Friday 8 August 2008

மறக்க முடியுமா?

மிகவும் காலம் தாழ்ந்து செளந்தரராஜனுக்கும் சுசீலாவுக்கும் கெளரவம் கிடைத்திருக்கிறது. சுசீலாவின் "என் உயிர் தோழி கேளொரு சேதி", "கண்ணுக்கு குலமேது", "சொன்னது நீ தானா", "நெஞ்சம் மறப்பதில்லை" போன்ற பாடல்களை யார்தான் மறக்க முடியும்?

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" என்ற பாடலில் முதலில் மூச்சு வாங்குவார் இல்லையா? அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்டூடியோவை இரு முறை சுற்றி ஓடி வந்தாராம் டீ.எம்.எஸ். தொழிலில் எவ்வளவு ஈடுபாடு பாருங்கள்! "சட்டி சுட்டதடா" என்ற பாடலை அவரை விட்டால் வேறு யாரால் பாட முடியும்? "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு" என்ற பாடல் படமாக்கப்பட்ட போது அதன் இயக்குனர் அழுது விட்டாராம். "கேட்டதும் கொடுப்பவனே" என்ற பாடலில் கடைசியில் "கிருஷ்ணா, கிருஷ்ணா" என்று உருகுவாரே, அந்த குரலில் லயிக்காதவர்களே இருக்க முடியாது.

"யார் அந்த நிலவு, ஏன் இந்த கனவு", "பொன்னை விரும்பும் பூமியிலே" போன்ற பாடல்கள் ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை? "மன்மத ராசா", "ஓ போடு" என்று ஆரம்பித்து "மொழ மொழனு யம்மா யம்மா" போன்ற குப்பைகளை தானே கேட்க முடிகிறது!

செளந்தரராஜன் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "எனது பாடல்களால் சிவாஜியும் எம்.ஜி.ஆரும் பேரும் புகழும் பெற்றார்கள். ஆனால் எனக்கு அதில் ஒரு லாபமும் இல்லை. என்னை உபயோகித்து கொண்டார்கள்" என்று மிகவும் மன வருத்தத்துடன் கூறினார். ஒரு மாமேதை உயிருடன் இருக்கும் போதே அவரை மனம் குளிர கெளரவித்து விட வேண்டும். அவர் காலமாகிவிட்ட பிறகு ஊருக்கு ஊர் சிலை வைத்தாலும் பிரயோஜனம் இல்லை.

1 comment:

Anonymous said...

அருமையான பாடல்களின் நினைவுகளை உங்கள் பதிவு அழைத்து சென்று விட்டது. நன்றி.