Wednesday 9 January 2008

மறதி திலகங்கள்

எல்லா தந்தை குலங்களும் கேட்க வேண்டிய சோகக்கதை இது!

பொதுவாகவே மனைவிகள் அனைவரும் தத்தம் கணவன்கள் மேல் ஒரு புகார் கூறுவார்கள். அது என்னவென்றால், உலகில் உள்ள கணவன்கள் அனைவரும் மறதி திலகங்கள் என்பது தான். இந்த பட்டியலில் நானும் ஒருவன் என்பதை பரிதாபத்துடன் கூறிக்கொள்கிறேன்.

விஷயம் ஒன்றும் இல்லை ஐயா. எனது நண்பன் தன் குழந்தைக்கு பிறந்த நாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். விழாவில் கேக் எல்லாம் வெட்டி சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்காக ஒரு பல்சுவை நிகழ்ச்சி இருந்தது. இதில் ஒவ்வொரு குழந்தையாக மேடை மேல் ஏறி தனக்கு தெரிந்த பாடலை பாடியோ அல்லது வாத்தியத்தை இசைத்தோ அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
இது போன்ற விழாக்களில் சில புதிய நண்பர்களின் சகவாசம் கிடைக்கும் அல்லவா?

புதிதாக சந்திக்கும் நண்பர்களை நாமே வலிய சென்று அறிமுகப்படுத்தி கொள்ளலாம் என்று எனது நண்பன் தீபக்கிடம் கூறினேன். அவனும், "சரி வா. எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை உனக்கு முதலில் நான் அறிமுகப்படுத்துகிறேன்" என்று கூறினான்.

அதோடு மட்டும் நிறுத்திக்கொண்டிருக்கலாம். "இந்த மனைவிகளுக்கு எப்போது பார்த்தாலும் டீ.வீ. சீரியல்களை பற்றி பேசத்தான் நேரம் இருக்கும். புதிய நண்பர்கள் கிடைத்தால் கூட 'அவன் மனைவி பச்சை நிற மைசூர் சில்க் புடவை கட்டிக்கொண்டு வந்தா' என்று ஒரு மாதத்துக்கு பிறகு கூட ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கமெண்ட் அடித்தான். அவன் எவ்வளவு பெரிய வம்பில் மாட்டிக்கொள்ள போகிறான் என்று அப்போது தெரியவில்லை.

தீபக் ஒருவரிடம் சென்று, "தியாகராஜன், இவர் தான் என் நண்பர் ராஜூ" என்று கூறினான். தீபக்கின் மனைவியும் தியகராஜனின் மனைவியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். நானும் தியாகராஜனிடம் கை குலுக்கினேன். அவர் உடனே தீபக்கிடம் "சார், நான் தியாகராஜன் இல்லை. என் பெயர் ஜெகன்னாதன்" என்றார். தீபக்கின் முகம் என்னவோ போலாகிவிட்டது. ஒரு நிமிடம் அங்கு மயான அமைதி நிலவியது.

நானாவது சும்மா இருந்திருக்க வேண்டும். என் நண்பனை நான் விட்டுக்கொடுக்க முடியாது அல்லவா? நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே! உடனே நான் "ஜெகன்னாதன் சார், உங்க பையன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிச்சான்" என்றேன்.இப்போது என் மனைவி என்னை பார்த்து முறைத்தாள். 'என்னடா, நான் ஏதாவது தப்பாக கூறிவிட்டேனா' என்று நான் நினைப்பதற்குள் ஜெகன்னாதன் குரலை கனைத்துக்கொண்டே "சார், இப்போ வாசிச்சது என் பையன் இல்லை. எனக்கு பையனே கிடையாது" என்றாரே பார்க்கலாம்!

பிறகு என்ன, எல்லா மனைவிகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். கவுத்துட்டாங்கய்யா, கவுத்துட்டாங்கய்யா!