Saturday 2 February 2008

சியாச்சன்

உலகிலேயே மிகவும் உயரமான பனி மலைகளுள் சியாச்சன் பனி மலையும் ஒன்று. கோடை காலத்தின் உச்ச கட்ட வெய்யில் ‍இங்கு -35 டிகிரியும் 'குளிர்' காலத்தில் -60 டிகிரியும் இருக்கும். இந்த சியாச்சன் மலையில் அப்படி என்ன தனித்தன்மை தெரியுமா? இந்த மலை உச்சியிலிருந்து பார்த்தால் கீழே நடப்பவை அனைத்தும் தெரியும். அதாவது மனிதர்கள், வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் பார்க்கலாம்.

ஒரு பக்கம் இந்திய, மற்றொரு பக்கம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் என்று இரு பக்கமும் பார்க்கலாம். ஏனெனறால், சியாச்சன் மலையின் உயரம் 21000 அடி!

சியாச்சன் மலையை யார் பிடித்தாலும் காஷ்மீரையே பிடித்த மாதிரி தான். ஏனென்றால் கீழே செல்லும் நெடுஞ்சாலையை மேலிருந்து கண்காணிக்க‌லாம். அதனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் அனைத்தையும் சுட முடியும். மிக முக்கியமான இந்த நெடுஞ்சாலையை கை பற்றி விட்டால் காஷ்மீரையே துண்டித்து விடும் அபாயம் இருந்தது.

1987ம் ஆண்டு வரை இதன் முக்கியத்துவத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே பொருட்படுத்தவில்லை. ஆனால் 1987ல் தீவிரவாதத்தின் உச்சகட்டத்தில் எப்படியாவது காஷ்மீரை கைபற்றி விடவேண்டும் என்று பாகிஸ்தான் இந்த சியாச்சன் மலையை ஆக்கிரமித்து கொண்டது. ஓசைப்படாமல் ஆக்கிரமித்து கொண்ட இடத்தில் 500 மீட்டர் உயரத்துக்கு ஒரு பனி சுவரையும் (ice wall) கோட்டை போல கட்டிக்கொண்டது. பனி சுவற்றின் ஒரு பக்கம் அதள பாதாளம். கரணம் தப்பினால் மரணம் நிச்சயம். மற்றொரு பக்கம் கீழே மலை அடிவாரம்.

இந்த 'கோட்டையிலிருந்து' சியாச்சன் மலை அடிவாரத்திலுள்ள இந்திய இராணுவத்தின் பிலாஃபொண்டு கணவாயை (Bilafond Pass) நோக்கி மேலிருந்து பாக் இராணுவத்தினர் திடீரென்று ஒரு நாள் சுட ஆரம்பித்தனர். தற்காப்புக்காக நமது இராணுவம் படைகளை திரட்டி வந்தால் அதையும் சுட ஆரம்பித்தனர். ஏனென்றால், மேலே உயரத்திலிருந்து தான் கீழே நடப்பவை அனைத்தையும் கண்காணிக்க முடிகிறதே. அது மட்டுமல்ல, gravity யின் காரணமாக மேலிருந்து கீழே சுடுவது அவர்களுக்கு எளிதாக இருந்தது.எப்படியாவது இவர்களை சியாச்சினிலிருந்து விரட்டி விட வேண்டும் என்று இந்திய இராணுவம் எண்ணியது. அந்த நாளும் வந்தது.

1987ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி. ராஜீவ் பாண்டே என்ற துடிப்பான இளம் இராணுவ அதிகாரியின் (2nd lieutenant) தலைமையில் ஒரு சிறப்பு படை சியாச்சனை பிடித்து விடும் குறிக்கோளோடு கிளம்பினார்கள். பிலாஃபொண்டு கணவாயிலிருந்து சென்றால் மேலிருந்து சுட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் உலக போர் வரலாற்றில் யாருமே இதுவரை செய்ய துணிந்திடாத ஒரு காரியத்தை ராஜீவ் பாண்டே செய்தார்.

அதாவது 90 டிகிரி செங்குத்தான பனி சுவற்றில் ஏறி எதிர் பக்கத்திலிருந்து தாக்குவதுதான் வியூகம். நடுநடுங்க வைக்கும் குளிரில் இந்த பனி சுவற்றில் கீழே வருபவர்களுக்கு கால்களை வைப்பதற்கு ஏதுவாக கோடாரியால் கொத்திக்கொண்டே மேலே சென்றார். எதிரி படைகளை அடைவதற்கு வெறும் 30 மீட்டர் தூரத்தில் இருக்கும் போது அவரை நோக்கி பாக் இராணுவம் கண் மூடித்தனமாக சுட ஆரம்பித்தது. அந்த இடத்திலேயே ராஜீவ் பாண்டே மற்றும் 4 இந்திய இராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர்.

ஆனால் மரணத்திலும் ஒரு மிக பெரிய உதவியை ராஜீவ் செய்திருந்தார். கீழே இருந்து மேலே தனக்கு பின் வருபவர்களுக்கு ஏதுவாக ஒரு தாம்பு கயிறை மேலே உள்ள பாறையில் சொருகி விட்டிருந்தார். வரலாற்றையே மாற்றி விட்ட இந்த செயலால் தான் இன்று சியாச்சன் இந்தியாவிடம் உள்ளது.

ராஜீவை சுட்ட வெற்றி களிப்பில் இருந்த பாக் இராணுவத்தினர் அவர் எவ்வாறு மேலே ஏறி வந்தார் என்பதை மமதையில் மறந்து விட்டிருந்தனர். ராஜீவ் விட்டு சென்ற கயிற்றின் ரகசியத்தை அவரது குழுவினர் கீழே வந்து கூறினர். இந்த ஒரு துருப்பு போதுமே!
ஜூன் 23ம் தேது. 'ஆப்ப‌ரேஷ‌ன் ராஜீவ்' என்ற‌ புதிய‌ திட்ட‌த்துட‌ன் (வீர‌ ம‌ர‌ண‌ம் அடைந்த‌ ராஜீவ் பாண்டேயின் நினைவாக‌) மேஜ‌ர் வ‌ரிந்த‌ர் சிங் ஒரு புதிய‌ ப‌டையுட‌ன் கிள‌ம்பினார். ராஜீவின் பாதையிலேயே மிக‌வும் மெதுவாக‌ ஏற‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். ஒவ்வொறு அடி எடுத்து மேலே வைப்ப‌த‌ற்க்கு ஒரு ஜென்ம‌ம் போல‌ இருந்த‌து. மேலே ஏறி செல்வ‌த‌ற்கே மூன்று நாட்க‌ள் ஆன‌து. க‌டும் குளிர், ப‌சி, ம‌ய‌க்க‌ம் என்று எதையும் பொருட்ப‌டுத்த‌வில்லை இந்த‌ இள‌ம் சிங்க‌ங்க‌ள். தாக‌த்துக்கு ப‌னிக்க‌டிக‌ளையே உறிஞ்சிக்க்கொண்ட‌ன‌ர்.

ஜூன் 26, 1987. இந்திய‌ வ‌ர‌லாற்றிலே ஒரு பொன் நாள். ராஜீவ் பாண்டே விட்டு சென்ற‌ க‌யிற்றை இந்திய‌ வீர‌ர்க‌ள் ஒரு வழியாக‌ க‌ண்டு பிடித்து விட்ட‌ன‌ர். பொதுவாக‌ இர‌வு நேர‌த்தில் தான் தாக்குத‌ல்க‌ள் இருக்கும். ஆனால் இர‌வில் க‌டும் குளிரில் துப்பாக்கிக‌ள் செய‌ல்ப‌ட‌வில்லை (jam ஆகிவிட்டன) என்று ராஜீவுட‌ன் சென்ற‌ வீர‌ர்க‌ள் கூறியிருந்த‌ன‌ர். அத‌னால் ம‌திய‌ம் 1.30 ம‌ணிக்கு சுபேதார் பாணா சிங் என்ற‌ வீர‌ருட‌ன் 4 பேர் மெது மெதுவாக‌ ராஜீவ் விட்டு சென்ற‌ க‌யிற்றில் ஏற‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.
மேலே சென்ற பாணா சிங்கின் வருகையை பாக் இராணுவம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. மளமளவென்று கீழிருந்து இந்திய படைகள் கயிற்றில் ஏறி பனி சுவற்றில் ஏறி குதித்தனர். முதலில் சென்ற பாணா சிங் கையிலிருந்த எறி குண்டுகளை ஏவி 5 பாக் இராணுவத்தினரை காலி செய்தார். பிறகு அவர்களிடமிருந்த அதி நவீன துப்பாகிகளை கொண்டே மளமளவென்று சுட ஆரம்பித்தார்.
இதற்குள் கீழே இருந்து மேஜர் வரிந்தர் சிங்கும் அவரது படைகளும் கயிற்றின் மூலமாக மேலே ஏறி பாணா சிங்குடன் சேர்ந்து பாக் படைகளை தவிடுபொடியாகி விட்டனர். 21000 அடி உயரத்தில் நடந்த இந்த போர் வெகு சீக்கிரம் முடிந்து விட்டது. பாக் கொடியை வெட்டி சாய்த்து இந்திய தேசிய கொடியை சியாச்சன் பனிப்பாறையில் பாணா சிங் பறக்க விட்டார். தனது தாய் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராஜீவ் பாண்டேக்கு இந்த வெற்றியை நமது மாவீரர்கள் அர்ப்பணம் செய்தனர்.

தனது உயிரையே கொடுத்து பிறருக்காக கயிறை விட்டு வைத்த ராஜீவ் பாண்டேயின் நினைவாக இந்திய அரசு வீர் சக்ரா அளித்து கெளரவித்தது. வீர சாகசம் புரிந்து எதிரி படைகளிடமிருந்து சியாச்சனை மீட்டெடுத்த சுபேதார் பாணா சிங்கிற்கு பரம் வீர் சக்ரா என்ற மிகப்பெரிய விருதை அளித்தது. அது மட்டுமல்ல, சியாச்சன் மலை உச்சிக்கு பாணா போஸ்ட் (Bana Post) என்றும் பெயரிட்டு கெளரவித்தது.

தன் உயிரை பணயம் வைத்து, ஒரு தாம்பு கயிற்றால் ஒரு வரலாற்று திருப்புமுனையை உருவாக்கிய அந்த இளம் வீரருக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது.

இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த பதக்கமான பரம் வீர் சக்ராவை வழங்கி கெளரவித்த நமது அரசும் மக்களும் அதற்கு பிறகு அவரை மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. தன் உயிரையே பணயம் வைத்து நம் நாட்டை காப்பாற்றிய பாணா சிங்கிற்கு அரசு தரும் சன்மானம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு ரூ. 160 தான். சினிமா நடிகர்களின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து 500 ரூபாய் டிக்கட் எடுத்து தங்கள் 'தலைவரின்' படத்தை பார்க்கும் நமது மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகிறது? மாவீரர் பாணா சிங்கின் பேட்டியை இந்த சுட்டியில் பாருங்கள். இதை படித்து விட்டு நான் உண்மையிலேயே அழுது விட்டேன்.
http://www.bharat-rakshak.com/LAND-FORCES/Army/History/1984/BanaSingh...

1 comment:

வல்லிசிம்ஹன் said...

நமது விரர்களின் பெருமையை இப்படி ஒரு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள,
வாய்ப்புக் கிடைத்ததற்காக இன்னோரு பதிவுக்கு நன்றி சொல்கிறேன்.
தில்லைப் பெருமான்,சிதம்பரம் பதிவில் உங்கள் எழுத்தைப் பார்த்துவிட்டு உங்கள் பதிவிற்கு வந்தேன்.
இந்த வீரம் என்றும் பொங்கட்டும்.
வாழ்த்துகள்.