Wednesday 21 May 2008

மீண்டும் இரயில் பயணங்களில்-II

1998ம் ஆண்டு. செளதி அரேபியாவில் எனக்கு வேலை கிடைத்ததால் பம்பாயில் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டேன். வீட்டு சாமான்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு மீதம் உள்ள சில‌ சாமான்களை இரயிலிலேயே சென்னைக்கு சரக்கு பெட்டியில் கொண்டு செல்ல முடிவு செய்தேன். இது எவ்வளவு முட்டாள்தனமான செயல் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.


என்னுடைய போதாத காலம் முன்பதிவு கிடைக்கவில்லை. யாரோ கூறினார்கள் என்று ஒரு 'ஏஜெண்ட்டை' பிடித்தேன். ஒரு பயணச்சீட்டுக்கு 150 ரூபாய் மேலே கொடுத்தால் உறுதி செய்யப்பட்ட இருக்கை கிடைத்துவிடும் என்று கூறினான். எனக்கோ கட்டாயம் அந்த தேதியில் செல்ல வேண்டிய அவசரம். 'சரி' என்று ஒப்புக்கொண்டு பணத்தை அவனிடம் அழுதேன். அவனோ அடுத்த நாளே 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் உள்ள பயணச்சீட்டை என்னிடம் கொடுத்து விட்டு 'நீங்கள் புறப்படும் நாளன்று இரயில் நிலையத்தில் கண்டிப்பாக இது உறுதி செய்யப்பட்டு விடும்' என்று கூறினான். நான் அதை வேறு நம்பி தொலைத்தேன்.
பம்பாயில் நுழையும் எல்லா சாமான்களுக்கும் 'octroi' என்ற கலால் வரி கட்ட வேண்டியிருந்தது. நானோ புதிய பம்பாயில் இருந்தேன். இரயில் நிலையமோ பம்பாயில் உள்ள வீ.டீ.யில் இருந்தது. சாமான்களை எல்லாம் ஒரு லாரியில் போட்டு விட்டு நான் மட்டும் லாரியின் முன்னே எனது 'ஸ்கூட்டரை' ஓட்டிக்கொண்டு சென்றேன் (அதையும் லாரியில் போட்டால் கலால் அதிகமாக கட்ட வேண்டி வருமே என்றுதான்!). பம்பாயில் நுழைந்த உடனேயே வழக்கம் போல 100 ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டர் பின்னால் வந்த லாரியை 'ஆக்ட்ராய்' காரன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான். பிறகு, ஸ்கூட்டரை லாரியில் ஏற்றி நான் லாரியின் முன் இருக்கையில் வீ.டீ. வரை வந்து சேர்ந்தேன். அதற்கு பிறகுதான் எனது போதாத காலமே ஆரம்பித்தது!


இரயில்வே சட்டப்படி ஸ்கூட்டரை சரக்கு பெட்டியில் ஏற்ற வேண்டுமென்றால் அதிலுள்ள பெட்ரோலை முதலில் முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டுமாம். அதற்கு பிறகுதான் அதை வைக்கோல் வைத்து pack செய்து சரக்கு பெட்டியினுள் ஏற்றுவார்களாம். அடக்கடவுளே! இதை ஏன் யாரும் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை. இஞ்ஜின் உள்ளே உள்ள பெட்ரோலை எப்படி நான் வெளியே எடுப்பேன்? இதை சொன்ன இரயில்வே ஊழியன் அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் கூறிவிட்டான். வேறு என்ன, எல்லாம் பணம் தான்! நான் உள்ளூர அழுதுகொண்டே அவன் கேட்ட பணத்தை கொடுத்து விட்டேன். ஒரு வழியாக‌ சரக்கு பெட்டியில் ஸ்கூட்டரையும் மற்ற வீட்டு சாமான்களையும் ஏற்றி விட்டு நான் எனது இருக்கைக்கு சென்றேன்.


எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. எனது இருக்கை இன்னும் உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. 'ஏஜெண்ட்' என்னை நன்றாக ஏமாற்றி விட்டிருந்தான். என்ன செய்வது, ஊருக்கு போய்தானே ஆக வேண்டும். இரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தன. கூட்டம் பின்னி எடுத்து விட்டது. சரி, வந்தது வரட்டும் என்று நான் இரயிலில் ஏறிக்கொண்டேன்.


இரயில் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு பிறகு பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார்.அவரை சுற்றி ஒரு பட்டாளமே மொய்த்து கொண்டிருந்தது. நானும் முண்டி அடித்துக்கொண்டு விடாப்பிடியாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கெஞ்சு கெஞ்சென்று அவரை விடாமல் துளைத்து எடுத்து விட்டேன். கடைசியில், பயணச்சீட்டு விலையை விட இரண்டு மடங்கு கொடுத்தால் உட்கார மட்டும் இடம் கொடுக்கும்படி செய்து தருவதாக கூறினார். இது RAC இருக்கை என்றும் மிகவும் கஷ்டப்பட்டு என் மேல் பரிதாபப்பட்டு கொடுப்பதாகவும் வேறு கூறினார். என்ன செய்வது? வேறு வழியில்லாமல் பணத்தை அவரிடம் கொடுத்தேன். அவர் ஒரு இருக்கை எண்ணை கொடுத்து அங்கே சென்று உட்காரும்படி கூறினார். அந்த எண்ணுக்கு சென்றால், என்னை போலவே இன்னும் மூன்று பேர் அதிலே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். படுபாவி, அனைவரிடமும் அவன் இது போல வசூல் செய்திருக்கிறான்! Sideல் இருக்கும் இரண்டு இருக்கைகளை மடக்கி நாங்கள் 4 பேரும் உட்கார்ந்து கொண்டே அன்றைய பொழுது முழுவதையும் கழித்தோம்.


வழியில் அரவாணி தொல்லை வேறு இருந்தது. ஒருத்தி என் முன்னே வந்து 10 ரூபாய் கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் இருந்து நகர மாட்டேன் என்று கூறினாள். நானோ, ஏற்கனவே நொந்து போயிருந்தேன்.


கோபத்தில்,"உனக்கு ஒரு பைசா கூட கிடையாது, முதலில் இங்கிருந்து போ" என்று கத்தி விட்டேன். அவ்வளவுதான், இவள் எங்கிருந்தோ ஒரு அரவாணி கூட்டத்தையே கொண்டு வந்து விட்டாள். எனக்கு பயமாகி விட்டது. ஒவ்வொறுத்தியும் WWF வீராங்கனை போல இருந்தாள். ஏதாவது ஏடாகூடமாக ஆவதற்கு முன் அவளிடம் ஒரு பத்து ரூபாய் தாளை கொடுத்தேன். அவளோ, வெற்றிக்களிப்புடன் 'இதை முதலிலேயே கொடுத்திருக்கலாமில்ல' என்று என் மோவாயில் ஒரு இடி இடித்து விட்டு சென்றாள். அப்பாடா, பிழைத்தேன்!


இரவு வந்தது. பகல் முழுவதும் நான்கு பேரும் உட்கார்ந்து கொண்டே பயணம் செய்ததால் உடம்பெல்லாம் வலி. இரவு 11.30 மணிக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஒரு செய்தி தாளை கீழே விரித்து அதற்கு மேலேயே படுத்துக்கொண்டேன். படுத்த உடனே தூக்கம் தான். கண்களை மூடி உறங்கி விட்டால் ஏழை, பணக்காரன், பொறியாளன், பிச்சைக்காரன் எல்லோரும் ஒன்று தானோ! கடவுள் கொடுத்திருக்கும் ஒரு மிக பெரிய வரம் இந்த தூக்கம். இதில் நமது போலி கெளரவங்கள் அனைத்தும் அடி பட்டு போய் விடுகின்றன அல்லவா?


மறு நாள் பகல் முழுவதும் பயணம் செய்து பல மணி நேரம் தாமதத்துக்கு பிறவு ஒரு வழியாக இரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 1.30. உடம்பு முழுவதும் ஒரே வலி. சரி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தோம். இப்போது சரக்கு பெட்டியிலிருந்து ஸ்கூட்டரை வெளியே எடுத்து விட்டால் போதும் என்று நினைத்தேன்.


சக‌ பயணிகள் அனைவரும் சென்று விட்டனர். நான் மட்டும் இரயிலின் கடைசியில் உள்ள சரக்கு பெட்டிக்கு நடந்து சென்றேன். அங்கே பார்த்தால் உள்ளே இருந்த சாமான்களை இரயில்வே ஊழியர்கள் சரமாரியாக பிளாட்பாரத்தில் விசிறி எரிந்து கொண்டிருந்தார்கள் உடையக்கூடிய சாமான்கள் (fragile) எத்தனையோ! ஒருவன் தரதரவென்று என்னுடைய ஸ்கூட்டரை standடுடன் இழுத்துக்கொண்டிருக்கும் போதே ந்ல்ல வேளையாக நான் அங்கு சென்று விட்டேன். என்னை பார்த்தவுடன் திடீரென்று அங்கு இருந்த ஒரு 5 இரயில்வே ஊழியர்களும் மிக மிக பவ்யமாக என்னுடைய ஸ்கூட்டரை மிக மெதுவாக பூ போல எடுத்து பிளாட்பாரத்தில் வைத்தனர். பிறகு ஒருவன், "சார், நீங்கள் முதலில் counterக்கு சென்று ரசீதை வாங்கிக்கொண்டு வாருங்கள்" என்றான். கவுண்ட்டரோ இரயில் நிலையத்தின் வாசலில் இருந்தது. மீண்டும் இரயிலின் கடைசியில் இருந்து பிளாட்பாரம் முழுதும் நடந்து கவுண்ட்டரை தேடிக்கொண்டு வந்தடைந்தால் அங்கே ஆள் இல்லை. ஒரு 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு நான் மீண்டும் லோ லோ வென்று பிளாட்பாரம் முழுவதும் நடந்து சரக்கு பெட்டியை வந்தடைந்தேன்.


என்ன ஆச்சரியம், அந்த 5 ஊழியர்களும் அதே இடத்தில் இன்னும் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள். என்னிடம் முதலில் பேசியவன், "சார், நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க. பணத்தை பாய்ச்சிக்கிட்டே போங்க, எல்லாம் சரியா ஆய்டும்" என்றான். 5 பேருக்கு 700 ரூபாய், கவுண்ட்டரில் ரசீது எழுதுபவனுக்கு 200, trolley கொண்டு வருபவனுக்கு 100 என்று மொத்தம் ஆயிரம் ரூபாயை பிடுங்கிக்கொண்டான். அதற்கு பிறகுதான் வேலையே ஆரம்பித்தது. ஒரு வழியாக நொந்து நூடுல்ஸாகி வீடு வந்து சேர அதிகாலை 4 மணி ஆகிவிட்டது.


'மணல் கயிறு' படத்தில் விசு, 'இனிமேல் வாழைப்படம் சாப்பிடுவியா, சாப்பிடுவியா' என்று தூணில் தலையை முட்டிக்கொள்வாரே, அது போல நானும் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது!


இதில் வேடிக்கை பாருங்கள். பணம் வாங்கிய யாருக்குமே தாம் ஒரு தவறான காரியத்தை செய்கிறோம் என்ற ஒரு உணர்வே இல்லாமல் இருந்தார்கள். மனசாட்சி என்பதெல்லாம் வெறும் பொய்யா? நல்ல வேளை என்னிடம் பணம் இருந்தது. பிழைத்தேன். இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? பணத்தை இழந்தேன், ஆனால், இப்படி ஒரு வித்யாசமான அனுபவத்தை பெற்றேன்.

2 comments:

vijay.s said...

Really superb narration of your experience. This article made the reader to feel the experience.Hats off sir. Your style somewhat resembles sujatha/balakumaran. keep posting. ALL THE BEST.

Expatguru said...

நன்றி விஜய். நீங்கள் கொடுக்கும் ஊக்கம் என்னை உற்சாகப்படுத்தியுள்ளது. எனக்கும் பாலகுமாரனின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.

அடிக்கடி இந்த வலைப்பதிவுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.