சில வருடங்களுக்கு முன்பு நினைத்து கூட பார்த்திராத அபூர்வமான காட்சியை சமீபத்தில் சென்னைக்கு சென்றிருந்தபோது கண்டேன். அனைவரின் கைகளிலும் ஒரு கை பேசி இருந்தது. நான் "அனைவரின்" என்று கூறுவது பெரிய பணக்காரர்களை பற்றி அல்ல. தெருவில் குப்பை கூட்டும் பையன், காலையில் பால் கொண்டு வந்து தரும் பெண், வீட்டில் வேலை செய்ய வரும் வேலைக்காரி, என்று சாதாரணமானவர்களை பற்றி தான். யாருமே இப்போதெல்லாம் கடிதம் எழுதுவதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோர் கைகளிலும் இந்த கைபேசி வந்து விட்டதால் உட்கார்ந்து யோசித்து மெனக்கெட கடிதம் எழுதும் பழக்கம் அறவே நின்று விட்டதோ என்று எண்ணுகிறேன்.
நான் கல்லூரியில் விடுதியில் இருந்த நாட்களை பற்றி யோசித்து பார்த்தேன். வீட்டிலிருந்து கடிதம் எப்போது வரும் என்று ஏங்கிக்கொண்டிருப்போம். நாங்கள் எழுதும் கடிதங்களும் விலாவாரியாக இருக்கும்.
கடிதம் எழுதுவதே ஒரு கலை தான். எனது தந்தை நீண்ட கடிதங்களை எழுத மாட்டார். மொத்தமாகவே மூன்று பத்திகள் தான் இருக்கும் அவர் எழுதும் கடிதங்களில். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு கடிதத்தை முடித்துவிடுவார். ஆனால் இலக்கண பிழைகள் இல்லாமல் தரமானதாக இருக்கும். கடிதத்தின் வலது பக்கத்தின் மேல் கண்டிப்பாக தேதியும் இடமும் இருக்கும். ஆங்கிலத்தில் சில சமயம் அவர் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை அகராதி கொண்டு புரிந்து கொண்டிருக்கிறேன் (Ultimo என்றால் சென்ற மாதம், Proximo என்றால் அடுத்த மாதம், இப்படி இருக்கும் அவருடைய சில ஆங்கில கடிதங்களின் வார்த்தைகள்). இது போன்ற வார்த்தைகள் இன்னும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
தபால்காரரின் வரவை நாங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருப்போம். அவர் கொண்டு வந்து கொடுக்கும் கடிதங்களை படிக்கும் போது வெகு தூரத்தில் இருக்கும் நமது உற்றார் உறவினர்களை நேரே பார்ப்பது போல ஒரு அனுபவம் ஏற்படும். எப்பொழுதாவது தந்தி கொண்டு வந்து கொடுத்தால் தந்தியை பிரிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் வயிற்றை கலக்கி விடும். ஏனென்றால், தந்தி என்றாலே கெட்ட செய்தியாக தான் இருக்கும் என்று ஒரு பரவலான எண்ணம் இருந்த காலம் அது. சில சமயம் 'மணி ஆர்டர்' கொண்டு வந்து தருவார். அப்போது வந்த பணத்தில் அவருக்கு தேனீர் அருந்துவதர்கு கொஞ்சம் பணம் கொடுத்தால் சந்தோஷமாக செல்வார்.
தீபாவளி, பொங்கல் சமயங்களில் தவறாமல் 'இனாம்' வாங்க வந்துவிடுவார் எங்கள் தபால்காரர். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்த அதே தபால்காரர் தான் இப்போதும் வருகிறார். அவருடைய முடி நரைத்து இப்போது சில வருடங்களில் ஓய்வு பெற உள்ளார். முன்பெல்லாம் அவருக்கு 'காக்கி' நிறத்தில் சட்டை, பேண்ட் மற்றும் தொப்பி இருக்கும். சில வருடங்களாக பழுப்பு நிறத்திற்கு அதை மாற்றி விட்டனர்.
வெயிலோ, மழையோ எதுவாக இருந்தாலும் தவறாமல் தனது மிதி வண்டியில் தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார். சில சமயம் முகவரி சரியாக இல்லாமல் போனால் கூட பெயரை வைத்து கொண்டு சரியான வீட்டுக்கு தபால்களை கொண்டு வந்து கொடுத்து விடுவார்.
கை பேசியின் வருகையால் இப்போது யாரும் கடிதங்களும் எழுதுவதில்லை, கடிதங்களை படிப்பதும் இல்லை. இயந்திரத்தனமான வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது? நிறுவனங்களில் இருந்து வரும் கடிதங்கள் கூட கணணியில் அடிக்கப்பட்டு 'கொரியர்' பையன்கள் மூலமாக அனுப்பப்படுகின்றன.
மின் அஞ்சல் யுகத்தில் கையால் எழுதும் கடிதங்கள் காணாமல் போய்விட்டன. அதோடு நம் தபால்காரரும் காணாமல் போய்விட்டாரோ? எல்லா ஆரம்பங்களுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை தான் தபால்காரரின் பயணம் கூறுகின்றதோ?