Thursday 5 December 2013

கண்ணன் அந்தாதி

அரிந்தோடும்        செல்வத்தை                ஓயாது              தினம்தேடித்
திரிந்திங்கே          தவிக்குமென்               மனமே!              - நடப்பது
அரியின்                  ஆட்டம்தான்              அறிவாயே        உனதுயிரும்
பிரியியுமுன்      அவன்பாதம்                   பற்று.

பற்றறுத்து           அரிப்பாதம்                   பற்றிடும்             நல்லடியார்க்கு
குற்றம்                  குறையேது                   மனமே!               - என்றும்
சற்றேயும்            தளராது                          நாராயணன்         நாமத்தை
ஒற்றிப்                  பணிந்து நீ                      செல்.

செல்வமும்          ஞானமும்                     கல்வியும்            ஓங்கிடவே
வல்வினையை  அழிப்பாயே                   மனமே!              - நாவின்
சொல்லாலே         பாடிடுவாய்                 கண்ணபிரான்    திருநாமம்
நல்வழியை          காட்டிடுவான்              அவன்.

அவன்நாமம்        நினைத்திட்டால்        நற்கதியும்          கிட்டிடுமே
சிவனும்                 அன்றுரைத்தானே    மனமே!              -  மனிதர்
தவம்செய்ய          வேண்டாமே             முக்தியையும்    தந்திடுவான்
எவனும்                  நினைத்திட்டால்     அவனடி.

அடிபணியும்         அடியார்க்கு                 தடையதனை        தகர்த்திடுவான்
முடிப்பீலி               மயிலிறகோன்         மனமே!                    -  பாதம்
பிடித்தோர்க்கு      பதமலரின்                அருளுண்டாம்       அடியோர்க்கு
மடிப்பிச்சை          தந்திடுவான்             முரளி.

முரளியவன்         பாதத்தை                     பற்றுடனே           பற்றிட்டால்
வரமாயிரம்           வழங்கிடுவான்          மனமே!                -அருளை
கரமதனால்           பொழிந்திடுவான்      கருத்துள்ளே     காத்திட்டு
சிரம்தாழ்ந்தால்   சென்றிடுமே                வினை.

வினையாவும்      வீழ்ந்திடுமே               வாமனனின்        நாமத்தை
நினைத்தாலே      நற்கதியாம்                 மனமே!                 - மாந்தர்
தனைத்தானே     அறிந்திட்டால்           சத்தியமாய்         கேட்டிடுமே
மனையாவும்       மங்கலத்தின்              ஒலி.

ஒலியாவும்           கேட்பதுவே               அவன்கருணை    மழையாலொப்
பிலியப்பன்           அருளால்தான்         மனமே!                   - ஞாலக்
கலிவினைகள்     களைந்திடுமே        திருமாலின்             திருக்கரச்சங்
கொலியதனை     கேட்டாலே               சுகமே.

சுகமிங்கு          நிலைத்திடவே    நாராயணன்     நாமத்தை
அகமகிழக்       கேட்டிடுவாய்       மனமே!             - கண்ணன்
புகழினையே   பைந்தமிழில்       பாடவந்தேன்  அந்தாதி
இகம்காக்க      இயம்பிடுவாய்     அரி.




3 comments:

G.M Balasubramaniam said...

கண்ணன் அந்தாதி சிறப்பாக இருக்கிறது.தமிழில் உங்கள் ஆளுமை தெரிகிறது. நானும் ஒரு அந்தாதி எழுதி இருந்தேன். ஆனால் மரபுக் கவிதை அல்ல. என் வழியில் ஒரு அந்தாதி என் மனைவிக்கு பாமாலையாக எழுதி இருந்தேன்.
gmbat1649.blogspot.in/2011/09/blog-post_27.html வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

ஆகா! beautiful!
முடிப்பீலியா? அப்படின்னா?

Expatguru said...

அப்பாதுரை,

பீலின்னா கண்ணன் முடி மேல் இருக்கும் மயில் இறகு. நிஜமாவே உங்களுக்கு தெரியலையா இல்லை என்னை வெச்சு காமெடி கீமடி ஏதாவது பண்றீங்களா? தட்டு தடுமாறி ஏதோ நான் எழுதியதற்கு உங்களுடைய நசிகேத வெண்பா தான் inspiration. அந்தாதியில் ஏதாவது குற்றம் குறை இருந்தால் தாராளமாக சொல்லுங்களேன். உங்களுக்கு ஒரு அரசன் கிடைத்தது போல எனக்கு ஒரு அப்பாதுரை.

உண்மையிலேயே கேட்கிறேன், கம்ப இராமாயணத்தை வெண்பா வடிவில் தாங்களேன். ப்ளீஸ்.