Saturday 8 June 2013

சலாம் பம்பாய்-5

வந்தோரை வாழ வைக்கும் ஊர் பம்பாய் என்றால் அது மிகையாகாது. (வந்தது தான் வந்தீர்கள் எனது முந்தைய பம்பாய் பதிவுகளையும் படித்து விட்டு செல்லுங்களேன். இங்கே 'க்ளிக்' செய்யுங்கள் -சலாம் பம்பாய் - 1, 2, 3, 4).

1998ம்  வருடம் திருமணத்துக்கு முன்பு பம்பாய் மாதுங்காவில் இருந்த போது கிடைத்த நண்பர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஜிம்கானாவுக்கு எதிரே உள்ள வீட்டில் ஒரு அறையில் தங்கி இருந்தேன். மாத வாடகை 400 ரூபாய். அந்த அறையின் மூலையில் ஒரு சிறிய தொட்டியும் ஒரு குழாயும் இருந்தது. அதில் தான் குளியல் எல்லாம். மற்ற அறைகளில் ஒரு மராத்தி குடும்பம் இருந்தது. பம்பாயில் பிழைக்க வரும் என்னை போன்றவர்களுக்கு இது போல தங்க இடம் கிடைப்பதே அரிது. ஒரு இரண்டு பில்டிங் தள்ளி எனது நண்பன் சந்தானம் மற்றொரு அறையில் தங்கி இருந்தான். "அறை" என்றால் என்னை போன்ற  தனி ரூம் எல்லாம் இல்லை. எதிர்நீச்சல் படத்தில் நாகேஷ் தங்கி இருப்பாரே அது போல மாடிப்படியின் கீழே உள்ள இடத்தில் (landing) தங்கி இருந்தான். அவனுக்கு மாத வாடகை 60 ரூபாய். அவனுடைய வீட்டுக்காரர் ஒரு தமிழர்.

ஒரு முறை சந்தானம் அவனுடைய வீட்டுக்காரரிடம் "சார் ஒரே மூட்டை பூச்சி தொல்லையாய் இருக்கு. சத்தம் வேற தாங்கல." என்று புகாரை அடுக்கி கொண்டே  போனான். வெறுப்படைந்த வீட்டுக்காரர், "நீ கொடுக்கும் 60 ரூபாய் வாடகைக்கு ஹேமமாலினி வந்து டான்ஸ் ஆடுவாளா? போயா" என்று திட்டி விட்டார்!

மாதுங்காவில் Concerns என்று ஒரு இடம். மாடியில் வாழை இலையில் சாப்பாடு போடுவார்கள். மலை போல சாதத்தை இலையில் போட்டு அதன்  நடுவில் குழி செய்து அதில் நெய்யை ஊற்றி சாம்பாருடன் கலந்து உள்ளே தள்ளும்போது, ஆஹா, சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொறு வியாழன்  அன்றும் வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு கறி என்று அட்டகாசமாக இருக்கும்.  Concerns தான் நண்பர்களுடைய ஆஸ்தான சந்திக்கும் இடம். எங்களை போன்று பம்பாய்க்கு பிழைக்க வரும் bachelorகளுக்கு அது ஒரு சொர்க்க பூமியாகவே இருந்தது. குடும்பத்தினரை விட்டு தனியாக இருக்கும் கஷ்டத்தை அனுபவித்தால் தான் புரியும். அங்கு கிடைத்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைவரும் மனம் விட்டு பேசிக்கொள்வதில் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும்.

ஒரு முறை Concernsல்  ஆறு ரூபாயிலிருந்து எட்டு ரூபாயாக சாப்பாட்டு விலையை  திடீரென்று உயர்த்தி விட்டார்கள். அவர்களிடம் போய் கேட்டதற்கு "நாங்கள் அப்படி தான் உயர்த்துவோம். சாப்பாடு வேண்டும் என்றால் 8 ரூபாய் கொடுத்து சாப்பிடு இல்லையென்றால் இடத்தை காலி பண்ணு" என்று கத்திவிட்டார்கள். சுதாகர் என்ற நண்பனுக்கு இது ஒரு தன்மான பிரச்னையாகி விட்டது. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை "டேய், இவனை சும்மா விடக்கூடாது டா, ஒரு நல்ல பாடம் புகட்டணும்" என்று கறுவினான்.

மறுநாள் மாலை மாடிப்படி வாசலை மறித்து கொண்டு வருவோரை எல்லாம் திரும்பி அனுப்பி கொண்டிருந்தான். "இங்கே சாப்பிடாதீர்கள் விலை ஏற்றி விட்டான்" என்று கத்திக்கொண்டே எல்லோரையும் திரும்ப போக செய்தான். Concernsன் சொந்தக்காரர், யாருமே சாப்பிட வரவில்லையே, என்ன விஷயம் என்று விசாரிக்க கீழே இறங்கி வந்து பார்த்தார். அங்கு திரண்டிருந்த பெரிய கூட்டத்தை இவன் ஒருவன் மட்டும் திரும்ப அனுப்பி கொண்டிருந்ததை பார்த்து அவருக்கு மயக்கம் வராத குறைதான். "தம்பி விலைவாசி எல்லாம் ஏறி விட்டது. 6 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு எனக்கு கட்டுபடி ஆகவில்லை" என்று கூறினார். நாங்கள் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய  ஆரம்பித்தது. அவர் கையை பிசைய ஆரம்பித்த உடன் எங்களுக்கே பாவமாகி விட்டது. "விடுடா பாவம், வியாபாரத்தை கெடுக்காதே" என்று நாங்கள் சுதாகரை இழுத்து கொண்டு வெளியே  சென்றோம். "இதை இவர் நேற்றே என்னை விரட்டாமல் கூறி இருக்கலாமே" என்றான். அன்று ஒரு நாள் மட்டும் Concernsக்கு சரியான நஷ்டம். இதுவும் ஒரு அனுபவம்!

சில நாட்களுக்கு பிறகு பார்வதி நிவாஸில் இருந்து மாதுங்கவின் அருகில் உள்ள ஸிஜிஎஸ் காலனிக்கு அறையை மாற்றி விட்டேன்.  நான் ஒருவனே 400 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக இருவர் ஒரு அறையில் தங்கி இருந்தால் ஆளுக்கு 250 ரூபாய் கொடுத்தாலும் லாபம் தானே. 2000 ரூபாய் சம்பளத்தில் இருந்த எனக்கு ஒவ்வொறு ரூபாயின் சேமிப்பும்  மிகவும் முக்கியமாக இருந்தது. சுப்ரமணியன் என்ற நண்பனுடன் நான் அறையை பகிர்ந்து கொண்டேன். அவன் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடன் அடித்த கூத்துக்கு அளவே இல்லை.

மாதுங்கா இரயில் நிலையத்தை விட்டு வெளியெ வந்தால் உடனேயே இடது பக்கத்தில் உள்ள கட்டிடத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். அதற்கு நாங்கள் வைத்த பெயர் 'பெரிய உடுப்பி'. அளவு சாப்பாடு தான் கொடுப்பார்கள் ஆனால் பிரமாதமாக இருக்கும். சிறிது தூரம் நடந்து வலது பக்கம் திரும்பினால் மற்றொரு உடுப்பி ஹோட்டல் இருக்கும். இது 'சின்ன உடுப்பி'. உடம்பு சரி இல்லை என்றால் இங்கு வந்து மிளகு ரசம் சாதம் சாப்பிடுவோம். பெரிய உடுப்பியில் அளவு சாப்பாடு 8 ரூபாய். Full Meals 16 ரூபாய். Full Meals வாங்கினால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சனிக்கிழமை இரவு சீக்கிரமே சாப்பிட்டு விடுவோம் அதுவும் இரண்டு இட்லி அல்லது போண்டா அவ்வளவு தான். மறுநாள் காலை ஒரு டீ குடித்து விட்டு  வேறு எதுவுமே  சாப்பிட மாட்டோம். கபகப என்று பயங்கரமாக பசிக்கும். ஒரு 12 மணி வாக்கில் சிஜி.எஸ் காலனியில் இருந்து நண்பர்கள் கூட்டத்துடன் பெரிய உடுப்பிக்கு நடந்து வந்து Full Meals ஒரு கட்டு கட்டுவோம் பாருங்கள். அவனவன் 10 பூரி, 5 அப்பளம் என்று சகட்டு மேனிக்கு உள்ளே  தள்ளுவான். உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு அல்லவா? அதனால் திரும்பி போகும் போது Share taxi எடுத்து கொண்டு அறைக்கு சென்று செம தூக்கம் ஒன்று போடுவோம். எல்லாம் ஒரு ஜாலி தான்.

ஒரு முறை மாதுங்கா கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் போட்டார்கள். நானும் சுப்ரமணியனும் படம் பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றால் House Full போர்டு போட்டு விட்டார்கள். எங்களுக்கு ஒரே ஏமாற்றம். சுப்பு விடுவதாக இல்லை. "கொஞ்சம் இரு வருகிறேன்" என்று எங்கோ சென்றான். சரி, blackல் வாங்க போகிறான் போல இருக்கிறது என்று நினைத்து கொண்டேன். அரோரா என்பது ஒரு மட்டமான தியேட்டர். இருக்கைகள் உடைந்து நாற்றம் எடுக்கும். ஆனால் தமிழ் படங்களை எப்போதும் போடுவார்கள். ஏண்டா இங்கு வந்து மாட்டிக்கொண்டோம் என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே சுப்பு வந்தான். ஆனால் கைகளில் டிக்கட் இல்லை. கூட தடி மாடு மாதிரி வேரு ஒருவான் வந்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையை இழுத்து கொண்டு, "வா, எதுவும் பேசாதே" என்று அழைத்து சென்றான். கூட வந்தவன் டிக்கட் வாங்குபவனிடம் எதோ காதில் கிசுகிசுத்தவுடன் எங்களிடம் டிக்கட் எதுவும் வாங்காமல் "K வரிசையில் 15, 16 ஆகிய இருக்கைகளில் போய் உட்காருங்கள்" என்றான். உள்ளே சென்றால் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கே மற்றும் அதன் பின்னே இருந்த எல் வரிசைகளில் ஒரு ஆள் கூட இல்லை. மற்ற அனைத்து வரிசைகளிலும் சரியான கூட்டம்.

படம் ஆரம்பிக்க சில நிமிடங்கள் இருந்த போது விளம்பரங்களை போட்டார்கள். "ஆரோக்ய வாழ்வினையை காப்பது லைப்பாய்......." என்று திரையில் பாடல் வந்தவுடன் விளக்கை அணைத்து விட்டார்கள். திடீரென்று ஒரு 20 அல்லது 25 பெண்கள் திபுதிபுவென்று உள்ளெ நுழைந்து காலியாக இருந்த இந்த இரண்டு வரிசைகலிலும் உட்கார்ந்து கொண்டார்கள். நானும் சுப்ரமணியனும் நடுவில் இருந்தோம் இரண்டு பக்கத்திலும் மற்றும் பின்புறம் உள்ள வரிசை  முழுவதிலும் அவர்கள் உட்கார்ந்திருந்து கொண்டார்கள். இருட்டியிருந்ததால் சரியாக கவனிக்க முடியவில்லை. நானும் எதோ  block booking செய்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

படம் ஆரம்பித்தது. விசில் சத்தம் விண்ணை பிளந்தது. எம்.ஜிஆர் படத்தில் விசில் சத்தம் கேட்பது அதிசயம் இல்லை ஆனால் இந்த முறை விசில் அடித்தது எனக்கு அருகில் இருந்தவள் !  முதல் காட்சி ஆரம்பித்த உடனேயே வாயில் வெற்றிலையை குதுப்பி கைகளை பட் பட் என்று பலமாக அடித்தாள். நான் அதிர்ச்சியில் அவளை கூர்ந்து பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது அவள் ஒரு அரவாணி என்று. 

நான் சுதாரித்து கொள்வதற்குள் எனது பின் இருக்கையில் இருந்தவள் தனது இரண்டு கால்களையும் தூக்கி முன்னாள் உட்கார்ந்திருக்கும் எனது இருக்கையில் தலையின் இரு புறமும் படீரென்று வைத்தாள். நான் திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் அவளும் ஒரு அரவாணி தான். இதற்குள் எனது நண்பன் அருகில் இருந்தவள் கரகரப்பான ஆண் குரலில் எதோ அருகில் இருந்தவளிடம் கூறினாள் பார்த்தால் அவளும் ஒரு அரவாணி. அது மட்டும் அல்ல. காலியாக இருந்த அந்த இரண்டு வரிசைகள் முழுவதும் இவர்களே! 

நான் சுப்ரமணியனின் கைகளை பற்றி இழுத்து கொண்டு அவசரம் அவசரமாக வெளியே ஓடினேன். பின் பக்கம் அமர்ந்திருந்த அத்தனை அலிகளும் எங்களை சிறப்பான சென்னை செந்தமிழில் வசைமாரி பொழிந்தார்கள். கதவில் நின்று கொண்டிருந்த அந்த டிக்கட் செக்கரை நான் பிடித்து கன்னா பின்னாவென்று கத்தினேன். அவன் அதற்கு நிதானமாக "இந்த படத்தின் டிக்கட் எல்லாமே விற்று தீர்ந்து விட்டன நாங்கள் எப்போதுமே இந்த இரண்டு வரிசைகளை காலியாக வைத்திருப்போம். இதில் அரவாணிகள் எப்போது வந்தாலும் காசு வாங்காமல் உள்ளே  வந்து படம் பார்க்க அனுமதிப்போம் அப்படி நாங்கள் அனுமதிக்கவில்லை என்றால் அவர்கள் மற்ற வரிசைகளில் உட்கார்ந்து கொண்டு கலாட்டா செய்வார்கள். அதனால் இவர்களுக்காக இந்த இரண்டு வரிசைகளை கொடுத்து விட்டால் பிரச்னை தீர்ந்து விடும் அல்லவா?" என்றான். அடப்பாவி, அதனால் தான் இந்த இரண்டு வரிசைகளும் காலியாக இருந்ததா? 

அன்று எடுத்த ஓட்டம் தான். அதற்கு பிறகு பம்பாயில் சினிமா பார்க்கும் ஆசையே போய் விட்டது!

கால சக்கரத்தின் சுழலில் ஒவ்வொறு நண்பனும் ஒரு திசையாக பிரிந்து விட்டோம். சுப்பிரமணியன் மஸ்கட் சென்று விட்டான் இரண்டு முறை கடிதம் எழுதினான் அதற்கு பிறகு நின்று விட்டது. இதே போல மற்றவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் எங்காவது இவர்களில் யாரையாவது சந்திப்பேனா என்று தெரியவில்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். காற்றில் திடீரென்று மிதந்து வரும் மல்லிகை மணம் போல எங்கிருந்தோ வந்தோம், நண்பர்கள் ஆனோம், எங்கோ பிரிந்து சென்று விட்டோம். ஆனால் அந்த நட்பின் நினைவுகள் மட்டும் எப்போதும் பசுமையாக இருக்கிறது. 


3 comments:

Temple Jersey said...

Madhunga Udupi hotel..is it still there?

Thanks for sharing the nice experince

Temple Jersey said...

Thanks for sharing nice experience.
Matunga Udupi - still there?

Expatguru said...

Honestly, no idea as I left Bombay in 1998. Thanks for visiting my blog.