Sunday 4 May 2008

துரத்திய பூனை

இன்று காலை எனக்கு ஒரு வித்யாசமான அனுபவம் ஏற்பட்டது. வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக எனது காரை கிளப்பினேன். கார் நகர்ந்து சிறிது தூரம் தான் சென்றிருக்கும். ஒரு பூனை எனது வண்டியை துரத்த ஆரம்பித்தது.
பொதுவாக நாய்கள் வண்டிகளை துரத்துவது உண்டு. இதுவோ பூனை. அதுவும் வண்டியின் பின்னால் துரத்தவில்லை. எனது ஜன்னலின் பக்கத்திலேயே காரின் வேகத்துக்கு சமமாக சாலையில் வேகமாக ஒடிக்கொண்டிருந்தது. ஒரு அரை கிலோமீட்டர் வண்டியை நான் ஓட்டியிருப்பேன். ஏதோ மனதுக்கு சரியாக படவில்லை.
'இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே. இப்படி இதுவரை ஆனதே இல்லையே' என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தேன். 'சரி, வந்தது வரட்டும்' என்று காரை சாலை ஓரமாக நிறுதினேன். பூனையும் சட்டென்று அதே இடத்தில் நின்று விட்டது. நான் காரை விட்டு கீழே இறங்கினேன்.
"மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து பூனை கத்த ஆரம்பித்தது. ஏதோ சொல்ல வருகிறாற்போல இருந்தது. ஆனால் என்ன என்று தான் புரியவில்லை. காரில் இருந்து இறங்கிய நான் ஏதோ ஒரு உந்துதலில் இஞ்ஜின் 'போனட்டை' திறந்தேன். உள்ளே பார்த்தால் ஒரு அதிர்ச்சி.
ஒரு டென்னிஸ் ப்ந்து அளவுக்கு மிக சிறிய பூனைக்குட்டி ஒன்று "மியாவ் மியாவ்" என்று என்னை பார்த்து கத்தியது. அந்த சிறிய ப்ந்துக்குள் அழகான கண்கள், மீசை எல்லாம் இருந்தன. நேற்று இரவு தான் பிறந்திருக்கும் போல! அடக்கடவுளே! இதற்காக தான் தாய் பூனை என்னை துரத்திக்கொண்டு வந்ததா? சரி, எப்படி இந்த பூனைக்குட்டியை வெளியே எடுப்பது என்று எண்ணிக்கொண்டே காரிலிருந்து ஒரு டிஷ்யூ காகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை பிடிக்க முயற்சி செய்தேன். பூனைக்குட்டியோ என்னை பார்த்து பயந்து கொண்டு வண்டியின் அடியில் சென்று ஒளிந்து கொண்டது. 'இது என்னடா வம்பாக போய் விட்டது' என்று நினைத்துக்கொண்டேன். இஞ்ஜின் வேறு சூடாக இருந்தது. பல நிமிடங்கள் போராடிய பிறகு பூனைக்குட்டி இஞ்ஜின் அடியில் இருந்து சாலையில் குதித்தது. அவ்வளவுதான். தாய் பூனை ஒரே தாவாக தாவி அதை தன் வாயால் கவ்விக்கொண்டு சிறிது தூரம் சென்று குட்டியை கீழே போட்டது. பிறகு அதை தனது நாக்கால் வாஞ்ஜையுடன் நக்கியது.
பார்க்கவே மிகவும் பரவசமாக இருந்தது. அந்த தாய் பூனையின் விடா முயற்சியும் குட்டியின் மேல் வைத்திருக்கும் பாசத்தையும் கண்டு வியந்தேன்.
அலுவலகம் போய் சேர்ந்த பிறகு வெகு நேரம் எனக்கு இந்த பூனைக்குட்டியின் நினைவே இருந்தது. ஏதோ பணத்துக்காக நாமும் தினமும் வேலைக்கு செல்கிறோம். அடிமை வாழ்வு வாழ்கிறோம். இயந்திரத்தனமான வாழ்க்கையில், கடவுள் நமக்கு கொடுத்த‌ இந்த சிறிய இன்பங்களை அனுபவிக்க மறந்து விடுகிறோம் இல்லையா? ஆறரிவு படைத்த மனிதனுக்கு ஐந்தறிவு படைத்த பிராணி ஏதோ கற்று கொடுத்த மாதிரி இருந்தது எனக்கு. இதை படிக்கும் உங்களுக்கு?

No comments: