Saturday 6 April 2013

தலைப்பு செய்திகளும் மொழி பெயர்ப்புகளும்

"அலுவலகத்தில் படு பயங்கரமான வேலை" என்று சொல்லி கொள்ள வேண்டும். அப்போது தான் உலகம் நம்மை மதிக்கும். எல்லோரும் கூறும் இந்த பொய்யை நானும் கூறுவது உண்டு. (அவ்வப்போது வேலையும் செய்வது உண்டு  - சொன்னால் நம்புங்கள்). அலுவலகத்துக்கு வந்த பின் முதல் வேலையே  'மாலை மலரை' காலையிலேயே படிப்பது தான். வெறும் தலைப்பு செய்திகளை ஒரு பத்து நிமிடம் புரட்டினால் பிறகு உண்மையாகவே வேலையில் ஆழ்ந்து விடுவேன். பொதுவாக தலைப்பு செய்திகளை பார்த்தாலேயே அதன் சாராம்சத்தில் உள்ளே இருக்கும் குப்பை தெரிந்து விடுவதால் மேற்கொண்டு நான் செய்தியை படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

வழக்கம் போல இன்றும் தலைப்பு செய்திகளை பார்க்கும் போது ஒரு செய்தி கண்களில் பட்டது. "கம்பத்தில் கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை" என்பது தான் அந்த செய்தி. நகை கொள்ளை என்று எழுதி இருந்தால் அந்த செய்தி அவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்காது. நான் தான் தலைப்பு செய்தியை மட்டும் பார்ப்பவன் ஆயிற்றே! அது என்ன கம்பத்தில் கோலம் போட்ட பெண்? ஒரு பெண் எப்படி கம்பத்தில் கோலம் போட முடியும்? ஒரு வேளை அந்த பெண்ணுக்கு மரை கழன்று விட்டதா? கம்பத்தில் சிறுவர்கள் கிறுக்கத்தானே செய்வார்கள்? கோலம் போட போயும் போயும் கம்பம் தானா கிடைத்தது? அப்படி கோலம் போடுபவளின் நகையை திருடன் எப்படி பறித்தான்?

இப்படி எல்லாம் என் மனதில் எண்ண அலைகள் தோன்றியவுடன் என்றைக்கும் இல்லாத திருநாளாக அந்த செய்தியின் விபரத்தை படிக்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகு தான் உண்மை விளங்கியது. கம்பம் என்ற ஊரில் ஒரு பெண் கோலம் போட்டு கொண்டிருந்தாள். அவளின் நகையை தான் திருடன் பறித்தானாம். நான் தான் வேறு விதமாக எண்ணி விட்டேன். ஹி, ஹி!

http://www.maalaimalar.com/2013/04/05114028/Cumbam-near-woman-attack-jewel.html


இது போன்ற பல தலைப்பு செய்திகளில் நான் ஏமாந்திருக்கிறேன். சில தலைப்பு செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யும் போது பயங்கர நகைச்சுவையாக இருக்கும். அதே போல, சில செய்திகள் நாட்டுக்கு 'மிக உபயோகமானவையாக' இருக்கும். உதாரணத்துக்கு, நான் கல்லூரியில் படிக்கும் போது தினத்தந்தியில் முதல் பக்கத்தில் வந்த தலைப்பு செய்தியை மறக்கவே முடியாது. அது என்னவென்றால்,

"பிரசவ வலி!! பாகியராஜ் மனைவி பூர்ணிமாவுக்கு!!"

சத்தியமாக சொல்கிறேன், உலகின் வேறு எந்த செய்தித்தாளிலும் வராத தலைப்பு செய்தி இது. அதுவும் முதல் பக்கத்தில். செய்தியை சற்று மேலும் படித்தால் அதை விட சுவாரசியமாக இருந்தது.

"நடிகை பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா ஜெயராமன் கர்பமாக இருந்தார் என்பது தெரிந்ததே (!!)".

 இதற்கு அடியில் சிறியதாக குட்டி தலைப்புகள்.

"பிரசவ வலி". 

இன்று காலை அவருக்கு பிரசவ வலி எடுத்தது. 

"ஆஸ்பத்திரியில் அனுமதி"

பிரசவ வலி எடுத்தவுடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

"ஆணா பெண்ணா?"

பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதில் அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர்"

இது போன்ற செய்திகளை கேவலம் என்று கூறுவதா சுவாரசியம் என்று கூறுவதா அல்லது நமது தரம் இவ்வளவு தான் என்பதா, எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பக்கத்தில் 'தினத்தந்தி' என்று கொட்டை கொட்டையாக  எழுத்து இருக்கும் அல்லவா, அதன் மேல், "தினத்தந்தி வெளி நாடுகளிலும் பிரபலம் பெற்றது" என்று எழுதியிருந்தார்கள். எதற்கு என்று தான் தெரியவில்லை.

தமிழ் பத்திரிகைகள் தான் இது போல உள்ளன என்று இல்லை. தொலைக்காட்சியிலும் இது போன்ற முத்துக்களை நான் பார்த்திருக்கிறேன் . இந்திரா காந்தி அவசர சட்டம் கொண்டு வந்திருந்த சமயம். எங்கு பார்த்தாலும் அரசை புகழ்ந்து வாசகங்கள். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடைவெளி வெண்டும் என்று குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரம் செய்வதற்காக ஹிந்தியில் ஒரு வாசகத்தை தொலைக்காட்சியில் முதலில் காண்பித்தார்கள். அந்த வாசகம் என்னவென்றால்,


अगला बच्चा कब्?
पॆहला स्कूल् जायॆ तब्

"அகலா பச்சா கப், பெஹலா ஸ்கூல் ஜாயே தப்|"

இது தான் அந்த வாசகம்.

தமிழ் நாட்டில் தான் மூன்று தலைமுறைகளாக ஹிந்தியின் வாசனையே வராமல் நமது அரசியல்வாதிகள் தடுத்து விட்டனரே. அதனால்,
'இந்தி அரக்கியை' தெரியாத மகா ஜனங்களுக்கு இதன் மொழி பெயர்ப்பு என்னவென்றால்,

"அடுத்த குழந்தை எப்போது? முதல் குழ்ந்தை பள்ளிக்கு செல்லட்டும் அப்போது"

இப்படி இருந்திருக்க வேன்டும் மொழி பெயர்ப்பு. தமிழ் நாட்டில் தான் தமிழில் எழுதினாலோ பேசினாலோ தன்மான குறைவாயிற்றே, ஆங்கில புலமையை காட்டி விடவேண்டாமா? தமிழ் புத்தாண்டு வாழ்த்தை கூட ஆங்கிலத்தில் கூறி வாழ்த்திக்கொள்ளும் இனமல்லவா  நாம்!

திரையில் வந்த மொழி பெயர்ப்பு என்ன தெரியுமா?

"Next child when?
First go to school, then"

போகிற போக்கை பார்த்தால் இப்படி கூட தலைப்பு செய்திகள் வரலாம்

"விஸ்வனாதன் ஆனந்த் பம்பரத்தின் மேல் வலது பக்கத்தில்"

புரியவில்லையா?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது வேறு ஒன்றும் இல்லை.

'Viswanathan Anand right on top" என்ற ஆங்கில தலைப்பின் தமிழ் மொழி பெயர்ப்பு தான்.

என்னை நீங்கள் அடிக்க வருவதற்குள் நான் கிளம்புகிறேன்!




1 comment:

Bhuvaneshwari Shankar said...

VERY FUNNY ENJOYED IT...