Tuesday 27 May 2008

காந்திஜியின் கடிகாரம்

1940களில் நடந்த சம்பவம் இது. காந்திஜியை டெல்லியில் தனது மாளிகையில் நேரில் சந்திக்க மவுண்ட்பேட்டன் பிரபு விரும்பினார். முதன்முறையாக நடக்கப்போகும் இந்த சந்திப்பை மிக ஆவலோடு எதிர்ப்பார்த்தார் மவுண்ட்பேட்டன்.

காந்திஜியை தான் நேரில் சந்திக்க விரும்புவதாக அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதத்தை படித்த காந்திஜி, தான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பதில் எழுதினார். ஆனால், அதை உடனடியாக அனுப்ப வேண்டாம் என்றும், ஓரிரு நாட்களுக்கு பிறகு சாதாரண தபாலில் அனுப்பும்படியும் தனது உதவியாளரிடம் கூறினார். "நான் ஆங்கிலேயர்களின் அழைப்பிற்கு ஏங்குவதாக இந்த சின்ன பையன் நினைத்துவிட கூடாது" என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதற்கு சில வருடங்களுக்கு முன்புதான் ஆங்கிலேய பிரதமர் சர்ச்சில், காந்திஜியை "அரை நிர்வாண பிச்சைக்காரர்"(half naked fakir ) என்று தரக்குறைவாக வர்ணித்திருந்தார். காந்திஜியுடன் எந்த ஆங்கிலேய அதிகாரியும் எவ்விதமான தொடர்பும் வைத்திருக்க கூடாது என்று தடை வேறு விதித்திருந்தார். ஆனால், காலத்தின் கட்டாயத்தை யாரால் தான் வெல்ல முடியும்? இது எல்லாம் ம‌ன‌தில் இருந்தாலும், எவ்வித‌ க‌ச‌ப்புண‌ர்ச்சியையும் காந்திஜி வெளியே காண்பிக்க‌வில்லை.

க‌டித‌ம் கிடைத்த‌ ம‌வுண்ட்பேட்ட‌ன் மிக‌வும் குஷியாகிவிட்டார். த‌ட‌புட‌லான‌ ஒரு வ‌ர‌வேற்பை அவ‌ருக்கு த‌ர‌வேண்டும் என்று எல்லா ஏற்பாடுக‌ளையும் செய்தார். காந்திஜிக்காக டெல்லிக்கு த‌னியாக‌ ஒரு விமான‌த்தையும் (chartered flight) ஏற்பாடு செய்தார். ஆனால், எளிமையே உருவான‌ காந்திஜி, அதை நிராக‌ரித்து விட்டு வ‌ழ‌க்க‌ம் போல‌ இர‌யிலில் மூன்றாம் வ‌குப்பு பெட்டியிலேயே ப‌ய‌ண‌ம் செய்தார்.

டெல்லி வந்து சேர்ந்த காந்திஜியை பார்த்த மவுண்ட்பேட்டன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பை தன்னால் மறக்க முடியாது என்று வர்ணித்தார். காந்திஜியை மிகவும் ஆக்ரோஷமான மனிதர் என்று நினைத்த மவுண்ட்பேட்டனுக்கும் அவரது மனைவிக்கும் அவரின் எளிமையும் அன்பும் மிக வித்யாசமாகவும் வியப்பாகவும் இருந்தது.

ஆனால் இந்த முதல் சந்திப்பின்போது காந்தியின் முகத்தில் ஒருவித சோகம் இருப்பதை உணர்ந்தார் மவுண்ட்பேட்டன். தனது விருந்தோம்பலில் ஏதாவது குறை இருந்ததோ என்று எண்ணி அதை அவரிடம் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.

தனது மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார் காந்திஜி. "எனக்கு என்று நான் எந்த பொருளையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. என்னுடைய சொத்து என்று நான் கூறிக்கொள்ள கூடியது நான் உடுத்திக்கொண்டிருக்கும் துணி, கீதை புத்தகம், ராட்டை மற்றும் இடுப்பில் தொங்கும் என்னுடைய கடிகாரம் தான். காலத்தின் மதிப்பை உணர்த்துவதற்காகவே அந்த கடிகாரத்தை எப்போதும் இடுப்பிலேயே நான் சொருகிக்கொண்டிருப்பேன். ஆனால் இன்று இரயிலில் நான் வரும்போது யாரோ அந்த கடிகாரத்தை திருடிவிட்டார்கள்" என்று மிக வருத்தத்துடன் கூறினார்.

"கடிகாரம் திருடு போனது கூட எனக்கு பெரிதாக படவில்லை. ஆனால் இந்த நாட்டு மக்களின் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போய்விடுமோ என்று தான் பயமாக இருக்கிறது" என்று காந்திஜி கூறும்போது அவரது தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளியே வர மறுத்து விட்டன.

இது நடந்து முடிந்து சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் சபர்மதி ஆசிரமத்துக்கு ஒரு மனிதன் வந்தான். காந்திஜியை சந்திக்க விரும்புவதாக அவரின் உதவியாளரிடம் கூறினான். "அவருடைய கடிகாரத்தை திருடியவன் நான் தான். வறுமையால் நான் அறியாமல் செய்து விட்ட இந்த பிழையை காந்திஜி மன்னிப்பாரா?" என்று கேட்டான்.

விஷயத்தை கேள்விப்பட்ட காந்திஜி உடனேயே தனது அறையிலிருந்து வெளியே வந்து அந்த மனிதனை நெஞ்சார கட்டி தழுவிக்கொண்டார். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. காந்திஜியின் நம்பிக்கை வீண் போகவில்லை. வாய்மையே வெல்லும்!
(ஆதாரம்: Freedom at Midnight by Lapierre and Collins )

Wednesday 21 May 2008

மீண்டும் இரயில் பயணங்களில்-II

1998ம் ஆண்டு. செளதி அரேபியாவில் எனக்கு வேலை கிடைத்ததால் பம்பாயில் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டேன். வீட்டு சாமான்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு மீதம் உள்ள சில‌ சாமான்களை இரயிலிலேயே சென்னைக்கு சரக்கு பெட்டியில் கொண்டு செல்ல முடிவு செய்தேன். இது எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.


என்னுடைய போதாத காலம் முன்பதிவு கிடைக்கவில்லை. யாரோ கூறினார்கள் என்று ஒரு 'ஏஜெண்ட்டை' பிடித்தேன். ஒரு பயணச்சீட்டுக்கு 150 ரூபாய் மேலே கொடுத்தால் உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைத்துவிடும் என்று கூறினான். எனக்கோ கட்டாயம் அந்த தேதியில் செல்ல வேண்டிய அவசரம். 'சரி' என்று ஒப்புக்கொண்டு பணத்தை அவனிடம் அழுதேன். அவனோ அடுத்த நாளே 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் உள்ள பயணச்சீட்டை என்னிடம் கொடுத்து விட்டு 'நீங்கள் புறப்படும் நாளன்று இரயில் நிலையத்தில் கண்டிப்பாக இது உறுதி செய்யப்பட்டு விடும்' என்று கூறினான். நான் அதை வேறு நம்பி தொலைத்தேன்.
பம்பாயில் நுழையும் எல்லா சாமான்களுக்கும் 'octroi' என்ற கலால் வரி கட்ட வேண்டியிருந்தது. நானோ புதிய பம்பாயில் இருந்தேன். இரயில் நிலையமோ பம்பாயில் உள்ள வீ.டீ.யில் இருந்தது. சாமான்களை எல்லாம் ஒரு லாரியில் போட்டு விட்டு நான் மட்டும் லாரியின் முன்னே எனது 'ஸ்கூட்டரை' ஓட்டிக்கொண்டு சென்றேன் (அதையும் லாரியில் போட்டால் கலால் அதிகமாக கட்ட வேண்டி வருமே என்றுதான்!). பம்பாயில் நுழைந்த உடனேயே வழக்கம் போல 100 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டர் பின்னால் வந்த லாரியை 'ஆக்ட்ராய்' காரன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். பிறகு, ஸ்கூட்டரை லாரியில் ஏற்றி நான் லாரியின் முன் இருக்கையில் வீ.டீ. வரை வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகுதான் எனது போதாத காலமே ஆரம்பித்தது!


இரயில்வே சட்டப்படி ஸ்கூட்டரை சரக்கு பெட்டியில் ஏற்ற வேண்டுமென்றால் அதிலுள்ள பெட்ரோலை முதலில் முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டுமாம். அதற்கு பிறகுதான் அதை வைக்கோல் வைத்து pack செய்து சரக்கு பெட்டியினுள் ஏற்றுவார்களாம். அடக்கடவுளே! இதை ஏன் யாரும் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. இஞ்ஜின் உள்ளே உள்ள பெட்ரோலை எப்படி நான் வெளியே எடுப்பேன்? இதை சொன்ன இரயில்வே ஊழியன் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் கூறிவிட்டான். வேறு என்ன, எல்லாம் பணம் தான்! நான் உள்ளூர அழுதுகொண்டே அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன். ஒரு வழியாக‌ சரக்கு பெட்டியில் ஸ்கூட்டரையும் மற்ற வீட்டு சாமான்களையும் ஏற்றி விட்டு நான் எனது இருக்கைக்கு சென்றேன்.


எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது இருக்கை இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. 'ஏஜெண்ட்' என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருந்தான். என்ன செய்வது, ஊருக்கு போய்தானே ஆக வேண்டும். இரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தன. கூட்டம் பின்னி எடுத்து விட்டது. சரி, வந்தது வரட்டும் என்று நான் இரயிலில் ஏறிக்கொண்டேன்.


இரயில் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார்.அவரை சுற்றி ஒரு பட்டாளமே மொய்த்து கொண்டிருந்தது. நானும் முண்டி அடித்துக்கொண்டு விடாப்பிடியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கெஞ்சு கெஞ்சென்று அவரை விடாமல் துளைத்து எடுத்து விட்டேன். கடைசியில், பயணச்சீட்டு விலையை விட இரண்டு மடங்கு கொடுத்தால் உட்கார மட்டும் இடம் கொடுக்கும்படி செய்து தருவதாக கூறினார். இது RAC இருக்கை என்றும் மிகவும் கஷ்டப்பட்டு என் மேல் பரிதாபப்பட்டு கொடுப்பதாகவும் வேறு கூறினார். என்ன செய்வது? வேறு வழியில்லாமல் பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் ஒரு இருக்கை எண்ணை கொடுத்து அங்கே சென்று உட்காரும்படி கூறினார். அந்த எண்ணுக்கு சென்றால், என்னை போலவே இன்னும் மூன்று பேர் அதிலே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். படுபாவி, அனைவரிடமும் அவன் இது போல வசூல் செய்திருக்கிறான்! Sideல் இருக்கும் இரண்டு இருக்கைகளை மடக்கி நாங்கள் 4 பேரும் உட்கார்ந்து கொண்டே அன்றைய பொழுது முழுவதையும் கழித்தோம்.


வழியில் அரவாணி தொல்லை வேறு இருந்தது. ஒருத்தி என் முன்னே வந்து 10 ரூபாய் கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் இருந்து நகர மாட்டேன் என்று கூறினாள். நானோ, ஏற்கனவே நொந்து போயிருந்தேன்.


கோபத்தில்,"உனக்கு ஒரு பைசா கூட கிடையாது, முதலில் இங்கிருந்து போ" என்று கத்தி விட்டேன். அவ்வளவுதான், இவள் எங்கிருந்தோ ஒரு அரவாணி கூட்டத்தையே கொண்டு வந்து விட்டாள். எனக்கு பயமாகி விட்டது. ஒவ்வொறுத்தியும் WWF வீராங்கனை போல இருந்தாள். ஏதாவது ஏடாகூடமாக ஆவதற்கு முன் அவளிடம் ஒரு பத்து ரூபாய் தாளை கொடுத்தேன். அவளோ, வெற்றிக்களிப்புடன் 'இதை முதலிலேயே கொடுத்திருக்கலாமில்ல' என்று என் மோவாயில் ஒரு இடி இடித்து விட்டு சென்றாள். அப்பாடா, பிழைத்தேன்!


இரவு வந்தது. பகல் முழுவதும் நான்கு பேரும் உட்கார்ந்து கொண்டே பயணம் செய்ததால் உடம்பெல்லாம் வலி. இரவு 11.30 மணிக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு செய்தி தாளை கீழே விரித்து அதற்கு மேலேயே படுத்துக்கொண்டேன். படுத்த உடனே தூக்கம் தான். கண்களை மூடி உறங்கி விட்டால் ஏழை, பணக்காரன், பொறியாளன், பிச்சைக்காரன் எல்லோரும் ஒன்று தானோ! கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மிக பெரிய வரம் இந்த தூக்கம். இதில் நமது போலி கெளரவங்கள் அனைத்தும் அடி பட்டு போய் விடுகின்றன அல்லவா?


மறு நாள் பகல் முழுவதும் பயணம் செய்து பல மணி நேரம் தாமதத்துக்கு பிறவு ஒரு வழியாக இரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 1.30. உடம்பு முழுவதும் ஒரே வலி. சரி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். இப்போது சரக்கு பெட்டியிலிருந்து ஸ்கூட்டரை வெளியே எடுத்து விட்டால் போதும் என்று நினைத்தேன்.


சக‌ பயணிகள் அனைவரும் சென்று விட்டனர். நான் மட்டும் இரயிலின் கடைசியில் உள்ள சரக்கு பெட்டிக்கு நடந்து சென்றேன். அங்கே பார்த்தால் உள்ளே இருந்த சாமான்களை இரயில்வே ஊழியர்கள் சரமாரியாக பிளாட்பாரத்தில் விசிறி எரிந்து கொண்டிருந்தார்கள் உடையக்கூடிய சாமான்கள் (fragile) எத்தனையோ! ஒருவன் தரதரவென்று என்னுடைய ஸ்கூட்டரை standடுடன் இழுத்துக்கொண்டிருக்கும் போதே ந்ல்ல வேளையாக நான் அங்கு சென்று விட்டேன். என்னை பார்த்தவுடன் திடீரென்று அங்கு இருந்த ஒரு 5 இரயில்வே ஊழியர்களும் மிக மிக பவ்யமாக என்னுடைய ஸ்கூட்டரை மிக மெதுவாக பூ போல எடுத்து பிளாட்பாரத்தில் வைத்தனர். பிறகு ஒருவன், "சார், நீங்கள் முதலில் counterக்கு சென்று ரசீதை வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றான். கவுண்ட்டரோ இரயில் நிலையத்தின் வாசலில் இருந்தது. மீண்டும் இரயிலின் கடைசியில் இருந்து பிளாட்பாரம் முழுதும் நடந்து கவுண்ட்டரை தேடிக்கொண்டு வந்தடைந்தால் அங்கே ஆள் இல்லை. ஒரு 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நான் மீண்டும் லோ லோ வென்று பிளாட்பாரம் முழுவதும் நடந்து சரக்கு பெட்டியை வந்தடைந்தேன்.


என்ன ஆச்சரியம், அந்த 5 ஊழியர்களும் அதே இடத்தில் இன்னும் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். என்னிடம் முதலில் பேசியவன், "சார், நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க. பணத்தை பாய்ச்சிக்கிட்டே போங்க, எல்லாம் சரியா ஆய்டும்" என்றான். 5 பேருக்கு 700 ரூபாய், கவுண்ட்டரில் ரசீது எழுதுபவனுக்கு 200, trolley கொண்டு வருபவனுக்கு 100 என்று மொத்தம் ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டான். அதற்கு பிறகுதான் வேலையே ஆரம்பித்தது. ஒரு வழியாக நொந்து நூடுல்ஸாகி வீடு வந்து சேர அதிகாலை 4 மணி ஆகிவிட்டது.


'மணல் கயிறு' படத்தில் விசு, 'இனிமேல் வாழைப்படம் சாப்பிடுவியா, சாப்பிடுவியா' என்று தூணில் தலையை முட்டிக்கொள்வாரே, அது போல நானும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது!


இதில் வேடிக்கை பாருங்கள். பணம் வாங்கிய யாருக்குமே தாம் ஒரு தவறான காரியத்தை செய்கிறோம் என்ற ஒரு உணர்வே இல்லாமல் இருந்தார்கள். மனசாட்சி என்பதெல்லாம் வெறும் பொய்யா? நல்ல வேளை என்னிடம் பணம் இருந்தது. பிழைத்தேன். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தை இழந்தேன், ஆனால், இப்படி ஒரு வித்யாசமான அனுபவத்தை பெற்றேன்.

Saturday 10 May 2008

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது.
திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியை வாங்கினார். அவ்வளவுதான்! எங்கள் பகுதியில் இருந்த எல்லா சிறுவர்களுக்கும் கொண்டாட்டம் தான். தினமும் அவர்கள் வீட்டுக்கு மாலை 7 மணிக்கு சென்று தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விடுவோம். பெரியவர்கள் மட்டும் சும்மாவா? ஏதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு சரியாக 7 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து விடுவார்கள்! அவர்களுக்கும் ஒரு ஆவல் தான், தொலைக்காட்சியில் அப்படி என்ன தான் காண்பிக்கிறார்கள் என்று!


அவர்கள் வீட்டு பையன் மிகவும் மோசமாக கிரிக்கெட் ஆடுவான். ஆனால் தொலைக்காட்சி பெட்டியை அவர்கள் வாங்கிய உடனே எங்கள் மத்தியில் அவனுடைய மவுசு பெருகி விட்டது. அவன் LBW அவுட் ஆகி விட்டால் கூட அவுட் இல்லை என்று அம்பயர் கூறி விடுவான். அப்போது தானே அவனை ஓசியில் டீ.வீ. பார்க்க விடுவான்! அதே போல அந்த பையனை மட்டும் அதிகமாக bat செய்து காஜி அடிக்க விடுவார்கள். அவன் bat செய்யும் போது வேண்டுமென்றே பந்தை பிடிக்காமல் விட்டுவிடுவார்கள்.
அப்போதெல்லாம் சனி, ஞாயிறன்று திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். வெள்ளி தோறும் "ஒளியும் ஒலியும்" என்ற நிகழ்ச்சி இருக்கும். இந்த இரு திரைப்படங்களையும் "ஒளியும் ஒலியும்" நிகழ்ச்சியையும் பார்ப்பதற்கென்றே அவர்கள் வீட்டில் கூட்டம் கூடி விடும். அடுத்த வாரம் என்ன திரைப்படம் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருக்கும்.

அந்த வீட்டுக்காரருக்கோ ஒரே கடுப்பு. 'ஏன் தான் இந்த தொலைக்காட்சியை வாங்கினோம்' என்று தோன்றி இருக்கும் போல. ,ஏனென்றால் எப்போது பார்த்தாலும் வீடே ஒரு திரைப்பட அரங்கு மாதிரி 'ஜே ஜே' என்று இருக்கும். பார்த்தார் மனிதர். திடீரென்று டீ.வீ. இருக்கும் அறையில் ஒரு உண்டியலை வைத்தார். சிறுவர்களுக்கெல்லாம் 25 பைசா, பெரியவர்களுக்கு 50 பைசா என்று வெளியே ஒரு போர்டை தொங்க விட்டார் (70க‌ளில் 50 பைசா என்ப‌து ஒரு பெரிய‌ தொகைதான், வீட்டு வாட‌கையே 300 ரூபாய்தான் அப்போது!)

இதை அறிந்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் கூட்ட‌ம் திடீரென்று குறைந்த‌து! ஆனால் ப‌ச‌ங்க‌ள் யாருமே இதை க‌ண்டுகொள்ள‌வில்லை. வ‌ழ‌க்க‌ம் போல‌ அவ‌ர்க‌ள் வீட்டுக்கு ப‌டை எடுப்போம். வீட்டுக்கார‌ரும் நாங்க‌ள் எல்லோரும் வந்து உட்கார்ந்த உடனேயே தொண்டையை கனைத்துக்கொண்டு உண்டிய‌லை ஒரு முறை குலுக்குவார். நாங்க‌ள் தான் ய‌ம‌காத‌க‌ ப‌ய‌ல்க‌ள் ஆயிற்றே! அதை ஓர‌க்க‌ண்ணால் கூட‌ பார்க்காம‌ல், த‌ன் முய‌ற்சியில் ச‌ற்றும் ம‌ன‌ம் த‌ள‌ராத‌ விக்ர‌மாதித்ய‌ன் போல தொலைக்காட்சி பெட்டியையே பார்த்து கொண்டிருப்போம்.

வாரா வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டுக்கு இந்த ப‌டை எடுப்பு தொடர்ந்தது. சில‌ வார‌ங்க‌ளுக்கு பிற‌கு வீட்டுக்கார‌ருக்கே அலுத்து போய் விட்ட‌து. 'எக்கேடாவ‌து கெட்டு போங்கள்' என்று நாங்க‌ள் உள்ளே நுழைந்த‌வுட‌ன் அவ‌ர் எங்காவ‌து சென்று விடுவார்.

அத‌ற்கு பிற‌கு ப‌ரீட்சை நேர‌ம் வ‌ந்த‌தால் எல்லோர் வீட்டிலும் வெளியே செல்வ‌த‌ற்கு த‌டை விதித்திருந்த‌ன‌ர்.
இதற்குள் ஒரு 3 மாதங்கள் ஓடி விட்டது. எல்லா பயல்களும் தத்தம் பெற்றோர்களை தொலைக்காட்சி வாங்குமாறு நச்சரிக்க தொடங்கினர். நாளடைவில் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டியை வாங்க துவங்கினார்கள். மெல்ல மெல்ல வானொலியை கேட்பதையே அனைவரும் நிறுத்தி விட்டிருந்தனர்.

பல
வருடங்களுக்கு பிறகு வண்ண தொலைக்காட்சி பெட்டி வந்தது. அதற்கு பிறகு பல channelகள், பல குப்பை நிகழ்ச்சிகள், சில தரமான நிகழ்ச்சிகள் என்று காலம் உருண்டோடி விட்டது. இப்போது வானொலியில் மீண்டும் FM நிகழ்ச்சிகள் வர தொடங்கிய பின் நல்ல பாடல்களை கேட்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். ஆனால், என்ன இருந்தாலும், சிறுவர்களாக இருந்த போது வானொலி முன்பு அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு "பாப்பா மலர், ஒலிச்சித்திரம்" ஆகியவற்றை கேட்ட இன்பம் இனி மீண்டும் வருமா என்றுதான் தெரியவில்லை.

Sunday 4 May 2008

துரத்திய பூனை

இன்று காலை எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் ஏற்பட்டது. வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக எனது காரை கிளப்பினேன். கார் நகர்ந்து சிறிது தூரம் தான் சென்றிருக்கும். ஒரு பூனை எனது வண்டியை துரத்த ஆரம்பித்தது.
பொதுவாக நாய்கள் வண்டிகளை துரத்துவது உண்டு. இதுவோ பூனை. அதுவும் வண்டியின் பின்னால் துரத்தவில்லை. எனது ஜன்னலின் பக்கத்திலேயே காரின் வேகத்துக்கு சமமாக சாலையில் வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. ஒரு அரை கிலோமீட்டர் வண்டியை நான் ஓட்டியிருப்பேன். ஏதோ மனதுக்கு சரியாக படவில்லை.
'இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே. இப்படி இதுவரை ஆனதே இல்லையே' என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தேன். 'சரி, வந்தது வரட்டும்' என்று காரை சாலை ஓரமாக நிறுதினேன். பூனையும் சட்டென்று அதே இடத்தில் நின்று விட்டது. நான் காரை விட்டு கீழே இறங்கினேன்.
"மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து பூனை கத்த ஆரம்பித்தது. ஏதோ சொல்ல வருகிறாற்போல இருந்தது. ஆனால் என்ன என்று தான் புரியவில்லை. காரில் இருந்து இறங்கிய நான் ஏதோ ஒரு உந்துதலில் இஞ்ஜின் 'போனட்டை' திறந்தேன். உள்ளே பார்த்தால் ஒரு அதிர்ச்சி.
ஒரு டென்னிஸ் ப்ந்து அளவுக்கு மிக சிறிய பூனைக்குட்டி ஒன்று "மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து கத்தியது. அந்த சிறிய ப்ந்துக்குள் அழகான கண்கள், மீசை எல்லாம் இருந்தன. நேற்று இரவு தான் பிறந்திருக்கும் போல! அடக்கடவுளே! இதற்காக தான் தாய் பூனை என்னை துரத்திக்கொண்டு வந்ததா? சரி, எப்படி இந்த பூனைக்குட்டியை வெளியே எடுப்பது என்று எண்ணிக்கொண்டே காரிலிருந்து ஒரு டிஷ்யூ காகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை பிடிக்க முயற்சி செய்தேன். பூனைக்குட்டியோ என்னை பார்த்து பயந்து கொண்டு வண்டியின் அடியில் சென்று ஒளிந்து கொண்டது. 'இது என்னடா வம்பாக போய் விட்டது' என்று நினைத்துக்கொண்டேன். இஞ்ஜின் வேறு சூடாக இருந்தது. பல நிமிடங்கள் போராடிய பிறகு பூனைக்குட்டி இஞ்ஜின் அடியில் இருந்து சாலையில் குதித்தது. அவ்வளவுதான். தாய் பூனை ஒரே தாவாக தாவி அதை தன் வாயால் கவ்விக்கொண்டு சிறிது தூரம் சென்று குட்டியை கீழே போட்டது. பிறகு அதை தனது நாக்கால் வாஞ்ஜையுடன் நக்கியது.
பார்க்கவே மிகவும் பரவசமாக இருந்தது. அந்த தாய் பூனையின் விடா முயற்சியும் குட்டியின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் கண்டு வியந்தேன்.
அலுவலகம் போய் சேர்ந்த பிறகு வெகு நேரம் எனக்கு இந்த பூனைக்குட்டியின் நினைவே இருந்தது. ஏதோ பணத்துக்காக நாமும் தினமும் வேலைக்கு செல்கிறோம். அடிமை வாழ்வு வாழ்கிறோம். இயந்திரத்தனமான வாழ்க்கையில், கடவுள் நமக்கு கொடுத்த‌ இந்த சிறிய இன்பங்களை அனுபவிக்க மறந்து விடுகிறோம் இல்லையா? ஆறரிவு படைத்த மனிதனுக்கு ஐந்தறிவு படைத்த பிராணி ஏதோ கற்று கொடுத்த மாதிரி இருந்தது எனக்கு. இதை படிக்கும் உங்களுக்கு?