற ஆரம்பித்தது. ஆனால், இப்போது வலமிருந்து இடமாக சுற்ற ஆரம்பித்தது.
கடைசியாக உருளைக்கிழங்கின் மேல் இதை கொண்டு சென்றபோது ஒன்றுமே ஆகவில்லை.

அந்த ருத்ராக்ஷத்தை நான் கையில் வாங்கி "நானே முயற்சி செய்கிறேன்" என்று கூறினேன். என்ன ஆச்சரியம்! நண்பரின் கைகளின் சுற்றியது போலவே எனது கைகளிலும் ருத்ராக்ஷம் சுற்ற ஆரம்பித்தது.

இடமிருந்து வலமாக சுற்றுவது positive energy என்றும் வலமிருந்து இடமாக சுற்றுவது negative energy என்றும் அவர் கூறினார். அதனால் தான் நம் உடம்புக்கு சாத்வீகமான உணவையே உண்ண வேண்டும் என்று கூறினார்.இந்த அனுபவத்துக்கு பிறகு அந்த ருத்ராக்ஷத்தை மேலும் பரீட்சித்து பார்க்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. ஆனால் அதை அணிந்தது முதல் எனது சிந்தனையில் தெளிவும் மனதில் பக்தியும் அமைதியும் குடிகொண்டுள்ளதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன்.

சில வருடங்களுக்கு பிறகு எதேச்சையாக மற்றொரு நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். புதிதாக வாங்கிய வீட்டில் கிணறு வெட்டியிருந்தார்கள். கிணறு வெட்டும் முன் எந்த இடத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை அறிய ஒரு water divinerஐ கூப்பிட நினைத்திருந்தாராம் எனது நண்பர். ஆனால் அவரது அண்ணன் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தை அவிழ்த்து பூமிக்கு வெகு அருகில் உயரே கைகளில் தொங்கவிட்டு மெதுவாக நடந்து சென்றாராம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ருத்ராக்ஷம் மிக வேகமாக சுழல ஆரம்பித்ததாம். அந்த இடத்தில் தோண்டிய கிணற்றில் மிக இனிப்பான தண்ணீர் கிடைத்தது.

ருத்ராக்ஷம் என்பது ஒரு மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த விதை தானே. அதற்குள் இப்படி ஒரு சக்தி எப்படி வந்தது? நமது கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தி இருக்கிறதா? இதை பற்றி தெரிந்தவர்கள் உங்களது அனுபவங்களையும் கூறுங்களேன்.

Saturday, 10 January 2009

நெஞ்சு பொறுக்குதிலையே

1996ம் ஆண்டு. குஜராத்தில் மின் நிலையங்களை அமைக்க தனியார்களுக்கு அந்த மாநிலம் அழைப்பு விடுத்திருந்த நேரம். பம்பாயில் தனியார் வேலை செய்து கொண்டிருந்தேன். புதிய மின் நிலையங்களை அமைத்து நடத்துவது தான் எனது நிறுவனத்தின் முக்கிய வேலை.




ஒரு இடத்தில் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த இடத்தில் நிறைய தண்ணீர், மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல கோபுரங்கள் (towers) அமைக்க இடம், எரிபொருள், நிலத்தின் விலை, என்று மிக தீவிரமான ஆய்வு செய்த பிறகே அந்த இடத்தில் மின் நிலையம் அமைக்க தோது படுமா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள். அதற்காக நேரே சென்று ஆராய்ந்து அரிக்கையை சமர்ப்பிக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது.



பம்பாயிலிருந்து அஹமதாபாதுக்கு சென்று அங்கிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்து கொண்டு கிட்டத்தட்ட 12 இடங்களுக்கு சென்று நேரில் ஆராய்ந்து எனது நிறுவனத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த இடங்களுக்கு செல்வது இருக்கட்டும், அது போன்ற இடங்களின் பெயர்களை கூட நான் அதற்கு முன் கேள்விப்பட்டிருக்கவில்லை.





பல இடங்களில் சரியான சாலை வசதி கூட இருக்கவில்லை. என்ன செய்வது? பிழைப்பு என்றால் இது போன்ற இடங்களுக்கு சென்றுதானே ஆகவேண்டும்?
இப்படி ஊர் ஊராக சென்று எனது வேலையை நான் கவனித்து கொண்டிந்த போது "வியாரா" என்ற ஒரு ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. நீங்கள் இந்த ஊரின் பெயரை உலக atlasல் பூதக்கண்ணாடி வைத்து ஆராய்ந்து பார்த்தால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படிப்பட்ட பட்டிக்காடான ஊர். சாலை என்று ஒன்று இருந்தால் தானே வண்டி செல்ல முடியும். சாலையே இல்லை என்றால் என்ன செய்வது? எனது நிலைமையை யோசித்து பாருங்கள்.



"என்னடா பிழைப்பு இது, இப்படி ஒரு டொக்கு ஊருக்கு வந்து மாட்டிக்கொண்டோமே" என்று எனது மேலதிகாரியை மனதுக்குள் திட்டிக்கொண்டேன். கரடுமுரடான பாதையில் காரை விடவே எனது ஓட்டுனரும் பயங்கர கடுப்புடன் புலம்பிக்கொண்டே வந்தார். சரியான உச்சி வெயில் வேறு. வழியில் ஈ, காக்கை என்ன, கொசுவை கூட காண முடியவில்லை. ஊரை கண்டுபிடிக்கவே இத்தனை நேரம் ஆகிறதே, இனிமேல் அங்கே சென்று எப்பொழுது நான் விபரங்களை திரட்டி எப்பொழுது அங்கே இருந்து மீண்டு வருவது என்று எனக்குள் மன போராட்டமே நடந்து கொண்டிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு பல மணி நேரம் சுற்றி கடைசியில் ஒரு வழியாக அந்த ஊரையும் கண்டுபிடித்து விட்டேன்.



"இப்படி கூட ஒரு ஊர் இருக்குமா? அதில் மக்கள் என்னதான் செய்கிறார்கள்? இவர்களுக்கு மின்சாரம் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன, சரியான சே!" என்றெல்லாம் மனதுக்குள் திட்டிக்கொண்டே சென்றேன்.



திடீரென்று எங்கிருந்து அத்தனை பேர் வந்தார்கள் என்று தெரியவில்லை, எனது வண்டியை அப்படியே சூழ்ந்து கொண்டனர்.




வண்டியை விட்டு நான் இறங்கியதும் அதிசயத்துடன் என்னை பார்த்தார்கள். அனைவரின் தலையிலும் விதவிதமான தலைப்பாகைகள் இருந்தன. அந்த ஊர் பெண்கள் என்னை பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்களது தலைகளை சேலை முந்தானையால் மூடிக்கொண்டு குடிசைகளுக்குள் ஓடின. அம்மணமாக இருந்த சிறுவர்கள் எனது காரை சூழ்ந்துகொண்டு தொட்டு தொட்டு பார்த்து கொண்டிருந்தனர்.



ஊர் பெரியவர் போல இருந்த ஒருவரிடம் நான் வந்த விஷயத்தை சுருக்கமாக கூறி எனது அலுவல் விஷயமான விபரங்களை கேட்டேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே நான் அங்கு வந்த விஷயம் காட்டுத்தீ போல பரவி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் அனைவரும் வேடிக்கை பார்க்க வந்து விட்டனர். ஒருவன் எங்கிருந்தோ ஓடிப்போய் ஒரு குவளையில் சில்லென்று குடிக்கு தண்ணீர் கொண்டு வந்தான். மற்றொருவன் நான் கேட்காமலேயே தேனீரை கொண்டு வந்து வைத்தான்.





ஏற்கனவே நல்ல பசியுடன் நான் இருந்ததால் மறுப்பேதும் சொல்லாமல் அவர்கள் கொடுத்த தேனீரை உடனடியாக குடித்து விட்டேன். அதற்கு பிறகு மெல்ல எனது பார்வையை அவர்களின் மீது செலுத்தினேன்.
அத்தனை பேரின் முகத்திலும் வறுமை அப்பட்டமாக தெரிந்தது. துணியில் கிழிசல் இல்லாமல் ஒருவர் கூட இல்லை. உழைத்து உழைத்து கன்னிப்போயிருந்த கைகள். ஒருவர் காலில் கூட செருப்பு இல்லை. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. சில அலுவல் ரீதியான தகவல்களை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்காக எழுந்து கொண்டேன். எனக்கு தேனீர் கொண்டு வந்தவனிடம் எனது பாக்கெட்டை துழாவி கையில் கிடைத்த பத்து ரூபாயை திணித்தேன். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.

வண்டியில் ஏறி ஒரு அரை கிலோமீட்டர் தூரம் தான் சென்றிருப்பேன். சாலையின் நடுவே ஒருவன் வந்து இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி எனது வண்டியின் முன்னால் வழியை மறித்துக்கொண்டு நின்றான்.



என்ன விஷயம் என்று கேட்டேன். தன்னை 'தஹேஜ்' என்ற சற்றே பெரிய ஊருக்கு என்னை அழைத்து செல்லுமாறு கெஞ்சினான். நானும் அந்த ஊர் வழியாக தான் செல்வதாக இருந்ததால் அவனை காரின் முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்து கொள்ள சொன்னேன். அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் எனக்கு பல முறை நன்றி கூறிக்கொண்டு அமர்ந்து கொண்டான்.



அவனுடன் பேச்சு கொடுத்து கொண்டே வந்தேன். தனது கிராமத்துக்கு ஒரு கார் வருவது இது தான் முதல் முறை என்று கூறினான். அரசாங்க அதிகாரிகள் எட்டி கூட பார்ப்பது கிடையாது. பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ எதுவுமே கிடையாது என்றான். வெள்ளம் வந்தால் கிராமமே தீவு போல மிதக்க ஆரம்பித்து விடும் என்றும், பிரசவத்துக்கு தான் மிக மிக கடினம் என்றும் கூறினான். கோடை காலத்தில் வறட்சியால் மக்கள் பல நாட்கள் பட்டினி கிடப்பது சர்வ சாதாரணம் என்று கூறினான்.



இறைவா! இப்படியும் ஒரு இடமா? நிலவுக்கு ராக்கெட் விடுகிறோம், சுதந்திர நாடு என்று நம்மை நாமே மார்தட்டி கொள்கிறோம், ஆனால் ஒரு சாதாரண கிராமத்துக்கு தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதி போன்றவைகளை கூட செய்து தர இயலவில்லையா? இந்த மக்கள் என்னதான் பாவம் செய்தார்கள்? படிப்பறிவு இல்லை என்பது அவர்களின் குற்றமா? கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை என்று ஒளவையார் பாடினார். ஆனால் அதனினும் கொடிது வாழ்க்கை முழுவதும் வறுமையிலேயே பிறந்து வளர்ந்து இறப்பது தானோ? நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து வந்த எனக்கு இதை நேரில் பார்த்தவுடன் மனதை மிகவும் பாதித்தது.




இந்த சம்பவம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு யதேச்சையாக தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த போது "7000 கோடி ரூபாய் மோசடி செய்த கணிணி தொழிலதிபர்" என்ற தலைப்பு செய்தியை பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. அடுத்த வேளை சாப்பாடுக்கே கஷ்டப்படும் அந்த கிராம மக்களின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அவர்கள் ஏழைகள் தான். ஆனால் கண்டிப்பாக திருடர்கள் அல்ல. ஒரு கோடிக்கு பின் எவ்வளவு பூஜ்யங்கள் இருக்கின்றன என்பது இருக்கட்டும், "கோடி" என்றால் என்ன என்பதையே தெரியாத மக்கள் உள்ள நாட்டில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். என்னத்தை சொல்வது?

Monday, 5 January 2009

கணிணி துறையினரும் நிதி நெருக்கடியும்

நிதி நெருக்கடி உலகம் முழுவதும் பரவி விட்டது. இதில் எல்லா துறையினரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக கணிணி துறையினருக்கு பாதிப்பு அதிகம் என்றே கூறலாம்.


கணிணி துறையினரின் இந்த வீழ்ச்சி யாருமே எதிர்பாராதது. இதற்கு முக்கிய காரணமே பெரும்பாலான கணிணி துறையினர் அமெரிக்காவினரால் outsource செய்யப்பட்ட வேலைகளை செய்வதால் தான். அமெரிக்கா தும்மினால் உலகம் முழுவதும் ஜலதோஷம் பிடித்து கொள்ளும் என்று ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. அது கணிணி துறைக்கு நன்றாகவே பொருந்தும்.


துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகம் முழுவதும் இப்பொழுது பரவிவிட்டது. பல இரும்பு உருக்காலைகள் மூடும் தருவாயில் உள்ளன. வாகன உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பலவற்றில் ஆட்குறைப்பு நடந்து கொண்டுதான் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் இதன் தாக்கம் மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது. செளதியை மற்றும் கத்தாரை பொருத்தவரை புதிய projectகள் பல தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதை நம்பி இருக்கும் நூற்றுக்கணக்கான ஒப்பந்தக்கார நிறுவனங்களும் அதில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கணிணி துறையின் வீழ்ச்சியை சிலர் உள்ளூர மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது அறியாமையின் வெளிப்பாடே. ஆழ்ந்து ஆராய்ந்தால் சமூகத்தில் கணிணி துறையினர் ஏற்படுத்திய திடீர் பொருளாதார ஏற்ற தாழ்வு பலருக்கு கடுமையான பண தட்டுப்பாட்டையும் அதனால் இந்த துறையினர் மீது பொறாமையும் சேர காரணமாக இருந்து விட்டது என்பதே உண்மை.


நான் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை, ஆனால் "சில" கணிணி துறையினர் திடீர் பணக்காரர்கள் ஆனதால் தலைக்கேறிய போதையில் ஏதோ மேலை நாட்டில் இருப்பது போல பொது இடங்களில் நடந்து கொள்வதும், ஆண்/பெண் பேதமின்றி மிகவும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொள்வதும், அந்த ஒரு சிலரின் நடவடிக்கைகளுக்காக அனைத்து கணிணி துறையினரும் மற்ற சிலரின் வெறுப்பையே சம்பாதித்து கொண்டதும் உண்மை. குறிப்பாக சென்னையிலிருந்து மஹாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாரக்கடைசிகளில் நடந்த சம்பவங்களை யாராலும் எளிதாக மறக்க முடியாது.


இது ஒரு புறம் இருக்க, இந்த திடீர் பணக்காரர்களுக்கு கையில் இவ்வளவு பணம் வந்தவுடன் ஊரில் இருக்கும் வீடுகளை எல்லாம் வாங்க ஆரம்பித்தனர். பணப்புழக்கம் திடீரென்று அதிகமானவுடன் கூடவே விலைவாசியும் ஏற ஆரம்பித்தது. இதனால் சாதரண மக்களின் பாடு தான் திண்டாட்டம் ஆகிவிட்டது.


உதாரணமாக‌, 5000 மாத வாடகை கொடுத்து கொண்டிருந்தவனை வீட்டுக்காரன் திடீரென்று "15000 கொடு, இல்லையென்றால் கணிணி துறையினர் கொடுக்க தயாராக உள்ளனர், அதனால் வீட்டை காலி செய்" என்று சர்வ சாதாரணமாக கூறியதால் எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் தெரியுமா? இவர்களாவது பரவாயில்லை, வட்டி விகிதம் அதிகம் வரும் என்ற நினைப்பில் VRS பெற்று கொண்டு திடீரென்று ஏறிய விலைவாசியால் தவித்த/தவிக்கின்ற நடு வயதுக்காரர்கள் எத்தனை பேர் தெரியுமா? லட்சக்கணக்கில் விற்ற வீடுகளை கோடிக்கணக்கில் விலை ஏறிவிட ஒரு சாதாரண நடுத்தர மனிதன் சென்னை போன்ற நகரங்களில் வீடு வாங்குவது இந்த ஜென்மத்தில் முடியாது என்கிற நிலைமை ஆகிவிட்டது. இதற்க்கு காரணம் கணிணி துறையினர் மட்டும் தான் என்று கூறவில்லை, ஆனால் கணிணி துறையினர் சமுதாயத்தில் ஏற்படுத்திய பொருளாதார தாக்கமும் ஒரு காரணம் என்று தான் கூற விரும்புகின்றேன்.



இந்த நிதி நெருக்கடி தற்காலிகமானது தான். ஆனால் பழையபடி நிலவரம் சரியாக பல மாதங்களாகும் போல தோன்றுகிறது. நஷ்டப்படுவது கணிணி துறை மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளுமே. இந்த‌ நஷ்டத்தால் நாட்டின் பொருளாதாரமும் நஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பணம் வரும்போது தலை தெரிக்க ஆடுவதும் பணம் தீர்ந்ததும் திண்டாடுவதும் மேலை நாடுகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆனால், கணிணி துறையாகட்டும் அல்லது மற்ற துறையினராகட்டும், மீண்டும் ஒரு நிதி சுனாமி அடிக்காமல் நம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் நமது முன்னோர்கள் கூறியபடி "சேமிப்பு" என்கிற பழக்கத்தை எல்லோரும் ஆரம்பிக்க வேண்டும்.

Wednesday, 24 December 2008

துள்ளி திரிந்ததொரு காலம்

பள்ளியில் படித்த காலம் எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும். கவலை இல்லாமல் துள்ளி திரிந்த அந்த காலம் உண்மையிலேயே பொற்காலம் தான்.


எனது பள்ளி காலங்களும் அப்படி தான் இருந்தன. பள்ளியில் படிக்கும் போது புத்தகத்தை படித்தோமோ இல்லையோ ஆசிரியர்களுக்கு புனை பெயர் வைப்பதில் எல்லோரும் புலிகளாக இருந்தோம். எந்த ஒரு ஆசிரியரையும் அவரது உண்மையான பெயரை வைத்து கூப்பிடுவது என்பதே கிடையாது.


அதுவும் எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். இராணுவத்தில் எதிரிகளை சுட்டாரா அல்லது தோசையை சுட்டாரா என்று இன்று வரை புரியாத ஒரு புதிர் தான். ஆனால் குறும்பு செய்யும் மாணவர்களை தோசை திருப்பி போல சாத்து சாத்தென்று சாத்திவிடுவார்.பல ஆசிரியர்களுக்கே இவரை கண்டால் பிடிக்காது. அதனால் அவரது பெயர் 'ஹிட்லர்' என்று வைத்தோம்.


அதே போல வெற்றிலை போடும் ஆசிரியருக்கு பேசும் பொழுது வாயிலிருந்து வெற்றிலை எச்சில் சாரல் போல தெறிக்கும்! அதனால் அவருக்கு 'குற்றாலம்' என்று பெயர். கொடுவாள் மீசையுடன் வரும் ஆசிரியருக்கு 'பாம்பாட்டி' என்றும் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த குள்ளமான ஆசிரியருக்கு (பாவம், அவர் என்ன செய்வார்) 'சித்திரக்குள்ளன்' என்றும் சகட்டு மேனிக்கு புனை பெயர்களை சூட்டியிருந்தோம். பள்ளியிலேயே எங்கள் வகுப்பு மாணவர்களை கண்டால் ஆசிரியர்களுக்கே சற்று கலக்கம் தான்.


எங்களது தமிழ் ஆசிரியர் ஒரு அருமையான ஆசுகவி. அதாவது சற்றும் யோசிக்காமல் சரளமாக மரபுக்கவிதைகளை எதுகைமோனையோடு உடனடியாக சொல்ல கூடியவர். ஒவ்வொறு ஞாயிறன்றும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு முதுநிலை தமிழ் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் எடுப்பார். "என்னுடைய சிறு தமிழ் தொண்டு இது" என்று கூறுவார். உண்மையிலேயே இது போன்றவர்களை பார்ப்பது அரிது.


இவர் தமிழ் பாடம் எடுக்கும்போது எல்லோரும் மிக மிக ஆர்வத்துடன் இருப்போம். பாடத்தின் மேல் இருக்கும் அக்கரையை விட கடைசி 15 நிமிடங்களுக்கு நேயர் விருப்பம் போல இவர் மாணவர்களை விட்டு ஏதாவது தலைப்பு கூற சொல்லி, அந்த தலைப்பில் உடனடியாக ஒரு கவிதையை கூறிவிடுவார். அந்த கவிதை இலக்கண பிழையின்றி அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த கடைசி 15 நிமிடங்களுக்கு வகுப்பே உற்சாகம் களை கட்டி விடும். எங்களுக்கெல்லாம் தமிழ் மேல் ஒரு பற்று வருவதற்கு இவர் ஒரு காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.


கணக்கு பாடம் எடுப்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு புதிய இளம் ஆசிரியை எங்களது பள்ளியில் சேர்ந்திருந்தார். அவரது கெட்ட நேரம் எங்களது வகுப்புக்கே அவர் கணக்காசிரியராக வர வேண்டியதாக போய்விட்டது! குரங்குகளுக்கு பாடம் நடத்த போவது அவருக்கு தெரியாது!


முதல் நாள் அவர் ஒரு formulaவை சொல்லி கொடுத்துவிட்டு அதை எழுத கரும்பலகை பக்கம் திரும்பினார். அவ்வளவுதான். கடைசி பெஞ்சிலிருந்து சரமாரியாக காகித ராக்கெட்டுகள் அவரை நோக்கி பறக்க ஆரம்பித்தன. உடனே அவர் திரும்பி பார்த்வுடன் எல்லோரும் பரம சாதுவாக அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர் திரும்பி எழுத ஆரம்பித்தவுடன் அனைவரும் பலவிதமான மிருகங்களின் குரல்களை எழுப்பி கேலி செய்ய ஆரம்பித்தனர். பாவம், அவர் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. வகுப்பு எடுப்பதை நிறுத்திவிட்டு நேராக ஹிட்லரிடம் சென்று புகார் கூறிவிட்டார்.


அவ்வளவுதான். உடனே ஹிட்லர் எங்களது வகுப்புக்குள் நுழைந்து "எந்த மாணவன் கலாட்டா செய்தான்?" என்று கர்ஜித்தார். யாரும் வாயையே திறக்கவில்லை. யாரை கேட்டாலும் "தெரியாது சார்" என்றே கூறினார்கள். ஹிட்லர் அல்லவா? உடனே எல்லா மாணவர்களையும் மைதானத்துக்கு வரச்சொல்லி அனைவருக்கும் கைகளில் பிரம்பால் பின்னி எடுத்துவிட்டார். நாங்கள்தான் மாவீரர்கள் ஆயிற்றே. 'நாயகன்' படத்தில் டெல்லி கணேஷ் கூறுவது போல ' ம்ஹூம், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை'. அடித்து அடித்து ஹிட்லருக்கு கை வலித்தது தான் மிச்சம்!


இதே போல ஆங்கில‌ வகுப்பெடுத்த வாத்தியாரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை. கேரளாவை சேர்ந்த அவர் மலையாள வாடையுடன் ஆங்கிலம் பேசும் பொழுது தமாஷாக இருக்கும். Bledy, I will simbbbly kick you out. How many times should I repeat this exambbble? என்று அவர் ஆத்திரத்துடன் கூற, அடக்க முடியாமல் வகுப்பே இன்னும் அதிகமாக சிரிக்க, அதை கண்டு அவர் மேலும் கோபமாக, ஒரே கூத்து தான்!


நாங்கள் படித்தது வட நாட்டு பள்ளி என்பதால் (CBSE syllabus) அனைவரும் கண்டிப்பாக ஹிந்தி மொழியை ஒரு பாடமாக படிக்க வேண்டும். ஹிந்தி ஆசிரியர் முதல் நாள் வகுப்பில் நுழைந்தார். "சப் லோக் பைடோ" (எல்லோரும் அமருங்கள்) என்று அவர் கூற நாங்கள் அனைவரும் "சார், எங்கள் யாருக்குமே ஹிந்தி தெரியாது. நீங்கள் தமிழிலேயே (!) சொல்லி குடுங்க" என்று கூற அவர் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே! (எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்!). சுவாரசியமாக அவர் ஹிந்தி செய்யுளை படித்து கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ "ஹா" என்று எவனாவது சத்தம் போட்டு கொட்டாவி விடுவான்! வகுப்பே கலகலத்து விடும்! கடைசியில் அவரும் இந்த பசங்களை திருத்தவே முடியாது என்று ஜோதியில் ஐக்கியமாகி விட்டார்!


இந்த ஆராத்து பசங்களை திருத்தவே முடியாது என்று எல்லா ஆசிரியர்களும் கைவிட்டு விட்டார்கள். ஆனால் பாருங்கள், தேர்வு நேரத்தின் போது எல்லோரும் நல்ல பிள்ளைகளாக மாறி ஆச்சரியப்படும் விதமாக அனைவருமே நல்ல மதிப்பெண்களை பெறுவோம். நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் பள்ளியினாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.


நாங்கள் கலாட்டா செய்யாத ஒரே வகுப்பு தமிழாசிரியரின் வகுப்பு தான். ஏற்கனவே கூறியது போல, அவரது தமிழ் புலமை எங்களை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் என்ன செய்வது? தமிழ் அறிஞர்களின் ஒரு சாபக்கேடு போல, வறுமை அவரையும் வாட்டியது.


ஒரு முறை எங்கள் வகுப்பில், "டேய் பசங்களா, வீட்டு வாடகையை ஏற்றி விட்டான். ஒரு 300 ரூபாய்க்குள் எங்காவது வாடகை வீடு கிடைத்தால் சொல்லுங்கப்பா" என்று கூறினார் (இது நடந்தது 1976ல்). அப்போது தான் எங்களுக்கே அவரது நிலைமை புரிய ஆரம்பித்தது.


சில நாட்கள் தமிழ் ஆசிரியர் பள்ளிக்கு வரவேயில்லை. பிறகு ஒரு நாள் சோகமே உருவாக தாடியுடன் பாடம் எடுக்க வந்தார். எங்களுக்கெல்லாம் பாடத்தில் கவனமே செலுத்த முடியவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வந்த போது, குரலை கனைத்து கொண்டே தனது 6 மாத குழந்தைக்கு காய்ச்சல் வந்து திடீரென்று இறந்துவிட்டதாக கூறினார்.


வகுப்பில் பயங்கர நிசப்தம். எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வழக்கமாக நாங்கள் "சார், இந்த தலைப்பில் கவிதை பாடுங்கள், அந்த தலைப்பில் சொல்லுங்கள்" என்று அவரை நச்சரிப்போம். ஆனால் அன்று இருந்த சூழலில் அப்படி ஒரு அமைதியை எங்கள் வகுப்பு பார்த்ததே இல்லை.


உடனே அவர் தனது கணீர் குரலில் பேச ஆரம்பித்தார்:

"இளவேனிற்காலத்து இளமழலை கனவுகளே!எந்தன் இளமழலை தன்னை இருவிழிக்குள் சேர்ப்பீரோ!"......

த‌ன்னை அறியாம‌ல் அருவி போல‌ க‌விதை ம‌ழை பொழிய ஆரம்பித்தது. துக்கம் தொண்டையை அடைக்க எங்களது க‌ண்க‌ளில் க‌ண்ணீர்.

ஒரு க‌ட்ட‌த்தில்

"நாளைக்கு வ‌ழிய‌றியா ந‌ம் த‌க‌ப்ப‌ன் - த‌மிழ் ப‌டித்த‌ ஏழைக்க‌விஞ‌ன் எனும் இர‌க்க‌த்தால் போனாயோ"

என்று பிரமை பிடித்தவர் போல அவர் கூற வ‌குப்பே உண‌ர்ச்சி பெருக்கில் அவ‌ரிட‌ம் ஓடிப்போய் "வேண்டாம் சார், இத்தோடு நிறுத்தி கொள்ளுங்க‌ள்" என்று அழ‌ ஆர‌ம்பித்து விட்டோம். ம‌ணி அடித்த‌து. த‌மிழ் வ‌குப்பு முடிந்த‌து.


இந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு பிற‌கு ஏனோ தெரிய‌வில்லை, எங்க‌ள‌து வ‌குப்பில் ஆசிரிய‌ர்க‌ளை க‌லாட்டா செய்யும் ப‌ழ‌க்க‌ம் அற‌வே நின்று விட்ட‌து. காலம் யாருக்காகவும் நிற்பது இல்லையே. எல்லோரும் பெரிய‌ வ‌குப்புக‌ளுக்கு சென்று பிற‌கு க‌ல்லூரி, வேலை, க‌ல்யாண‌ம் என்று கால‌த்தின் ஓட்ட‌த்தில் க‌ல‌ந்து விட்ட‌ன‌ர். பல வருடங்கள் ஓடிவிட்டன.


எங்களது தமிழாசிரியர் இப்போது அந்த பள்ளியில் இல்லை. ஒரு பெரிய‌ அர‌சிய‌ல் க‌ட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமைக்கு தின‌மும் அறிக்கை த‌யார் செய்யும் வேலையில் (ghost writing) ஈடுப‌ட்டிருந்தார் என்று சிலர் கூறினர்.


எது எப்படியோ, எங்கள் பள்ளியை கடந்து செல்லும் பொழுதெல்லாம் மறக்க முடியாத இந்த நினைவுகள் என்னையும் அறியாமல் வருவதுண்டு.

Wednesday, 17 December 2008

சலாம் பம்பாய் - 4

பம்பாய் வீ.டீ. இரயில் நிலையத்தில் நான் ஒரு அதிசயமான காட்சியை கண்டேன் என்று கூறினேன் அல்லவா? ஆனால் அதற்கு முன்னால் முதலில் எனது முந்தைய பதிவை படியுங்கள். அப்போது தான் இந்த பகுதி புரியும்.



பம்பாய் வீ.டீ. இரயில் நிலையம் எப்போதுமே கூட்டமாக இருக்கும். காலை நேரமானால் மக்கள் இரயில் நிலையத்திலிருந்து பெருந்திரளாக வெளியே வருவார்கள். அதே போல், மாலையில் இரயில் நிலையத்துக்குள் செல்லும் கூட்டம் வெளியே வரும் கூட்டத்தை விட அதிகமாக இருக்கும். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.
நான் வீ.டீ. இரயில் நிலையத்தை அடைந்த போது மாலை சுமார் 6.15 இருக்கும். சரியான அடை மழை பெய்துகொண்டிருந்தது. பெருந்திரளாக மக்கள் இரயில் நிலையத்தின் 'உள்ளே' செல்வதற்கு பதில் 'வெளியே' வந்து கொண்டிருந்தார்கள். 'என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே' என்று நினைத்துக்கொண்டே இரயில் நிலையத்துக்குள் சென்று பார்த்தால் ஒரு தடத்தில் கூட இரயில் இல்லை. அடுத்த இரயில் புறப்படும் நேரத்தை காட்டும் 'இன்டிக்கேட்டர்கள்' எல்லாவற்றிலுமே "00:00 " என்று இருந்தது.


என்ன விஷயம் என்று பார்த்தால் தண்டவாளங்கள் அனைத்திலும் 4 அடிக்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து இரயில்களும் ரத்து என்று கூறினார்கள். அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு எப்படி செல்வது என்ற கவலையில் மக்கள் அனைவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.மழையோ விடாமல் கொட்டிக்கொண்டே இருந்தது.



அப்போதெல்லாம் அலைபேசி வசதி கிடையாது. ஒரு கடைக்குள் சென்று வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால் வீட்டு தொலைபேசியும் வேலை செய்யவில்லை. சாலை முழுவதும் மக்கள் வெள்ளம். யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. மழையினால் இருட்ட வேறு ஆரம்பித்திருந்தது.



சரி இப்போதைக்கு இரயில் எதுவும் கிடையாது என்பது தெரிந்து விட்டது. ஏதாவது பேருந்து கிடைக்குமா என்று வீ.டீயிலிருந்து அருகில் Fort என்ற இடம் வரை நடந்து வந்தேன். ஒரு முக்கால் மணி நேரமான பின் காட்கோப்பர் என்ற இடத்துக்கு செல்லும் ஒரு பேருந்து வந்தது.



பல முறை நான் சென்னை பல்லவன் பேருந்தில் சென்றிருக்கிறேன், பம்பாய் இரயில் கூட்டத்தில் மிதி பட்டிருக்கிறேன். ஆனால் இந்த பேருந்தில் இருந்த கூட்டத்தை போல எங்குமே நான் பார்த்திருக்கவில்லை. குடை சாய்வது போல பேருந்து வந்து கொண்டிருந்தது. எனக்கோ தவிப்பு. இந்த பேருந்தை விட்டு விட்டால் நாம் இங்கேயே இரவை கழிக்க வேண்டியதுதான்.
வண்டி நின்றது. ஆனால் உள்ளே நுழைவதற்கோ ஒரு துளி இடம் கூட இல்லை. வேறு வழியில்லாமல் பேருந்தின் பின் சக்கரத்தில் ஒரு காலை வைத்து ஏறி மற்றொரு காலை ஜன்னல் வழியே உள்ளே விட்டு உட்கார்ந்திருந்த பயணியின் தொடை மேல் வைத்து உடம்பை உள்ளே புகுத்திக்கொண்டேன்! அப்பாடா, ஒரு வழியாக பேருந்தின் உள்ளே நுழைந்து விட்டேன். அந்த பயணியோ கத்து கத்தென்று கத்தினான். நான் "sorry" (!!) என்று கூறி விட்டு அவனது இரண்டு கால்களுக்கும் நடுவில் நின்று கொண்டேன்! என்ன செய்வது, ஆபத்துக்கு பாவமில்லை!!



எப்படியாவது இங்கிருந்து நகர்ந்தால் சரி. இத்தனைக்கும் நான் போக வேண்டிய இடம் காட்கோப்பரே அல்ல. ஆனால் வீ.டி.யை விட்டு எங்காவது சென்றால் அங்கிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ ஏதாவது கிடைக்கலாம் அல்லவா?
6.30 மணிக்கு பேருந்து கிளம்பியது. வழியெல்லாம் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். முக்கி முக்கி பேருந்து வடாலா என்ற இடம் வரை வந்து சேர இரவு 8.30 ஆகியிருந்தது. இதற்கு மேல் பேருந்து செல்லாது என்று ஓட்டுனன் கூறினான். வெளியே வெள்ளம் போல மழை நீர். பேருந்தில் இருந்த அனைவரும் இறங்கி விட்டனர்.



சில்லென்று மழை நீர் முழங்கால் வரை ஏறியது. இப்போது என்ன செய்வது? சரி, மற்றவர்களை போல நடக்க வேண்டியது தான் என்று வடாலாவிலிருந்து சாலையில் ஓடும் வெள்ளத்திலேயே நடக்க ஆரம்பித்தேன்.
வழி முழுவதும் தண்ணீர். லேசாக குளிர ஆரம்பித்தது. 'வீட்டிற்கு எப்படி போய் சேர்வது? எப்போது போய் சேர்வது? எப்படியாவது தகவல் கொடுத்தாக வேண்டுமே. தொலைபேசி கூட வேலை செய்யவில்லையே' என்றெல்லாம் எண்ணிக்கொண்டே சாலையில் மற்ற பயணிகளுடன் நடக்க ஆரம்பித்தேன். மணி 10.15 இருக்கும். கிங் சிர்க்கிள் என்ற இடத்தை அடைந்தேன். இது தமிழர்கள் வாழும் பகுதி. என்னுடைய துரதிர்ஷ்டம் எல்லா ஹோட்டல்களுமே இழுத்து மூடியிருந்தனர்.



பசி, குளிர், அசதி என்று உடம்பே ஒரு வழியாகி விட்டது. 'இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ கடவுளே, ஏதாவது பேருந்து கிடைக்காதா' என்று ஆதங்கத்துடன் ஸயன் என்ற இடம் வரை வந்து விட்டேன். என்னை போலவே நூற்றுக்கணக்கான மக்கள் சாலையின் வெள்ளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று பார்த்தால் சாலையின் இருபுறமும் புதிதாய் முளைத்த tent கொட்டகைகள். அதன் உள்ளே பெரிய அடுப்புகளில் சுடச்சுட pav bhaji என்ற போண்டா போன்ற தின்பண்டத்தை வீட்டு பெண்மணிகள் தயாரித்து கொண்டிருந்தனர். மழைக்கோட்டுடன் சாலையின் இரு புறத்திலும் இளைஞர்கள் உள்ளெ இருந்து அவற்றை வாங்கி எங்களை போன்றவர்களிடம் இலவசமாக கொடுத்து கொண்டிருந்தனர். என்னிடம் ஒரு இளைஞன் வந்து "அங்கிள், இதை எடுத்து கொள்ளுங்கள்" என்று ஒரு காகிதத்தில் 4 பாவ் பாஜிகளை கொடுத்தான். எனக்கு வாங்குவதற்கு சிறிது தயக்கமாக இருந்தது. நான் யோசிப்பதற்குள் என் கையில் அதை திணித்து விட்டு ஒரே ஓட்டமாக உள்ளே சென்று மேலும் 4 பாவ் பாஜிகளை கொண்டு வந்த மற்றவர்களிடம் கொடுத்தான்.



பசி, நடந்து வந்த அசதி என்று அனைவரும் மயக்க நிலையில் இருந்ததால் கொடுத்த தின்பண்டத்தை உடனே சாப்பிட்டு விட்டோம். அப்போது தான் நான் அந்த கொட்டகைகுள்ளே பார்த்தேன். உள்ளே ஒரு 10 பெண்மணிகள் அடுப்புகளில் தின்பண்டங்களை செய்து கொண்டிருந்தனர். அந்த சுற்று வட்டாரத்து இளைஞர்கள் ஒரு 15 பேர் சுறுசுறுப்பாக உள்ளிருந்து தின்பண்டங்களை காகிதங்களில் எடுத்து பாதசாரிகளிடம் கொடுத்து கொண்டிருந்தனர்.



அந்த இளைஞர்களில் ஹிந்து, முஸ்லிம், கிறித்துவர்கள், சீக்கியர்கள் என்று எல்லா ஜாதி மதத்தினரும் இருந்தனர். ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் ஓடியாடி பொது சேவை செய்து கொண்டிருந்தனர். யாரிடமிருந்தும் ஒரு சல்லி காசு கூட வாங்கவில்லை. நான் ஒருவனிடம் எவ்வளவோ வற்புறுத்தியும் கடைசி வரை என்னிடமிருந்து பணம் வாங்க மறுத்து விட்டான். "இல்லை அங்கிள், நீங்கள் எவ்வளவோ தூரத்தில் இருந்து நடந்து வருகிறீர்கள். உங்களுக்காக இது கூட நாங்கள் செய்யவில்லை என்றால் எப்படி" என்றான். நான் கண் கலங்கி விட்டேன். இத்தனைக்கும் அரசாங்கத்திடமிருந்தோ, இரயில்வேயிடமிருந்தோ அல்லது மாநகராட்சியிடமிருந்தோ ஒருவிதமான உதவி கூட இல்லை. ஆனால் துடிப்புள்ள இந்த இளைஞர்களும் சமைத்து கொடுத்த தாய்மார்களும் என்னமாய் ஒரு மகத்தான சேவை செய்து கொண்டிருந்தனர்! இது போன்று நான் எங்கும் பார்த்ததேயில்லை.



அங்கிருந்து ஸயன் பேருந்து நிலையம் வந்தடைந்தேன். நெடு நேர‌ம் காத்திருந்த‌ பிற‌கு நல்ல வேளையாக நேருல் செல்லும் பேருந்து ஒன்று வ‌ந்த‌து. அதில் ஏறி அமர்ந்து நள்ளிரவு வீடு வந்து சேர்ந்தேன். பொழுது விடிய‌ துவ‌ங்கி இருந்த‌து.



நண்பர்களே, ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு விதமான அனுபவங்களை நான் பார்த்தேன். மனித நேயம் இன்னும் சாகவில்லை. ஆனால் வெளிப்படையாக தெரியவில்லை. ஏதாவது ஒரு மிகப்பெரிய ஆபத்து வந்தால் மட்டும் அது வெளிப்படுகிறதோ? இந்த இரண்டு விதமான அனுபவங்களில் உண்மையான பம்பாய் எது? எனக்கு புரியவில்லை நண்பர்களே! உங்களுக்கு?